அன்றிலொன்று ஆனந்தமாய்
ஆடுகின்ற மாலையிது
நெஞ்சிலொரு ராகமது
நெகிழ்த்துகின்ற கானமிது
புற்தரையில் வந்திறங்கிய
புறாவிரண்டின் குதூகலிப்பு
சிறகை விரித்தவைகள்
சிலிர்க்கின்ற அருங்காட்சி
மகரந்த்க் கவர்ச்சியினால்
மலருக்குமலர் தாவும்
வண்ணத்திப் பூச்சிகளின்
வர்ணமிகு வடிவங்கள்
வண்டுகளின் ரீங்காரம்
வனப்புமிகு தோட்டத்தில்
தேனருந்திய மயக்கத்தில்
தெம்மாங்கு இசைத்திடுமே
மஞ்சளாடை போர்த்துவிட்ட
மாலைநேர வானத்திலே
அவசரமாய் ஓய்வெடுக்க
ஆதவனின் விரைவோட்டம்
பெளர்ணமியாய் ஜொலித்திட
பயணப்படும் நிலவுமகள்
தோரணங்களாய்த் தாரகைகள்
தொங்குகின்ற இரவூர்வலம்
காதலென்னும் கவிதையினைக்
காதோரம் கிசுகிசுக்கும்
கனவுலகக் காந்தர்வர்
கதைபேசிடும் பொழுதேகும்
இமையெனும் திரையினை
இழுத்து மூடியொரு
கனவென்னும் தேரேறி
கவிதைதேடும் கவிஞனிவன்
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment