Friday, September 01, 2023

கேட்டதைக் கொடுப்பவனே !

நான் கேட்டா
எனைப் பெற்றார்
என் பெற்றோர் ?

எனைக் கேட்டா
என் மைந்தனானான்
என் மகன் ?

யார் கேட்டு இங்கு
யாரைப் பெற்றார் ?

என்றொரு கேள்வி
எழுந்ததோர் கேள்வி
அன்றொரு காலம்

ஆன்மாவின் திட்டம்
அதற்கொரு தேவையென்று
விடையீந்த ஆன்மீகம்

காற்றோடு விழும் விதை
மரமாகும் நிலம் போல
எங்கோ ? என்றோ ? எப்போ ?

காற்றோடு
ஒரு செய்தி
காதோடு
கேட்டதுண்டு

நீற்றாக
கரையுமட்டும்
மகிழ்வோடு
வாழ்கவென்றே !

ஓர்நாள் மட்டும்
வாழ்ந்து வீழும்
மலர்கள் சொல்வதை
மனதோடு
கொண்டிடுவோம்

இப்போது ஒரு பொழுது
தப்பாமல் கண் முன்னே !
எப்போதும் ஏன் 
தெரிவதில்லை ?

முப்பொழுதும் மனதில்
முடிந்தை எண்ணிக் 
கவலை வரப்போவதை 
எண்ணி வீண் அச்சமும்

கேட்டதைக் கொடுக்கிறது
சூழ்ந்திடும் பிரபஞ்சம்
வேண்டுபவை எம்மறை ?
நேர்மறையா ? எதிர்மறையா ?

உள்ளத்தில் ஓர்வழி
என்றுமே நேர்வழி
மகிழ்வின் தனிவழி
மனதுள் பெருவெளி

தனக்குள் பயணத்தை
தானாய் தொடங்கிட்டால்
கண்டிடும் பொழுதொன்றே
நிலையெனப் புரிந்திடும்

சக்தி சக்திதாசன்

No comments: