Sunday, July 23, 2023

என்னுள்ளக் காதலியாய் என்னுள்ளே தமிழென்றே !

சிரிக்காதே !
சிவந்த அதரங்களில்
சிந்தும் புன்னகையில்
சித்தம் சிதறுதே !

நடக்காதே !
நெளிந்திடும் இடையது
உடைந்திடும் கொடியென
வருந்திடும் நெஞ்சமே !

வளைக்காதே !
வளைந்திடும் கைகளில்
வளையல்கள் குலுங்கினால்
கிளர்ந்திடும் உணர்வுகள் !

பேசாதே !
வீணையின் நாதமென
பொழிந்திடும் குரலிசை
மயக்கிடும். இதயத்தை

நொறுக்காதே !
பார்வையைக் கனலாக்கி
தீயினைம் கணையாக்கி
உள்ளத்தைப் பொசுக்காதே !

தூங்காதே !
விழிகள் தூங்காதே
கனவெனும் தேரினில்
கன்னிநீ வராவிட்டால் !

பிரியாதே !
உயிரெனைப் பிரியாதே 
உயிராக நீயென்னுள்
உணர்வோடு கலந்திட்டால் !

எழுதாதே !
தமிழென்னும் மொழியில்
உள்ளமெனும் தாளினிலே
காதெலெனும் கவிதையினை

புரியாதே !
எவருக்குமே புரியாதே !
என்னுள்ளக் காதலியாய்
என்னுள்ளே தமிழென்றே !

சக்தி சக்திதாசன்