சித்தத்தின் உணர்வுகளில்
ஏனோ.சத்தமாய்
ஒரு சங்கீதம்
சிந்திக்கத் தெரிந்திருந்தும்
ஏனோ சந்திக்க மறுக்கிறது
உண்மைகளை
மாற்றம் என்பது
உலகில் என்றும்
மனித வாழ்வின் தத்துவம்
ஏற்றம், தேடித்தான்
யாவரும் எதிர்காலம்
நோக்கி நடக்கின்றார்
முகிழ்க்கின்ற லட்சியங்களைச்
சுமந்து முதுகெலும்பை
வளைத்து உழைக்கின்ற
முத்தான தோழர்
பலர் இன்னும்
முழுதாகக் காணவில்லை
முன்னேற்றம்
வித்தாக கொள்கைகள்
பலவற்றை விதைத்திங்கே முளைத்திருக்கும் விதமான
அரசியல் வேஷங்கள்
விளங்காமல் தவிக்கின்றார்
பாவம் விடிவில்லா மனிதர் நடைபாதையில்
பசித்திருக்கும் உயிர்கள்
ஒருவேளை புசித்திருக்க
வழி தெரியா பொழுதில்
வளர்ந்திருக்கும் பொருளாதாரம்
எங்கே? வசதியான
வீட்டில் பதுங்கியதோ ?
நாளைய சமுதாயம்
சம உரிமையோடு
நடைபோட வேண்டும்
என்றால் நாடவேண்டியது
நல்ல பல உள்ளங்கள்
நலம் நிறைந்த மக்கள்
நலன் திட்டங்கள்
போன காலம்
போகட்டும் விட்டிடுவோம்
புதிய யுகம் படைக்க
மக்கள் தளபதிகள்
புகவேண்டும் அரசியல் களத்தில்
புரிய வேண்டும்
புதுமைகள் பல
புரட்சி மிக்க கொள்கைகள்
கொண்டே புரிந்திட வேண்டும்
எம் இளம் நெஞ்சங்கள்
சீரிய அறிவுடனே
தெளிந்த சிந்தை
கொண்டு சிறப்பான
அமைதி முறையில் நீங்கள்
சீரான சமுதாயம்
வளர்த்திட முடியும்
சிந்தியுங்கள் வளரும்
இளம் உள்ளங்களே
நாமெல்லாம் ஒரே குலம்
நமக்கில்லை பிரிவு
வன்முறைகள் வேண்டாமே !
இகத்தில் வளர்த்திடுவோம்
ஒரே அன்பு மதம்
வளர்ந்து வரும்
சந்ததியே விழித்திடுவாய் !
நமக்கும் மேலே ஒரு
சக்தி உண்டென்போம்
நம் அனைவருக்கும் அது பொதுவென்போம்
மற்றவரின் நம்பிக்கைகளை புண்படுத்தாமல்
மகிழ்வாக பூமியிலே
வாழ்ந்திடுவோம்
வாருங்கள் இள நெஞ்சங்களே !
வயோதிபத்தின் வாசலில் நான்
வளமிக்க எதிர்காலம்
உங்கள் கைகளில்
வளர்த்திடுவீர் தாய்மொழியை !
தாய் நாட்டை !
சக்தி சக்திதாசன்