Saturday, September 23, 2006

தமிழின் மடியில்

தமிழின் மடியில் நன்றே
தலைவைத்துத் தூங்கி
தழைத்த கனவில் வந்து
திளைத்த கவிதையிது


முளைத்த உணர்ச்சி
முகிழ்த்தே வெடித்து
முழுதாய் இன்று
தமிழாய் விரிந்தது


களைத்த இதயம்
கனக்கும் போதினில்
கரும்பாய் இனிக்கும்
கன்னித் தமிழிது


துளைத்த அம்பு
துளிர்த்த வலியில்
துளிரும் பொழுதில்
துலங்கும் மொழியாய்


புளித்த பானம் கொடுக்கும்
போதையில் புதையும் மனிதர்
புரியார் இந்தத் தமிழின் போதை
புனித நதியாய் பாயும் கவிதை


விளித்த கருத்து இன்று
விழைந்ததெந்தன் நெஞ்சில்
விழுந்தேன் நான் தமிழன்னை
விரித்த அமுதச்சுழலில்


அன்புடன்
சக்தி சக்திதாசன்


21.09.2006

வண்ணப்பூவே புன்னகை சிந்து

வண்ண வண்ண பூச்சூடி
வந்த எந்தன் மங்கையவள்
வாசம் வீசும் முல்லையாக
வளர்ந்த அந்த அங்கையவள்

மின்னலென்னும் இடைகொண்டு
மிளிர்ந்து வரும் வான்வெள்ளியாய்
மிதந்து வரும் வெண்ணிலவு
மண்ணில் இன்று ஊர்வலமோ ?

சின்ன இதழ் விரித்து இன்று
சிந்துகின்ற புன்னகை கண்டு
சிந்தை நானும் பறிகொடுத்து
சித்தம் இழந்த பித்தனானேன்

எண்ண எண்ணத் தாமரை மலரும்
என்னைத் தன்னுள் மூடிய தோகை
என்று புவியில் நான் பிறந்தாலும்
எந்தன் இதயத் துடிப்பாய் அவளே ...

அன்புடன்
சக்தி சக்திதாசன்

23.09.2006

தெரிந்தும்.. தெரியாமலும்

கண்களில் ஈரம் அவள்
கால்களில் தளர்ச்சி
காலங்கள் கொடுத்த
காயத்தின் சாட்சி....

தெரிந்தும் ...தெரியாமலும்
தெளிவடையா உள்ளம்
தெளித்த ஆசைத்துளிகள்
அதுவே அந்த சோகத்தின்
ஆரம்பம்...
முடிவு ..?

காதலெனும் உணர்வுக்கு
வறுமையின் ஸ்பரிசம்
புரியாது என்றே பாவையவள்
தெரிந்தும்... தெரியாமலும்.....

அன்பு மனதில் பூத்துவிட்டால்
அந்தஸ்து புதருக்குள் மறைந்து விடும்
அறியாமல் மாது மயக்கத்தினால்
தெரிந்தும்... தெரியாமலும்....

ஆடவன் மனதுக்குள் நுழைந்ததும்
அகிலமே தனக்குள்
அடக்கமென நினைத்ததால்
ஆரணங்கு அவள்
அடைக்கலமாய்...
தெரிந்தும்.. தெரியாமலும்.....

சினிமா பார்க்கையிலே பலர்
சிந்தும் கண்ணீர்தனைத் தூய்மையென
சின்னைப்பெண்ணவள் நம்பியதால்
சிலமணி நேரங்களே ......
தெரிந்தும்... தெரியாமலும்......

தெரிந்தும்.... தெரியாமலும்....
தோற்றத்தில் மயங்கி
மனட்சாட்சியை பணத்திடம் அடகுவைத்த
மனிதனிடம் தன்னை
அர்ப்பணித்ததால்
உண்டாகிய கோலத்தை
உலகம் தெரிந்து கொண்டதால்.....

தெரிந்தும்.... தெரியாமலும்
மருந்தைப் பருகிப்பெற்றோர்
மரணத்தைத் தழுவியதால்.....

தெரிந்தோ.... தெரியாமலோ... அவள்
தெருவினிலே வாழ்க்கைப்பயணத்தின்
வரைபடத்தை தொலைத்துவிட்டு
நிற்கையில்....

சமுதாயப் பெரிய மனிதனவன்
சந்தை மாடுபோல் மங்கையின்
சரித்திரத்தை மாற்றிய
மனிதனென்னும் மிருகத்திற்கு
மணவீட்டுச் சடங்கு செய்ய......

மந்தை ஆடுகளைப் போல
மனிதர்கள் எனும் பெயர் கொண்டோர்
மகிழ்ச்சியாய் ஊர்வலம் போகின்றார்...

