Sunday, August 27, 2006

காதற்சோலையில் கனவெனும் தென்றல்

காதற் சோலையில் கனவெனும் தென்றல்

கண்களில் ஊஞ்சலாடும்
கனவுகள் பறந்து சென்று
காதற் சோலையிலே
கனிந்த தென்றலானதோ.

சின்னச் சின்ன பூக்களின்
சித்திரமான இதழ்களினால்
செவ்வண்ண இதழ்களை
செந்தாமரை சேர்த்தாயோ .....

அந்தி மஞ்சள் நிறம்
அலங்கரிக்கும் முகம்
வான்வெளி மின்னலது
வனிதையவள் புன்சிரிப்பு ......

மழைத்துளி மண்ணில்
மழையாகி மணக்கும்
இயற்கையதன் செழிப்பு
இளையவளின் வனப்பு ....

கொஞ்சமாய் நாணம்
கோலமிடும் வண்ணம்
கோதையவள் கீதம்
கொலுசுகளின் நாதம் ....

நீயில்லா நேற்று
நிலவில்லா வானம் - உன்
நினைவில்லா நெஞ்சம்
நீரில்லாத் தடாகம்

காதற் சோலையிலே
கனவெனும் தென்றலிலே
கலந்தவொரு சுகந்தமாய்
காற்றினிலே கீதமாய் ....

மங்கையுன் கனவுகள்
மூடிய விழிகளில்..
ஏனோ நெருங்கிய
போதெல்லாம் நீ
வெறும் நினைவுகள்....

அன்புடன்
சக்தி சக்திதாசன்

என்னை மறந்து நான் கொஞ்சநேரம் !...

என்னை மறந்து நான் கொஞ்ச நேரம் !

உள்ளத்தின் ஓசைகள்
நினைவுகளின் வாசமாக
நெஞ்சத்து விம்மல்கள்
நேசத்தின் கோஷமாக
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம் ......

காற்றிலேறி தவழ்ந்து
பச்சிலைகளோடு உரசிக்
காணும் மென்மையான
உணர்வுகளில் அமிழ்ந்து
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம் .....

கரைந்திடும் அந்தக்
கார்முகில் மேகமாக
கலைந்து சென்றே
பொட்டுப் பொட்டென
பொழியும் மழையாகி
கிளப்பும் அந்த
மண்வாசத்தை சுவாசித்துக்
கொண்டே
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம்......

மலையிலே பிரசவித்து
மண்மீது மெதுவாக
மழலைபோல தவழ்ந்து
வரும் நதிமீது
விழும் சருகாகி
நயமாக மிதந்தோடி
ஏழை பசிபோக்கும்
வயல்மீது பாயும்
நீராகி மண்ணோடு
கலந்து
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம் ......

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Monday, August 14, 2006

தமிழ்! தமிழ்! தமிழ்!

துள்ளி நான் புவியில்
துளிர்த்த நாள் முதலாய்
எழுந்த மோகமிது

பள்ளி படித்த வேளையிலும்
தமிழ் நினைத்து வேகும்
மொழியின் தாகமிது

தள்ளி வைத்து போகும்படி
தனிவிதி சொன்ன போதும்
தாளாது வளர்ந்த பாசமிது

எள்ளிப் பகைவர் நகைத்தாலும்
என்றும் தணியாத தாகமிது
எந்தன் மொழிமீது கொண்ட மோகமது

முள்ளி ல்கட்டியெனை வதைத்தாலும்
முற்றத்தில் பணத்தை யிறைத்தாலும்
முடியாது யாராலும் மூடிவிட இத்தீயை

கிள்ளி பார்க்கும் உணர்வல்ல
உதிரத்தில் உறைந்த நிறமிது
உயிரோடு கலந்த தமிழிது

கள்ளி யவள் மீது கொண்ட
காதல் சொல்லிக் கவிபாடும் போதும்
நல்ல தமிழ் வந்து மோதும்

புள்ளி போல நான் மறைந்து
தொலைதூரம் போனாலும்
தமிழ் மெல்லினக் குற்றாவேன்

சொல்லி நான் முடிக்கும் வேளை
தமிழ் அன்னை அடிபணிந்து
தமிழ் தமிழ் தமிழெனச் சுவாசிப்பேன்


அன்புடன்
சக்தி சக்திதாசன்

நெஞ்சம் பொறுக்குதில்லையே !

தாய்மண்ணில் விளைந்த
தமிழ்த் தளிர்களே !
தீந்தமிழின் வருங்காலத்தலைவர்களே !
தமிழராய் ஈழத்தில்
தவழ்ந்தது அன்றித்
தவறென்ன செய்தீர் ?

ஜயகோ !
பாவிகள் இன்று

பறித்தனரே பரிதாபமாய் எம்மிளஞ்சிட்டுக்களின்
பவித்திரமான உயிர்களை ....

