நினைவுகள் எனும் சங்கீதம்
நித்தமும் தரும் ஆனந்தம்
திகட்டிடும் சுவையெனத் தமிழ்
தீட்டிடும் கவிதையில் மிளிரும்
தவழ்ந்த என் தாய்மண்ணை
பிரிந்தொரு பொழுதில் விண்ணில்
மிதந்தொரு புலம் பெயர்ந்தாலும்
சிந்தையில் சுரந்திடும் தமிழாய்
படித்திட்டதால் வந்தது அல்லவே
வடித்திடும் கவிதைகள் என்னுள்
செதுக்கிட்ட கவியரசர் தமிழென்னை
நிறைத்திட்ட வகையன்றி வேறில்லை
விடிகின்ற பொழுதெல்லாம் நெஞ்சில்
தெரிகின்ற உள்ளத்து உணர்வுகள்
தருகின்ற வெள்ளமாய் நிறைவதால்
வடிகின்ற வரிகளென் கவிதைகள்
சுந்தரத் தமிழின் வனப்பினால்
சொக்கிடும் நெஞ்சம் கொண்டதால்
நித்தமும் சுரந்திடும் கவிதைகள்
நிகழ்த்திடும் யுத்தத்தின் சத்தமே !
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment