Saturday, September 23, 2006

இயற்கையை மறந்த மனிதன்

இதயத்தை விற்று இவர்
இன்பத்தை வாங்குவார்
இயற்கையை அழித்து
இறைமையைப் போற்றுவார்

நாளையை இழக்க
இன்றைச் சிதைக்கும்
இந்த மனிதர் அறிவரோ
இயற்கையின் பெருமையை ?

பசுமை நிறைந்த சோலைகள்
பச்சையாடை தரித்த மரங்கள்
பட்டுக்கம்பளம் போன்ற புற்தரை
பத்துக்கோடிக்கு ஈடாமோ ?

எத்தனை அறிஞர் சொல்லியும்
அத்தனை உண்மையும் மறைத்து
தத்தமது செல்வத்தைப் பெருக்கிட
தன்னலச் சேற்றினுள் புதைந்தனர்

நானிலம் தன்னில் வளமாய்
நன்மைகள் பல பெற்றே
நல்வாழ்க்கையை அமைத்தவர்
நாளையை மறந்தது சோதனையே

தானாய்த் தருவது இயற்கை
என்றே
தேடித் தேடி இருப்ப்தைச் சுரண்டி
தேய்ந்து போகும் இயற்கையை
தொலைக்கும் காலத்தில் நுழைந்தனரே

இருக்கும் செல்வம் அனைத்தையும்
இயற்கையோடு ஒப்பிடுகையில்
இல்லை அதற்கு ஈடு என்று
இவர்களுக்கு புரியவில்லையே

விஞ்ஞானத்தில் கரைகண்டவராம்
விவேகத்தில் முதிர்ந்தவராம்
வளர்ச்சியில் தாமே முதல் உலகாம்
வரட்சி அவர்கள் ஞானத்திலே

அகிலத்தை ஆளும் சக்தியும்
அடக்கும் உலக சக்தியும்
அடைந்த அமேரிக்க தேசமே !
அழிவை உன்னால் அறியமுடியாதா?

மனிதர்களே உரக்கச் சொல்லுவேன்
மனதில் விழிப்புணர்ச்சி கொள்ளுங்கள்
மயக்கம் நீங்கித் தெளியாவிட்டால்
மறைந்து விடும் இவ்வுலகே

அன்புடன்

சக்தி சக்திதாசன்

21.09.2006

No comments: