Saturday, September 23, 2006

தமிழின் மடியில்

தமிழின் மடியில் நன்றே
தலைவைத்துத் தூங்கி
தழைத்த கனவில் வந்து
திளைத்த கவிதையிது


முளைத்த உணர்ச்சி
முகிழ்த்தே வெடித்து
முழுதாய் இன்று
தமிழாய் விரிந்தது


களைத்த இதயம்
கனக்கும் போதினில்
கரும்பாய் இனிக்கும்
கன்னித் தமிழிது


துளைத்த அம்பு
துளிர்த்த வலியில்
துளிரும் பொழுதில்
துலங்கும் மொழியாய்


புளித்த பானம் கொடுக்கும்
போதையில் புதையும் மனிதர்
புரியார் இந்தத் தமிழின் போதை
புனித நதியாய் பாயும் கவிதை


விளித்த கருத்து இன்று
விழைந்ததெந்தன் நெஞ்சில்
விழுந்தேன் நான் தமிழன்னை
விரித்த அமுதச்சுழலில்


அன்புடன்
சக்தி சக்திதாசன்


21.09.2006

No comments: