Saturday, January 20, 2024

வென்றே நீவிர் புகழொடு வாழ்வீர்

உள்ளமெனும் ஆழிக் கரையினில்
உணர்வலைகளின் நுரைகள் பொங்க‌
மனமெனும் ஆலயத்தினுள் 
மங்காமல் நேசதீபம் ஒளிவீசும்

தொடர்ந்து வந்த தடைகளால்
உடைந்து போன இதயங்கள்
நிமிர்ந்து மீண்டும் நடந்ததினால்
ஒருங்கு சேர்ந்து இயங்கிடுதே !

எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றியதால்
எஞ்சியது பெரும் வெறுமைகளே
வெறுமைகளுக்குள் தேடியதும்
வெளியானது முழு அமைதியே !

வாழ்க்கையெனும் நாடகத்தில்
வழிமாறி வரும் காட்சிகள்
விளையாடிடும் காலங்கள்
வினையாக்கிடும் வேகங்கள்

தேன் பேச வழியிருந்தும் ஏனோ
வீண் பேசிடும் நாவினால்
புண்ணாக்கிய நெஞ்சங்கள் தானே
தன்நோக்கிய விவேகங்கள்

எது வந்து போகினும் புவியில்
புது வசந்தங்கள் வேண்டினின்
முது மொழி தந்த வழிதனில்
அது கண்டிட வென்றிடீர்

காலம் தானாய் ஓடிடும் தோழர்
காண்பீர் துணிவுடன் நாளைகள்
ஞாலம் தனில் எம் ஜனனங்கள்
நாமாய் வேண்டியோ நடந்தது ?

ஒன்றே நெஞ்சில் கொண்டே நடந்தால்
நன்றே வாழ்வில் என்றும் நடக்கும்
இன்றே மனதில் நன்றே கொள்வீர்
வென்றே நீவிர் புகழொடு வாழ்வீர்

சக்தி சக்திதாசன்

No comments: