Saturday, September 23, 2006

தெரிந்தும்.. தெரியாமலும்

கண்களில் ஈரம் அவள்
கால்களில் தளர்ச்சி
காலங்கள் கொடுத்த
காயத்தின் சாட்சி....

தெரிந்தும் ...தெரியாமலும்
தெளிவடையா உள்ளம்
தெளித்த ஆசைத்துளிகள்
அதுவே அந்த சோகத்தின்
ஆரம்பம்...
முடிவு ..?

காதலெனும் உணர்வுக்கு
வறுமையின் ஸ்பரிசம்
புரியாது என்றே பாவையவள்
தெரிந்தும்... தெரியாமலும்.....

அன்பு மனதில் பூத்துவிட்டால்
அந்தஸ்து புதருக்குள் மறைந்து விடும்
அறியாமல் மாது மயக்கத்தினால்
தெரிந்தும்... தெரியாமலும்....

ஆடவன் மனதுக்குள் நுழைந்ததும்
அகிலமே தனக்குள்
அடக்கமென நினைத்ததால்
ஆரணங்கு அவள்
அடைக்கலமாய்...
தெரிந்தும்.. தெரியாமலும்.....

சினிமா பார்க்கையிலே பலர்
சிந்தும் கண்ணீர்தனைத் தூய்மையென
சின்னைப்பெண்ணவள் நம்பியதால்
சிலமணி நேரங்களே ......
தெரிந்தும்... தெரியாமலும்......

தெரிந்தும்.... தெரியாமலும்....
தோற்றத்தில் மயங்கி
மனட்சாட்சியை பணத்திடம் அடகுவைத்த
மனிதனிடம் தன்னை
அர்ப்பணித்ததால்
உண்டாகிய கோலத்தை
உலகம் தெரிந்து கொண்டதால்.....

தெரிந்தும்.... தெரியாமலும்
மருந்தைப் பருகிப்பெற்றோர்
மரணத்தைத் தழுவியதால்.....

தெரிந்தோ.... தெரியாமலோ... அவள்
தெருவினிலே வாழ்க்கைப்பயணத்தின்
வரைபடத்தை தொலைத்துவிட்டு
நிற்கையில்....

சமுதாயப் பெரிய மனிதனவன்
சந்தை மாடுபோல் மங்கையின்
சரித்திரத்தை மாற்றிய
மனிதனென்னும் மிருகத்திற்கு
மணவீட்டுச் சடங்கு செய்ய......

மந்தை ஆடுகளைப் போல
மனிதர்கள் எனும் பெயர் கொண்டோர்
மகிழ்ச்சியாய் ஊர்வலம் போகின்றார்...

இந்த உலகிலே..... நாம்....
தெரிந்தும்... தெரியாமலும்....

அன்புடன்
சக்தி சக்திதாசன்

23.09.2006

No comments: