Tuesday, November 28, 2023

காலமெல்லாம் நிலைத்திருக்கும்

எழுத எழுத துளிர்க்குது
எழுத்து என்னை மயக்குது
எங்கெங்கோ இழுக்குது
எதையெதையோ சொல்லுது

பிறக்கும்போது அறியவில்லை
பிறப்பின் நோக்கம் புரியவில்லை
எங்கிருந்தோ ஓசையொன்று
எனக்காக ஒலித்ததின்று

கைவிரலின் நாட்டியத்தில்
கவிதை நடனம் புரியுது
தமிழன்னை பாடுகிறாள்
தமிழ்மழையாய்ப் பொழிகிறாள்

செந்தமிழின் வனத்தினுள்ளே
தொலைந்துபோன மகிழ்வெனக்கு
செம்மொழியின் அழகிலின்று
செப்புகிறேன் தமிழ்க் கவிதை

இலக்கணத்தை கற்காமல்
இலக்கியத்துள் அடங்காமல்
இதயத்துள் கண்ணதாசன்
இறைக்கின்ற தமிழூற்று

நானொன்றும் அறிஞனில்லை
நிச்சயமாய்க் கவிஞனில்லை
நெஞ்சம் பாடும் தமிழோசை
நிறைக்குதெந்தன் காகிதத்தை

உள்ளத்தின் ஆழத்தின் உருவாகும்
கவிதையெல்லாம் கருக்கட்டும்
கவிதையாகப்  பிரசவிக்கும்
காலமெல்லாம் நிலைத்திருக்கும்

சக்தி சக்திதாசன்

No comments: