Saturday, January 06, 2024

என்னையெனக்கு அறிவித்ததோ ?

சிந்திப்பின்
விளைவாக உள்ளத்தில்
கருத்தரிக்கும் எண்ணங்கள்
காகிதத்தின் வழியாக
கவிதையென வழிந்தோட . . .

சந்திப்பின்
கணங்களின் கனமது
உள்ளத்தில் சுமையாக
உருத்திக் கொண்டே
உருண்டோடும் வேளையில் . . .

முந்தையொரு
காலத்தில் வடித்த
கோலங்களின் வர்ணங்கள்
கரைந்தோடி விழுமொரு
அகங்கோலச் சித்திரமாய் . . .

விந்தையிந்த
உலகத்தின் கோடியில்
எந்தையீந்த விந்தொன்று
எந்தாயில் உருவாகி
நானாக முகிழ்த்த்தொன்று . . .

சந்தையிந்த
சமுதாயக் கூடத்தில்
யுத்தமிகு உலகொன்றில்
சத்தமில்லாக் கூட்டமொன்று
மொத்தமாக மடியும் போதில் . . .

பந்தொன்று
சுவற்றில் மோதி
திரும்பித் தாக்கும்வகை
செய்யும்வினை விளைவுகள்
சுற்றியெமை பின்னுகையில் . . .

பிந்தியிந்த
வாழ்வின் உண்மைகள்
சொல்லித்தரும் பாடமெலாம்
கல்லில் எழுதிவிட்டதொரு
அனுபவப் பாடமாய் . . .

வெந்ததொரு
காயின் சுவைபோல
நொந்தபல நிகழ்வுகள்
ஊட்டிவிட்ட ஞானமின்று
என்னையெனக்கு அறிவித்ததோ ?

சக்தி சக்திதாசன்

No comments: