Wednesday, September 06, 2006

வெண்முகிலே ... !

வெண்முகிலே உன்னோடு நான்பேச
வேண்டியின்று காத்திருக்கும் வேளையிலே
வேகமாக நீயும் வானிலோடி ஏகுமிடமறியாமல்
வேதனையில் எனை ஆழ்த்தும் வேளையிது

கண்ணிமைகள் மூடாமல் நினைவுகள் நெஞ்சிலே
கனக்கின்ற பொழுதொன்று என்னுடனே
கதையாக உன்னிடத்தில் சுமையிறக்கி வைத்து
களைப்பாற ஏனோ தவிக்கின்றேன் இப்பொழுது

வண்ணமயில் அழகு கொண்ட மங்கையவள்
வாடகைக்கு இதயத்தில் குடிவந்தாள்
வலிதானெ தந்தாள் பரிசாக இன்றெனக்கு
வஞ்சியென்றால் எனை வஞ்சிப்பதோ ?

எண்ணமெலாம் வர்ணம் தீட்டிக் காட்டியவள்
என் கனவுகளை கறுப்பு வெள்ளையாக்கிவிட்டாள்
ஏக்கமெனும் உணர்வுக்கு ஏந்திழையாள் விதையானாள்
ஏனிந்தக் காதல் எனை தீண்டியது கூறாயோ ?

புண்ணான நெஞ்சமதில் சுமக்கின்ற நினைவுகளே
புதிராக வாழ்வினிலே புதைந்து விட்ட மையலது
பொதுவாக ஒன்று கேட்பேன் வெண்ணிலவே பதிலிறுப்பாய்
பூவை என்பவரின் மறுபெயர் பூநாகம் சரிதானோ ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

No comments: