Sunday, October 14, 2007

காலமகள் மடியில் கனவொன்று கண்டேன்

காலமகள் மடிதனிலே
கண்மூடிக் கொஞ்சம்
களைப்பாறும் போது
கண்டு வந்த கனவதன்
கதை கூறும் நேரம்

அந்தி மஞ்சள் மாலையில்
ஆடிவரும் தென்றலது
ஊஞ்சலாட்டும் மரக்கிளையில்
உட்கார்ந்த கிளியன்று
உருகுகின்ற நிலை கண்டேன்

காரணத்தை நானும் அப்போ
கனிவாக கிளியிடம் கேட்க
கண்நிறைந்த நீரோடு
கலங்கியந்த கிளியதுவும்
கதைபேசத் தொடங்கியதே

நேற்றுவரை நானும் கூட
நேசமிக்க குடும்பத்துடன்
பாசமாக வாழ்ந்திருந்தேன்
மோசமிக்க மனிதர்களின்
நாசமிகு காரியத்தால் .......

விம்மியது கிளி, பொங்கியது கண்ணீர்
சொட்டுகின்ற நீரகற்றி தொடர்ந்தது
இயற்கை தந்த வரமாக நிமிர்ந்ததொரு
இனியதொரு ஆலமரம் ... ஆமாம் எனது
இல்லறமும் அதில் தானே, நல்லறமாகியது

இருப்பதையெல்லாம் தனதாக்கி
இன்னும், இன்னும் வேண்டுமென
இதயத்தை கல்லாக்கிய மனிதன்
இயற்கை கொடுத்த கொடையை
இல்லையென்றாக்கினான் வாழ்வை

பச்சைக்கிளி உனக்கேன் இந்தப்
படுசோகம் வந்தது சொல் கிளியே !
பரமன் படைப்பினில்
படைத்தவை
பாரினில் அனைத்தும் சமனே
பகர்வாய் உன் துயரை ......

உன் இனத்தைச் சேர்ந்தவன் தான்
என் இனத்தை அழித்தான் கேளாய்
ஆலமரம் தன் வீட்டின் முன்னிருந்து
அழகைக் கெடுக்குது என்றே அவன்
அடியோடு அறுத்தான் அம்மரத்தை....

வாழ வழிதேடி வகையறியா வேளையில்
வதிய இடங் கொடுத்து ஆதரித்த
அன்பு ஆலமரம், அதில் தானே
அழகாய் நான் அமைத்த குடும்பம்
அன்பாய் வாழ்ந்திருந்தது

ஏன் மனிதா ? ஏனுங்கள் மனிதருக்கு
அளவற்ற ஆசைகள். இயற்கையின் வளத்தை
அழித்து, அழகு காணும் குறுகிய புத்திகள்
அறியமாட்டீரோ இவைதான் உங்கள்
அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதனை

விழுந்த மரத்தோடு மறைந்த சொந்தங்கள்
வதைக்கும் சோகங்கள் வழியும் நெஞ்சத்தில்
விதைத்த இன்பங்கள் புதைந்தே போயின
இன்றோடு நான் ஊமையாய் மாறினேன்
இனியொரு போதும் மனிதரே உம்மோடு பேசேன்

திடுக்கிட்டு விழித்தேன் ! என்னே பயங்கரம் !
எமைக்காக்கும் இயற்கையை நாமே அழிக்கின்றோம்
எத்தனை காலங்கள் எமையே ஏமாற்றுவோம்
என்னருமை மானிதர்காள் விழித்தெழுங்கள்
எப்போதும் காலமகள் மன்னிக்க மாட்டாள்.

மனமெங்கும் மகனாட

அன்பின் நெஞ்சங்களே எமது மகன் தனது நான்காவது ஆண்டு மருத்துவ பயிற்சிக்காகச் சமீபத்தில் வாஷிங்டன் சென்றுவிட்டான், இம்முறை அவனது பிறந்த தினத்தில்தான் நானும், அவன் அன்னையும் அவனைப் பிரிந்து இருந்த முதலாவது பிறந்ததினம். அப்போது மனதில் எழுந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சந்தர்ப்பம் அளித்தமைக்கு அன்பான வணக்கங்கள்

மனதிலொரு கவிதை
மைந்தனுனைத் தேடி

ஆசை மகனுன்னை
ஆகாயவிமானமது
அழைத்துச் சென்றெமக்கு
அளித்த தனிமை தந்த
அன்புத் தண்டனையால்
பாடும் கவிதையிது

தாலாட்டு உனக்கு
தாய்பாடும் பருவமல்ல
தந்தை மனிதிலின்று
தவழுகின்ற கானமிது

செல்வமகன் நீயும்
சென்றாய் அமேரிக்காவுக்கு
கல்வி வளம் அதனை
கட்டிக் காப்பதற்கு
வாரங்கள் எட்டேதான்
மகனே பிரிந்திருக்கும் காலமிது
பாழும் மனம் அதுவோ
பாவம் அழுகிறது

அன்னை வாயில்
உதிர்க்கும்
வார்த்தையெல்லாம்
அன்புமகன் உந்தன்
ஆசைக் கனவுகளே
உன்னைப்பிரிந்து வாடும்
உள்ளங்கள் இரண்டு
தனிமைக்கூட்டில் நாம்
தவிக்கும் பொழுதுகள்

பிறந்தநாள் வந்தது மகனே - நீ
பிறந்ததுமுதல் இந்நாள்வரை நாம்
பிரிந்து இருந்ததில்லை அறிவாய்
பாவம் அன்னையவள்
பதைத்து இருந்தநிலை
பார்த்து தந்தை இவன்
மறைந்து வருந்தும் கலை

உனைப்பிரிந்த துன்பம் தனை
உனைப்பெற்ற பெற்றோர் நாம்
தாங்கும் வகைசொல்வேன் கேளாய் ...

நாம் பெற்ற செல்வம்
நலமாகப் பயின்று
நானிலத்தில் தலைசிறந்த
நல்லதொரு மருத்துவனாகி
மக்களுக்கு சேவை செய்து
மனிதாபிமானம் மிக்க
மருத்துவன் இவன் என
மண்ணுலகம் போற்ற வேண்டும்

அன்று
அன்னை அவள் மனமும்
தந்தை என் மனமும்
விண்ணுலகம் வரை உயர்ந்து
விம்மிப்புடைத்து நிற்கும்
அந்நாள் வரை எமைக்காக்க
ஆண்டவன்
அருள் வேண்டும்

Tuesday, October 02, 2007

சத்தியம் ஈன்றெடுத்த சரித்திர நாயகன்

சத்தியத்தின் மைந்தனே
சரித்திரத்தின் நாயகனே
சாதனையின் பிறப்பிடமே
சுதந்திரத்தின் இருப்பிடமே

ஆயுதம் எடுக்காமலே நீ
அடக்குமுறையை எதிர்கொண்டாய்
அஹிம்சையின் ஆதாரமே
அமைதியினால் அகிலத்தை
ஆட்கொண்டவனே

அறிவினை வளர்த்துக் கொண்டாய்
அன்னைபூமியை மனதில் கொண்டாய்
ஆஸ்திகளை தூக்கியெறிந்து
என்அண்ணலே துன்பத்தைத் தாங்கிக்கொண்டாய்

பாரதமாதாவின் தவப்புதல்வன்
பாரினில் உரிமையைப்
பாதுகாக்கபணிவுகூட
ஆயுதம் எனக்காட்டியவன்
பணிந்தேன் உந்தன் பாதங்களை

துப்பாக்கியால் பேசியவர்களை
துல்லியமாய் மதித்து நீயும்
துணிந்து உன் தாய்நாட்டின்
தூய்மைதனைக் காத்தவனே

அன்பு, சத்தியம், துணிவு, கருணை
ஆயுதங்களாய்க் கொண்டு
அவனியில் உள்ளோர்க்கெல்லாம்
அண்ணல் காந்தி ஓர் மகாத்மாவானாய்

உந்தன் பாதையை தொடர்ந்தே
உள்ளத்துள் சத்திய சோதனை நடத்தியே
உண்மையான சுதந்திரத்தை நோக்கி
உருளட்டும் எமது பயணம் உலகில்

காந்தி ஜெயந்தி இது
காலத்தில் அழியா மனிதனின்
காவிய வாழ்வினைப் போற்றியே
கருணை நெஞ்சில் கொண்டே வாழ்வோம்

அன்புடன்
சக்தி

என்னைத் தேடும் எனது கவிதை

என்னைத் தேடும் எனது கவிதை

எனக்குள்ளே நானே
உருமாறிப் போனேனோ ?
எனைத் தேடும் கவிதைகள்
என்னோடு மோதும்

சிலகாலம் கண்ணீரில்
சிலகாலம் பன்னீரில்
எதிர்காலம் எந்நீரில்
எனை மூடும் மழைநீரில்

சிந்தித்த பொழுதெல்லாம்
சிறையான நிமிடங்கள்
விடைகாணும் பொழுதினிலே
உடைந்து போன வடிவங்கள்

தத்தளிக்கும் ஆழ்கடலோ
தடுமாறும் புதைசேறோ
விதைத்து விட்ட வினைகள்
விளைச்சல் காணும் வேளையிது

அடிபட்ட மனமெங்கும்
ஆழப்பதிந்த காயங்கள்
ஆறாத வடுக்களெல்லாம்
ஆறிப்போன உணர்ச்சிகளே

திசைமாறிப் பறந்த கிளி
திக்குத்தெரியாத காட்டினிலே
அண்ணாந்து பார்க்கும் வேடனுக்கு
அனைத்தும் ஒரு குறிதானே !

விளக்கமில்லா விசனங்கள்
விளைந்து வரும் நெஞ்சினிலே
எனைத்தேடும் கவிதைகள்
என்னோடு மோதுமம்மா

சக்தி சக்திதாசன்

Thursday, May 03, 2007

நினைவெல்லாம் நிறைந்திருக்கும் நித்தியமே

அன்புடை நெஞ்சங்களே ! என் அன்புத் தந்தையின் தொண்ணூற்ரோராவது அகவையில் (04.05.2007) இன் இதய் அஞ்சலிகளி உங்கள் முன்னால் சமர்ப்பிக்கின்றேன்

நினைவெல்லாம் நிறைந்திருக்கும் நித்தியமே

எந்தையே உன்னை நினைந்து
முந்தைய நினைவுகளில் முக்காடி
சிந்திய கண்ணீர்த்துளிகள் பன்னீராய்
வந்ததுன் பிறந்த நாள் இந்நாளில்

விந்தினுள் சிறுபொறியாய் விதைத்தனை - உலகப்
பந்தினுள் நான் உருள்வதின் சூட்சுமம்
சிந்தையில் துலங்குது இவ்வேளை
மந்தையில் நானொரு அங்கம் தானே

பொந்தினுள் காத்திடும் குஞ்சைப் போல
தந்தது நீயோர் அன்பு வாழ்க்கை
நினைந்து நெஞ்சில் அக்காலம் தனை
வினைந்து மனம் உருகுது இக்காலம் தனில்

புனைந்து கவிகள் பல நான் அவனியில்
தெளிந்து உண்மை அன்பை அறிந்த வேளை
விரைந்து நீயும் விண்ணில் ஏகி எங்கோ
மறைந்து போன இடம் தேடியலைகின்றேன்

களைந்து தீயவினைகளை மனதிலிருந்து
விளைந்த ஞானம் தனில் நான் கண்டது
முடிந்த உன் வாழ்வின் வரலாறு தானே
தொடர்ந்த வழிகள் என்றும் உன் அடிகளே

பொழிந்த தத்துவத் துளிகளில் அன்று
புதைந்த உண்மையை அறிந்திலேன்
தெரிந்த போது அப்பா இன்று நீ
கரைந்து கலந்தனை தென்றலில்

வரைந்த வாழ்வதன் வழிதனில் இன்று
நிறைந்த அகவைகள் தொண்ணூற்றொன்றாய்
பறந்த வருடங்கள் தனில் அழியாதே
மொழிந்த உந்தன் அன்பு வார்த்தைகள்

சரிந்த கோபுரம் நீயென நினைத்து
கறந்த அனுபவப் புதையலை இங்கே
சிறந்த பாடமாய்க் கொண்டே நானும்
நடந்து முடிப்பது வாழ்வை நிச்சயம்

அன்புடன்
சக்தி சக்தி தாசன்

Wednesday, May 02, 2007

நினைவுகளின் நீளத்தில்

என் தந்தையின் 91வது பிறந்தநாளில் அவரின் நினைவாக 04.05.2007

அவனியில் உந்தன் நிழல் பட்டு
அப்பா
அகவைகள் ஒன்பது நூறுகளோடு
அகன்ரது இன்னும் ஒன்றே இன்று

அன்பின் திருவுருவம்
அறிவின் மறுவடிவம்
ஜயன் நீயெனக்கு
அளித்ததோ பெருந் தவமே !

சாந்தத்தின் புதல்வனாய்
சத்தியத்தின் மைந்தனாய்
சாதனைகளின் விளைநிலமாய்
சாகாவரம் பெற்றோனோ - நீ
சரித்திர நாய்கன் தான்

வேதனைகளைப் விதைகளாக்கி
போதனைகளைப் பசளையாக்கி
வாழ்க்கை எனும் வயல்வெளியில்
நியாயங்களை அறுவடை செய்தவனே

காலம் உனன்னை நோக்கி
களமனுப்பிய சூறாவளிகள்
ஒன்றல்ல ! இரண்டல்ல !
ஓய்ந்து நீயும் சாய்ந்து விடவில்லை
ஓயாமல் எரிந்த மெழுகுவர்த்தி நீ

உன் பெருமை தனையறியார்
தம்மைத் தாமே அறியார்
தாம் வந்த பாதையறியார்
பயணங்களின் திசையும் புரியார்

உன் வழியில் வளைவு இல்லை
உன் நெஞ்சில் வஞ்சம் இல்லை
உன் கண்ணில் கலக்கம் இல்லை
உன் வாழ்வில் தோல்வி இல்லை

இந்த உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளின் நீளத்தில்
கனவுகளின் ஆழத்தில்
அப்பா
அஞ்சலிகள் செலுத்தி நானும்
அடிகளைத் தொழுது நின்றேன்

அஞ்சலியுடன்
சக்தி சக்திதாசன்

Monday, October 09, 2006

இதற்கு பெயர்தான் காதலோ ...

தொட்டுவிடத் துடிக்கும் மனது
தொடர்ந்துவர தவிக்கும் கால்கள்
தொற்றிக்கொள்ள ஏங்கும் கரங்கள்
தோணியாக மிதக்கும் எண்ணம் ..

பட்டுவிட நடுங்கும் விரல்கள்
படர்ந்தவுடன் உறையும் மேனி
பார்வையினால் தாக்கும் உணர்வு
பசியையே மறக்கும் இயல்பு

எட்டிவிட ஏங்கித் துடிக்கும்
கிட்டவர ஒதுங்கி நாணும்
ஏக்கத்திலே பொழுது கழியும்
எண்ணத்திலே கவிதை பொங்கும்

தட்டிவிட திரும்பத் தாவும்
தனிமையிலே உள்ளம் வேகும்
தன்னையே வெறுத்து ஒதுக்கும்
தழுவலிலே உணர்ச்சி கலக்கும்


இதுதான் காதலா ......
இதைத்தான் கன்னியவள்
இறுதிவரை காளையுடன்
இன்பமெனப் புரிந்தாளோ ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

நினைவுகளில் ஓர் சங்கீதம்

நிசப்தமான பொழுதினிலே
நீண்டதொரு மாலையிலே
நிம்மதியான ராகங்களோடு - என்
நினைவுகளில் சங்கீதம்

பாதங்களில் கொலுசோடு
பாவடைத் தாவணியில்
பாவையவள் பவனியையே
பார்த்த ஞாபகங்கள்

காதலென்னும் தென்றல்
வாலிபத்தின் சோலையிலே
வாசத்தோடு வீசிய பொழுது
வாடாமல் தூங்குது மனதில்

சிந்திக்கும் வயதல்ல அது
சிந்தையிலே தேனூறும்
சிங்கார வேளையிலே
சித்திரமாய் உறைந்தவள்

ஓடிவிட்ட காலங்கள்
ஓய்ந்து விட்ட வேளையில்
ஒருகண நிகழ்வுகளாய்
ஓவியமாக ஒய்யாரமாய்....

உருண்டோடும் ஜகத்தினில்
உள்ளோர்கள் மனங்களில்
உன்னதப் பொழுதொன்று
உறங்குவது உண்மையே

மூங்கிலின் துகள்களில்
விளையாடும் தென்றலோ
நினைவுகளில் தவழ்ந்திடும்
வாலிபத்து வர்ணங்கள் ?

உருவங்கள் மாறலாம்
உள்ளங்கள் முதிரலாம்
கடந்தகால நினைவுகள்
நிழலாக மறையுமோ ?

ஏதோ ஒரு ஓரத்தில்
எங்கோ ஒரு மூலையில்
இசைக்கும் ராகங்கள்
அவை நினைவின் சங்கீதங்கள்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

Saturday, September 23, 2006

தமிழின் மடியில்

தமிழின் மடியில் நன்றே
தலைவைத்துத் தூங்கி
தழைத்த கனவில் வந்து
திளைத்த கவிதையிது


முளைத்த உணர்ச்சி
முகிழ்த்தே வெடித்து
முழுதாய் இன்று
தமிழாய் விரிந்தது


களைத்த இதயம்
கனக்கும் போதினில்
கரும்பாய் இனிக்கும்
கன்னித் தமிழிது


துளைத்த அம்பு
துளிர்த்த வலியில்
துளிரும் பொழுதில்
துலங்கும் மொழியாய்


புளித்த பானம் கொடுக்கும்
போதையில் புதையும் மனிதர்
புரியார் இந்தத் தமிழின் போதை
புனித நதியாய் பாயும் கவிதை


விளித்த கருத்து இன்று
விழைந்ததெந்தன் நெஞ்சில்
விழுந்தேன் நான் தமிழன்னை
விரித்த அமுதச்சுழலில்


அன்புடன்
சக்தி சக்திதாசன்


21.09.2006

வண்ணப்பூவே புன்னகை சிந்து

வண்ண வண்ண பூச்சூடி
வந்த எந்தன் மங்கையவள்
வாசம் வீசும் முல்லையாக
வளர்ந்த அந்த அங்கையவள்

மின்னலென்னும் இடைகொண்டு
மிளிர்ந்து வரும் வான்வெள்ளியாய்
மிதந்து வரும் வெண்ணிலவு
மண்ணில் இன்று ஊர்வலமோ ?

சின்ன இதழ் விரித்து இன்று
சிந்துகின்ற புன்னகை கண்டு
சிந்தை நானும் பறிகொடுத்து
சித்தம் இழந்த பித்தனானேன்

எண்ண எண்ணத் தாமரை மலரும்
என்னைத் தன்னுள் மூடிய தோகை
என்று புவியில் நான் பிறந்தாலும்
எந்தன் இதயத் துடிப்பாய் அவளே ...

அன்புடன்
சக்தி சக்திதாசன்

23.09.2006

தெரிந்தும்.. தெரியாமலும்

கண்களில் ஈரம் அவள்
கால்களில் தளர்ச்சி
காலங்கள் கொடுத்த
காயத்தின் சாட்சி....

தெரிந்தும் ...தெரியாமலும்
தெளிவடையா உள்ளம்
தெளித்த ஆசைத்துளிகள்
அதுவே அந்த சோகத்தின்
ஆரம்பம்...
முடிவு ..?

காதலெனும் உணர்வுக்கு
வறுமையின் ஸ்பரிசம்
புரியாது என்றே பாவையவள்
தெரிந்தும்... தெரியாமலும்.....

அன்பு மனதில் பூத்துவிட்டால்
அந்தஸ்து புதருக்குள் மறைந்து விடும்
அறியாமல் மாது மயக்கத்தினால்
தெரிந்தும்... தெரியாமலும்....

ஆடவன் மனதுக்குள் நுழைந்ததும்
அகிலமே தனக்குள்
அடக்கமென நினைத்ததால்
ஆரணங்கு அவள்
அடைக்கலமாய்...
தெரிந்தும்.. தெரியாமலும்.....