இந்த உலகிலே..... நாம்....
தெரிந்தும்... தெரியாமலும்....

அன்புடன்
சக்தி சக்திதாசன்

23.09.2006

இயற்கையை மறந்த மனிதன்

இதயத்தை விற்று இவர்
இன்பத்தை வாங்குவார்
இயற்கையை அழித்து
இறைமையைப் போற்றுவார்

நாளையை இழக்க
இன்றைச் சிதைக்கும்
இந்த மனிதர் அறிவரோ
இயற்கையின் பெருமையை ?

பசுமை நிறைந்த சோலைகள்
பச்சையாடை தரித்த மரங்கள்
பட்டுக்கம்பளம் போன்ற புற்தரை
பத்துக்கோடிக்கு ஈடாமோ ?

எத்தனை அறிஞர் சொல்லியும்
அத்தனை உண்மையும் மறைத்து
தத்தமது செல்வத்தைப் பெருக்கிட
தன்னலச் சேற்றினுள் புதைந்தனர்

நானிலம் தன்னில் வளமாய்
நன்மைகள் பல பெற்றே
நல்வாழ்க்கையை அமைத்தவர்
நாளையை மறந்தது சோதனையே

தானாய்த் தருவது இயற்கை
என்றே
தேடித் தேடி இருப்ப்தைச் சுரண்டி
தேய்ந்து போகும் இயற்கையை
தொலைக்கும் காலத்தில் நுழைந்தனரே

இருக்கும் செல்வம் அனைத்தையும்
இயற்கையோடு ஒப்பிடுகையில்
இல்லை அதற்கு ஈடு என்று
இவர்களுக்கு புரியவில்லையே

விஞ்ஞானத்தில் கரைகண்டவராம்
விவேகத்தில் முதிர்ந்தவராம்
வளர்ச்சியில் தாமே முதல் உலகாம்
வரட்சி அவர்கள் ஞானத்திலே

அகிலத்தை ஆளும் சக்தியும்
அடக்கும் உலக சக்தியும்
அடைந்த அமேரிக்க தேசமே !
அழிவை உன்னால் அறியமுடியாதா?

மனிதர்களே உரக்கச் சொல்லுவேன்
மனதில் விழிப்புணர்ச்சி கொள்ளுங்கள்
மயக்கம் நீங்கித் தெளியாவிட்டால்
மறைந்து விடும் இவ்வுலகே

அன்புடன்

சக்தி சக்திதாசன்

21.09.2006

மறக்கவில்லை மூத்த தமிழ் மைந்தனே ..

உன்னை இன்று மட்டும்
நினைக்கவில்லை
பாரதமாதாவின் மடியினில்
தவழ்ந்த
தமிழன்னையின்
மூத்த புதல்வனே !

மறந்தால்தானே நினைப்பதற்கு ....

தமிழ்மணக்கும் பாக்களிலே
தனைக் கலந்து தந்தவனே !
தாய் தந்த மொழியதற்கு
தரம் தந்த தூயவனே !

சொல்லும் தமிழே !
பாரதியுந்தன் செயலும் தமிழாய் !
அமைந்தோனே
செல்வம் தேடும் உலகினிலே
செழிப்பைக் கண்டாய் மொழியினிலே

சிரித்த சமூகத்தைப் பார்த்துச்
சிரித்த தமிழ்ச் சிங்கம் நீ
சீரிய அறிவெனும் கூரியவாளால்
சிந்தையை மறைத்த மடமையை
சிதைத்த செந்தணல் கவிஞன் நீ....

தாயின் கைகளில் விலங்கு கண்டு
தமிழாய்க் கொதித்து எழுந்தே நீ
தளைகள் அறுக்கப் புறப்படுவீர் என
தமிழ்மேல் ஆணையிட்டவன் நீயே

நிஜத்தைக் கலந்து கவிதையுடன்
நிதமும் படைத்தாய் பாவலனே
நீசர் பலரும் அலறி ஓட காவலனே !
நீறுபூத்த நெருப்பாய் தகித்தாய்

அன்றொருநாள் கூடினர் அவர்கள்
ஆகாயத்தில்
அவசரக்கூட்டம்.
தமிழின் மைந்தன் பாக்கள்
அவையினில் நிறைய
வரமே கேட்டனர்
அதனால் தானோ மகாகவியுன்னை
அகவை நாலுபத்தும் நிறையா நிலையில்
ஆண்டவன் ஆணையிட்டே
தன்னுடன் அழைத்தான் சொல்லி விடு

பாரதி என்ற எங்கள் உயிர்மூச்சு
பார் அதிரப் பாடிய செந்தமிழ்ப்புலவன்
பாராண்ட தமிழின் மூத்த மைந்தன்
பணிந்தேன் உன்னை நினைவுநாளில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

17.09.2006

Thursday, September 07, 2006

விடியும் பொழுதே !

