சில இரவுகள் சில நிலவுகள்
வானமெனும் தேரெறி
பவனி வந்திடும் வெண்ணிலவு
சுரக்கப் பண்ணு ம் உணர்வுகள்
சுவையுறவே கலந்திடும்
பூரணமாய் ஓரிரவும்
பூஜ்ஜியமாய் ஓரிரவும்
விளக்கிடும் வாழ்வினை
விந்தைதான் எண்ணினால்
தேய்ந்திடும் பொழுதிலும் - பின்
வளர்ந்திடும் வேளையிலும்
வலம் வரும் பாதையில்
விளக்கிடும் நிகழ்வுகள்
கண்களில் காதலைத் தேக்கி
கலங்கிடும் கனிகையை நோக்கி
துலங்கிடும் நிலவொளி தாக்கி
விளம்பிடும் துயர்தனை நீக்கி
உறவுகள் தந்திடும் உறவு
உராய்ந்திடும் உணர்வின் துடிப்பு
ஊர்ந்திடும் நிலவினில் தெறிப்பு
உறக்கத்தில் கனவாய் வெடிப்பு
கிண்ணத்தில் குழைத்திடும் சோறு
அன்னத்தை ஊட்டிடும் பேறு
அன்னையும் குழந்தையும் பாரு
அதற்கும் நிலவுதான் தேறு
நிலவின் பயணம் அதற்கு
நிழல்கள் இல்லை பாரு
நிலவின் காட்சிகள் நூறு
சாட்சியாய் கேட்போர் யாரு
நிலவினைத் தேடிடும் மனிதன்
நிம்மதி தொலைத்தது நிலவு
அமைதியாய்த் தவழ்ந்தது அன்று
அழித்திட்ட மானிடம் இன்று
உண்மையைச் சொல்வது பூரணை
பொய்மையாய்க் கரைவது அமாவாசை
இடையில் வளர்வதும் தேய்வதும்
இதுதான் வாழ்க்கையின் தத்துவம்
கண்களை மூடி நானும் தேடி
கண்டது நிஜமாய் வேறு
சில இரவுகள் சில நிலவுகள்
சில உணர்வுகள் சில கனவுகள்
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment