Monday, October 09, 2006

இதற்கு பெயர்தான் காதலோ ...

தொட்டுவிடத் துடிக்கும் மனது
தொடர்ந்துவர தவிக்கும் கால்கள்
தொற்றிக்கொள்ள ஏங்கும் கரங்கள்
தோணியாக மிதக்கும் எண்ணம் ..

பட்டுவிட நடுங்கும் விரல்கள்
படர்ந்தவுடன் உறையும் மேனி
பார்வையினால் தாக்கும் உணர்வு
பசியையே மறக்கும் இயல்பு

எட்டிவிட ஏங்கித் துடிக்கும்
கிட்டவர ஒதுங்கி நாணும்
ஏக்கத்திலே பொழுது கழியும்
எண்ணத்திலே கவிதை பொங்கும்

தட்டிவிட திரும்பத் தாவும்
தனிமையிலே உள்ளம் வேகும்
தன்னையே வெறுத்து ஒதுக்கும்
தழுவலிலே உணர்ச்சி கலக்கும்


இதுதான் காதலா ......
இதைத்தான் கன்னியவள்
இறுதிவரை காளையுடன்
இன்பமெனப் புரிந்தாளோ ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

நினைவுகளில் ஓர் சங்கீதம்

நிசப்தமான பொழுதினிலே
நீண்டதொரு மாலையிலே
நிம்மதியான ராகங்களோடு - என்
நினைவுகளில் சங்கீதம்

பாதங்களில் கொலுசோடு
பாவடைத் தாவணியில்
பாவையவள் பவனியையே
பார்த்த ஞாபகங்கள்

காதலென்னும் தென்றல்
வாலிபத்தின் சோலையிலே
வாசத்தோடு வீசிய பொழுது
வாடாமல் தூங்குது மனதில்

சிந்திக்கும் வயதல்ல அது
சிந்தையிலே தேனூறும்
சிங்கார வேளையிலே
சித்திரமாய் உறைந்தவள்

ஓடிவிட்ட காலங்கள்
ஓய்ந்து விட்ட வேளையில்
ஒருகண நிகழ்வுகளாய்
ஓவியமாக ஒய்யாரமாய்....

உருண்டோடும் ஜகத்தினில்
உள்ளோர்கள் மனங்களில்
உன்னதப் பொழுதொன்று
உறங்குவது உண்மையே

மூங்கிலின் துகள்களில்
விளையாடும் தென்றலோ
நினைவுகளில் தவழ்ந்திடும்
வாலிபத்து வர்ணங்கள் ?

உருவங்கள் மாறலாம்
உள்ளங்கள் முதிரலாம்
கடந்தகால நினைவுகள்
நிழலாக மறையுமோ ?

ஏதோ ஒரு ஓரத்தில்
எங்கோ ஒரு மூலையில்
இசைக்கும் ராகங்கள்
அவை நினைவின் சங்கீதங்கள்

அன்புடன்
சக்தி சக்திதாசன்