விடியும் பொழுதே !
விரைந்து நீயும் வந்து
வளரும் காலையை
வலை போல விரித்திடு

கண்களை மூடியும்
கனவுகள் எட்டா
காரிருள் இரவின்
இருளைக் கலைத்திடு

வானமெங்கும் நீலம் பூசி
வெள்ளை மேகம் பவனியோடு
வையம் தன்னைச் சிலிர்த்து
வருவாய் நீயும் விரைந்திங்கு

காதல் நினைவுகள் தளிர்க்கும்
கனிந்த எழிலாள் வெண்ணிலா
கண்கள் மூடி நாணம் கொண்டு
காலையுன்னில் ஒளிந்து கொண்டாள்

நாளையுலகை ஆளப்போகும்
ம்பிக்கை நட்சத்திரங்களாம்
நமது குழந்தைகள் எழுந்து
நம்பிக்கையுடன் நடக்கும் பொழுது

பாரினைத் தழுவிய இரவு மகள்
பதறுவாள் ஆதவன் தேரினில்
பகல் மங்கை நீ பவனி வருகையில்
புலரும் உலகின் நாள் அப்போது

காலைப்பொழுது உன் வரவுக்காய்
த்திருந்தேன் நான் கண்விழித்தே
காக்க இனியும் வைக்காது நீயும்
காற்றிலேறி வந்து உலகை எழுப்பி விடு

அன்புடன்
சக்தி சக்திதாசன்

வழி கேட்டால் ...

வழி கேட்டால் ?
வார்த்தைகள் தடக்குமே !
வேதனை உறுத்துமே !

நடக்கத் தெரியாத
பாதையில்
நினைக்கத் தெரியாத வேளையில்
முடிக்க முடியாப் பயணங்களை
முயற்சித்த வழிப்போக்கன்

முடவனிடம்
ஒற்றையடிப்
பாதையில் நடக்கும்
வித்தை கேட்பதுண்டோ ?

விழியற்றவனிடம்
வண்ணங்களை
வர்ணிக்கும் வகை கேட்பதோ ?

அன்புடன்
சக்தி

Wednesday, September 06, 2006

வெண்முகிலே ... !

வெண்முகிலே உன்னோடு நான்பேச
வேண்டியின்று காத்திருக்கும் வேளையிலே
வேகமாக நீயும் வானிலோடி ஏகுமிடமறியாமல்
வேதனையில் எனை ஆழ்த்தும் வேளையிது

கண்ணிமைகள் மூடாமல் நினைவுகள் நெஞ்சிலே
கனக்கின்ற பொழுதொன்று என்னுடனே
கதையாக உன்னிடத்தில் சுமையிறக்கி வைத்து
களைப்பாற ஏனோ தவிக்கின்றேன் இப்பொழுது

வண்ணமயில் அழகு கொண்ட மங்கையவள்
வாடகைக்கு இதயத்தில் குடிவந்தாள்
வலிதானெ தந்தாள் பரிசாக இன்றெனக்கு
வஞ்சியென்றால் எனை வஞ்சிப்பதோ ?

எண்ணமெலாம் வர்ணம் தீட்டிக் காட்டியவள்
என் கனவுகளை கறுப்பு வெள்ளையாக்கிவிட்டாள்
ஏக்கமெனும் உணர்வுக்கு ஏந்திழையாள் விதையானாள்
ஏனிந்தக் காதல் எனை தீண்டியது கூறாயோ ?

புண்ணான நெஞ்சமதில் சுமக்கின்ற நினைவுகளே
புதிராக வாழ்வினிலே புதைந்து விட்ட மையலது
பொதுவாக ஒன்று கேட்பேன் வெண்ணிலவே பதிலிறுப்பாய்
பூவை என்பவரின் மறுபெயர் பூநாகம் சரிதானோ ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Friday, September 01, 2006

உனர்வின் துடிப்பில்

உணர்வின் துடிப்பில்

உள்ளத்தில்
உறைந்த காட்சிகளின்
உணர்வுத் துடிப்பில்
விளைந்த கவிதையிது

வேஷங்களின்
மோசங்களைக் கண்டு
வாசங்களைத் துறந்து
பாசங்களை மறந்ததினால்
முளைத்த பாடலிது

தோள்களில் கைகளும்
முதுகினில் கத்தியும்
கொண்டவர்கள்
நட்பெனும் புனிதத்தை
நாசப்படுத்தியதால்
பிறந்த இசையிது

இதுதான் உலகமென்றால்
இவர்தான் மனிதரென்றால்
இனியரு பிறப்பு
இறைவா !
அவசியந்தானா ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்