தாலாட்டிச் சீராட்டி
தாய், தந்தை கனவுகளைத்
தரணியில் வாழவைக்க
தங்கங்களே நீங்கள்
தாகத்தோடு காத்திருக்க ...

உரிமைகள் இல்லாவிட்டாலும்
உயர்த்துவோம் அறிவை என்று
ஊக்கமாய் அறிவுப்பசியைத் தணிக்க
முனைந்த என் பச்சைக்கிளிகளே....

உங்களையா அழித்தார்கள்
உன்மத்தம் கொண்ட வெறியர்கள் ?
வெடிகுண்டுச் சத்தங்களின் மத்தியிலும்
வெறுமையான வாழ்க்கையின்
வேதனைகளுக்கிடையிலும்
வீரமாக தாய்த்திருமண்னிலே
விளையாடிய எங்கள் செல்வங்களே !

இனத்துவேஷம் கொண்ட
ஈனத்துரோகிகள்
இன்றுமை இப்படி
இல்லையென்றாக்கினரோ ?
இதயம் கொதிக்கின்றதே ....
இரத்தம் வடிகின்றதே .....

தமிழன்னையின் கண்ணீர்
தரையில் ஆறாக ஒடுகின்றது
தளிர்களின் குருதி அம்மண்ணில்
புனலாய்ப் பாய்கின்றது
கலங்காதீர் வாரிசுகளே
உங்களின் கூட்டிலிருந்து
உயிர்ப்பறவைகள் பறந்தன....

அவை சுவாசிக்கும் காற்று
சுதந்திரக் காற்றே....
உங்கள் சமாதிகளில்
உயிர்கொள்ளும் மலர்கள்
உருவாக்கும் தோட்டம் - இனி
சுதந்திர பூமியிலேயே மலரும்
இது நிச்சயம் ....

கண்ணீருடன்
சக்தி சக்திதாசன்

நீயில்லாத நானில்லை

தட்டினால் தானேதீக்குச்சி பற்றும்
உன் பார்வை
தழுவினாலே என்னிதயம்
பற்றிக் கொள்கின்றதே !

வானத்து நிலவைக்
கண்ணுக்கு விருந்தாக்க
பகலுக்கு இரவென்னும்
கறுப்பாடை போர்த்த வேண்டும்
ஆனால் !
என் மனவானில்
தேயாத வெண்ணிலவாய்
பகலென்ன ! இரவென்ன !
பசுந்தளிராய் உன் வதனம்

நீரின்றிப் பயிர் வாடும்
நிலவின்றி இரவு மாயும் - உன்
நினைவின்றி நெஞ்சம் நோகும்
நானென்று ஒன்று இல்லை
நீயில்லாத ஞாலத்திலே ...

அன்புடன்
சக்தி சக்திதாசன்

உள்ளத்தில் ஊஞ்சலாடும் உறவுகள்

உறவுகள் !
விசித்திரமாகப் பிணைக்கும்
வித்தியாசமான
விலங்கு....

இல்லாமல் வாழமுடியாமல்
இருப்பவன் தவிப்பதும்
இதயத்தின் ஆழத்தில்
சொந்தங்களைப் புதைப்பதும்
உறவுகள் கொடுக்கும்
உன்னதத்தின் விளைவுகளே !

திருமணம் எனும் பந்ததத்தில்
திருப்தியான உறவுகள்
திருப்பங்களில் ஒடிவதும்
இதயங்கள் உடைவதும்....

அன்னை தந்தை
அன்பினால் கட்டுண்ட
வேளைகள் ,
வேலியாக உறவுகள்
தாண்டியதும்
வெளியாக புரியாத பொழுதுகள்
புறக்கணித்த உறவுகள் ...

ஒன்றாகப் பிறந்தவர்
ஒருதாயின் உதிரங்கள்
உறவறுக்கும் கத்தியாய்
உதவாத சொத்துக்கள்
பொருளுக்கு முன்னாலே
பொசுங்குமந்த உறவுகள்
பொல்லாத வேளைகள்
பொருந்தாத சொந்தங்கள் ....

கண்களினால் கண்டதும்
காதல் வயப்பட்டதும்
கற்றதந்த உறவுதான்
கட்டிவிடும் உயிர்களை !

கணநேரக் கலத்தலால்
கருத்தரித்த காதலது
கண்ணிமைக்கும் நேரத்துள்
கனவாகக் கலைந்திடும்
அதுகூட உறவுதான்
அதுவும் ஒரு பிணைப்புத்தான் ...

கட்டையிலே உடல்
கனலோடு கலக்குமட்டும்
கலந்திருக்கும் உறவொன்று
கருத்துரைப்பேன் கேளீரே..

நம்மை
நாமறிந்து
நானென்ற
நினைவகற்றி
உண்மைப் பொழுதொன்றில்
உணர்வுகளோடு ஒன்றிவாழுகின்ற
பொழுதொன்றேசாம்பலாக
மாறுமட்டும் கூடவரும்
உறவென்பேன்