Friday, January 12, 2024

வாழ்விலில்லை இன்பதுன்பம்

காலையின் இதழ்களை
காலம் விரித்தது.
கதிரவன் பயணம்
கதிர்களாய் மலர்ந்தது

இயற்கையின் அதிசயம்
இதயத்தை நிறைத்தது
இன்பத்தின் ஊற்றாய்
இறைப்பது ஆனந்தம்

கிளைகளில் பறவைகள்
செடிகளில் மலர்கள்
தவழ்ந்திடும் தென்றல்
தழுவிடும் மழைத்துளி

பிரபஞ்சம் வகுத்திட்ட
பிறழாத நியதிகள்
புரிந்திட்ட பேர்களுக்கு
புலர்ந்திடும் ஞானமே !

எமக்குள்ளே நாமறியா
எத்தனையோ புதுமைகள்
எப்படித்தான் அறிந்திடலாம்?
எப்பாதை சென்றிடலாம் ?

விழிப்புணர்வு கோண்டே
வினாடிகளை ரசித்திட்டால்
வியப்பான அனுபவங்கள்
விரிந்திடுமே தாமரையாய்

இலவசமாய் கைவசத்தில்
இருக்கிறது நமக்கெல்லாம்
இளமையான இதயத்தின்
இனிமையான ரகசியமே

சுவாசத்தை குருவாக
சுவீகரித்துக் கொண்டு
சுகமாகக் கண்மூடி
சுபமாகத் தியானிப்போம்

மெளனத்தின் மொழியொன்று
மெல்லினிய அனுபவத்தை
மெத்தெனவே பரிசளிக்கும்
முழஅர்த்தம் புரிந்திடுமே !

வேண்டிவந்த வாழ்விதுவெனும்
வேதமிகு தத்துவத்தை
விளங்கிக்கொண்ட பின்னாலே
வாழ்விலில்லை இன்பதுன்பம்

சக்தி சக்திதாசன்

No comments: