Wednesday, September 20, 2023

மாமனிதன் கர்ணன்

அகிலத்தின்
அழிக்க முடியா
காவியமாய்
ஞாலத்தில்
ஞாயிறு போல் ஒளிரும்
ஆதவனாய்
தவழ்ந்திடும் இதிகாசம்
மாபெரும் மகாபாரதம்

அக்காவியம்
கற்பிக்கும்
பாடங்கள் ஆயிரம்
அதிலே
அனுபவிக்கும்
அனுமானங்கள் ஆயிரம்

பாரதம் எமக்காய்
புகட்டிடும்
பல வாழ்வியல் கருத்துக்கள்
புரிந்திட்டால்
இனித்திடும் வாழ்க்கையே !

பார்த்திட்ட
பாத்திரங்கள் யாவிலும்
துலங்கிடும்
ஒன்றாய்
உணர்வினில்
உறைந்திடும் உருவகமாய்
உயர்ந்திட்டவன்
கர்ணன் எனும் மாமனிதன்

பிறந்திட்ட
வழியும் அறியாமல்
சிறந்திட்ட
திறமையும் ஒளிராமல்
மறைந்திட்ட
குடத்தினுள் விளக்காய்
விளங்கிட்ட
தேரோட்டி மகனாய்

வில்லுக்கோர்
விஜயனாய் சிறந்திட்ட
அர்ஜுனன் போலவே
வில்லேற்றும்
திறன் படைத்தவன்
விலக்கப்பட்டு
தவித்திட்டான் குலம் எனும்
மாயை திரை மறைத்ததினால்

தோள் தட்டி
அணைத்திட்ட துரியோதனன்
சுயநலம் கொண்டே
அணைத்திட்ட போதிலும்
செஞ்சோற்றுக் கடன் அடைக்க
நெஞ்சில் தர்மத்தின்
வழி அடைத்தான் கர்ணன்
வலியுடனே !

காலமெலாம்
சூது புத்திரன் என்றே
பழிக்கப்பட்ட பெரும்
வலியுடன் வாழ்ந்தவன்
குந்தியின் புதல்வன்
தருமனின்
தமையன் என்றறிந்தும்
தன் கடன் தீர்க்க
தம்பியர் மீது
அம்பெய்தும்
செயல் தூக்கி நின்றிட்ட
போது அவன் மாமனிதனே !

கணங்களுடன்
காலம் பரிசாகத் தந்த
ரணங்களுடன்
வாழ்ந்து மடிந்த தேரோட்டி மகன்
கர்ணனின் கண்ணீர்
கற்பிப்பது ஓர் நல்ல பாடமே !

மகாபாரதம் என்பது
கட்டுக் கதை என்போரும்
சரித்திர நிகழ்வு என்போரும்
தர்க்கத்தில் இன்றுவரை
எது எப்படி ஆயினும்
தோலை நீக்கி அழகாய்ச்
சுளையைப் பார்த்தால்
கர்ணனின் கண்ணீர்
காட்டுவது நல்வழியே !

சக்தி சக்திதாசன்

No comments: