கவிதைச் சிறகெடுத்து
கற்பனை வானத்திலே
கண்ணிமை திறந்ததும்
காலையில் ஓர்பயணம்
நினைவுப் பாதையிலே
நடந்திடும் உள்ளமதில்
நடமிடும் தமிழாடிடும்
நர்த்தனக் களியாட்டம்
கனவுகள் இனித்திடுமே
மனமது விழித்திடுமே
புனைவுகள் கவிந்திடுமே
நினைவுகள் கனத்திடுமே
உள்ளத்தின் மையத்திலே
உதித்திடும் கருத்துக்கள்
உறுத்திடும் விரல்களை
உருண்டிடும் வரிகளாய் !
விழுந்திடும் வேளையெலாம்
எழுந்திடும் மனமிருந்தால்
கழிந்திடும் பொழுதுகளெல்லாம்
பொழிந்திடும் வெற்றிகளே !
தடைகள் அனைத்தையுமே
படிகளாய்ப் பார்த்திட்டால்
விடைபெறும் சோகங்கள்
அடைவதெல்லாம் ஆனந்தம்
அன்புடை சோதர,சோதரியரே !
அறிவுடன் செயற்பட்டால்
அகிலத்தில் உமைவென்றிட
ஆருண்டு கூறிடுவீர் ?
கைகளை இணைத்திங்கு
காண்பதெல்லாம் மனிதமென்று
ஒன்றெனும் மனம்கொள்வீர்
ஓரினம் ஓர்வழி என்றிடுவீர்
நாளைகளின் நாயகரே !
நம்பிக்கையுடன் எழுவீர்
நானிலச்செழிப்பு உம்கையில்
நெஞ்சிலதைக் கொண்டிடுவீர்
சக்தி சக்திதாசன்