சினிமா பார்க்கையிலே பலர்
சிந்தும் கண்ணீர்தனைத் தூய்மையென
சின்னைப்பெண்ணவள் நம்பியதால்
சிலமணி நேரங்களே ......
தெரிந்தும்... தெரியாமலும்......

தெரிந்தும்.... தெரியாமலும்....
தோற்றத்தில் மயங்கி
மனட்சாட்சியை பணத்திடம் அடகுவைத்த
மனிதனிடம் தன்னை
அர்ப்பணித்ததால்
உண்டாகிய கோலத்தை
உலகம் தெரிந்து கொண்டதால்.....

தெரிந்தும்.... தெரியாமலும்
மருந்தைப் பருகிப்பெற்றோர்
மரணத்தைத் தழுவியதால்.....

தெரிந்தோ.... தெரியாமலோ... அவள்
தெருவினிலே வாழ்க்கைப்பயணத்தின்
வரைபடத்தை தொலைத்துவிட்டு
நிற்கையில்....

சமுதாயப் பெரிய மனிதனவன்
சந்தை மாடுபோல் மங்கையின்
சரித்திரத்தை மாற்றிய
மனிதனென்னும் மிருகத்திற்கு
மணவீட்டுச் சடங்கு செய்ய......

மந்தை ஆடுகளைப் போல
மனிதர்கள் எனும் பெயர் கொண்டோர்
மகிழ்ச்சியாய் ஊர்வலம் போகின்றார்...

இந்த உலகிலே..... நாம்....
தெரிந்தும்... தெரியாமலும்....

அன்புடன்
சக்தி சக்திதாசன்

23.09.2006

இயற்கையை மறந்த மனிதன்

இதயத்தை விற்று இவர்
இன்பத்தை வாங்குவார்
இயற்கையை அழித்து
இறைமையைப் போற்றுவார்

நாளையை இழக்க
இன்றைச் சிதைக்கும்
இந்த மனிதர் அறிவரோ
இயற்கையின் பெருமையை ?

பசுமை நிறைந்த சோலைகள்
பச்சையாடை தரித்த மரங்கள்
பட்டுக்கம்பளம் போன்ற புற்தரை
பத்துக்கோடிக்கு ஈடாமோ ?

எத்தனை அறிஞர் சொல்லியும்
அத்தனை உண்மையும் மறைத்து
தத்தமது செல்வத்தைப் பெருக்கிட
தன்னலச் சேற்றினுள் புதைந்தனர்

நானிலம் தன்னில் வளமாய்
நன்மைகள் பல பெற்றே
நல்வாழ்க்கையை அமைத்தவர்
நாளையை மறந்தது சோதனையே

தானாய்த் தருவது இயற்கை
என்றே
தேடித் தேடி இருப்ப்தைச் சுரண்டி
தேய்ந்து போகும் இயற்கையை
தொலைக்கும் காலத்தில் நுழைந்தனரே

இருக்கும் செல்வம் அனைத்தையும்
இயற்கையோடு ஒப்பிடுகையில்
இல்லை அதற்கு ஈடு என்று
இவர்களுக்கு புரியவில்லையே

விஞ்ஞானத்தில் கரைகண்டவராம்
விவேகத்தில் முதிர்ந்தவராம்
வளர்ச்சியில் தாமே முதல் உலகாம்
வரட்சி அவர்கள் ஞானத்திலே

அகிலத்தை ஆளும் சக்தியும்
அடக்கும் உலக சக்தியும்
அடைந்த அமேரிக்க தேசமே !
அழிவை உன்னால் அறியமுடியாதா?

மனிதர்களே உரக்கச் சொல்லுவேன்
மனதில் விழிப்புணர்ச்சி கொள்ளுங்கள்
மயக்கம் நீங்கித் தெளியாவிட்டால்
மறைந்து விடும் இவ்வுலகே

அன்புடன்

சக்தி சக்திதாசன்

21.09.2006

மறக்கவில்லை மூத்த தமிழ் மைந்தனே ..

உன்னை இன்று மட்டும்
நினைக்கவில்லை
பாரதமாதாவின் மடியினில்
தவழ்ந்த
தமிழன்னையின்
மூத்த புதல்வனே !

மறந்தால்தானே நினைப்பதற்கு ....

தமிழ்மணக்கும் பாக்களிலே
தனைக் கலந்து தந்தவனே !
தாய் தந்த மொழியதற்கு
தரம் தந்த தூயவனே !

சொல்லும் தமிழே !
பாரதியுந்தன் செயலும் தமிழாய் !
அமைந்தோனே
செல்வம் தேடும் உலகினிலே
செழிப்பைக் கண்டாய் மொழியினிலே

சிரித்த சமூகத்தைப் பார்த்துச்
சிரித்த தமிழ்ச் சிங்கம் நீ
சீரிய அறிவெனும் கூரியவாளால்
சிந்தையை மறைத்த மடமையை
சிதைத்த செந்தணல் கவிஞன் நீ....

தாயின் கைகளில் விலங்கு கண்டு
தமிழாய்க் கொதித்து எழுந்தே நீ
தளைகள் அறுக்கப் புறப்படுவீர் என
தமிழ்மேல் ஆணையிட்டவன் நீயே

நிஜத்தைக் கலந்து கவிதையுடன்
நிதமும் படைத்தாய் பாவலனே
நீசர் பலரும் அலறி ஓட காவலனே !
நீறுபூத்த நெருப்பாய் தகித்தாய்

அன்றொருநாள் கூடினர் அவர்கள்
ஆகாயத்தில்
அவசரக்கூட்டம்.
தமிழின் மைந்தன் பாக்கள்
அவையினில் நிறைய
வரமே கேட்டனர்
அதனால் தானோ மகாகவியுன்னை
அகவை நாலுபத்தும் நிறையா நிலையில்
ஆண்டவன் ஆணையிட்டே
தன்னுடன் அழைத்தான் சொல்லி விடு

பாரதி என்ற எங்கள் உயிர்மூச்சு
பார் அதிரப் பாடிய செந்தமிழ்ப்புலவன்
பாராண்ட தமிழின் மூத்த மைந்தன்
பணிந்தேன் உன்னை நினைவுநாளில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

17.09.2006

Thursday, September 07, 2006

விடியும் பொழுதே !

விடியும் பொழுதே !
விரைந்து நீயும் வந்து
வளரும் காலையை
வலை போல விரித்திடு

கண்களை மூடியும்
கனவுகள் எட்டா
காரிருள் இரவின்
இருளைக் கலைத்திடு

வானமெங்கும் நீலம் பூசி
வெள்ளை மேகம் பவனியோடு
வையம் தன்னைச் சிலிர்த்து
வருவாய் நீயும் விரைந்திங்கு

காதல் நினைவுகள் தளிர்க்கும்
கனிந்த எழிலாள் வெண்ணிலா
கண்கள் மூடி நாணம் கொண்டு
காலையுன்னில் ஒளிந்து கொண்டாள்

நாளையுலகை ஆளப்போகும்
ம்பிக்கை நட்சத்திரங்களாம்
நமது குழந்தைகள் எழுந்து
நம்பிக்கையுடன் நடக்கும் பொழுது

பாரினைத் தழுவிய இரவு மகள்
பதறுவாள் ஆதவன் தேரினில்
பகல் மங்கை நீ பவனி வருகையில்
புலரும் உலகின் நாள் அப்போது

காலைப்பொழுது உன் வரவுக்காய்
த்திருந்தேன் நான் கண்விழித்தே
காக்க இனியும் வைக்காது நீயும்
காற்றிலேறி வந்து உலகை எழுப்பி விடு

அன்புடன்
சக்தி சக்திதாசன்

வழி கேட்டால் ...

வழி கேட்டால் ?
வார்த்தைகள் தடக்குமே !
வேதனை உறுத்துமே !

நடக்கத் தெரியாத
பாதையில்
நினைக்கத் தெரியாத வேளையில்
முடிக்க முடியாப் பயணங்களை
முயற்சித்த வழிப்போக்கன்

முடவனிடம்
ஒற்றையடிப்
பாதையில் நடக்கும்
வித்தை கேட்பதுண்டோ ?

விழியற்றவனிடம்
வண்ணங்களை
வர்ணிக்கும் வகை கேட்பதோ ?

அன்புடன்
சக்தி