Saturday, December 16, 2023

எமக்கான எம் கடமை

தெரியாத பாதை ஒன்றில்
தெரிகின்ற பயணமிது
புரியாத விளக்கமொன்றில்
புரிந்திட்ட புதையலிது
விடியாத இரவொன்றில்
விடிந்திட்ட வாழ்க்கையிது
புலராத பொழுதொன்றில்
புலர்ந்திட்ட உணமையிது
முடியாத கதையொன்றின்
முடிந்து விட்ட வினையிது
கேட்காத ஒலியொன்றின்
கேட்கின்ற நாதமிது
உருள்கின்ற உலகமதில்
உருட்டுகின்ற பகடையிது

நேற்றென்னும் புத்தகத்தில்
இன்றுணர்ந்த பாடங்கள்
நாளைய அனுபவங்களாய்
சேர்க்கின்ற அத்தியாயங்கள்
நிறைகின்ற செல்வமெல்லாம்
கரைகின்ற பொழுதொன்றில்
சுரக்கின்ற வெள்ளமாய்
இறைக்கின்ற உள்ளுணர்வுகள்
பூக்கின்ற மலர்களாய்
புண்ணிய பாவங்களென
செய்திட்ட செயல்களிலே
சேராமல் சேர்ந்திருக்கும்
நிலவோடும் பாதைதனில்
நீங்காத கனவுகளாய்
கண்ணோடு காட்சிகள்
காண்பவை கவிதைகளாய்

எனைமூடும் மேகங்களாய்
என்னுள்ளே எண்ணங்களாய்
எப்போதும் தவழ்ந்திருக்கும்
எதுவரையும் கூடவருமோ ?
நினைவுகளில் நீந்துகின்ற
நிமிடங்களுள் கலந்திருக்கும்
புனைவுகளில் வரிகளாய்
புனைந்திடும் கவிதைகளில்
கவிஞனெனும் போர்வைக்குள்
மனிதனிவன் உறக்கமிது
விழித்துக் கொள்ளும்
வேளைகளின் வெளிச்சமித
சொல்லச் சொல்லவேயென்றும்
மெல்லெனவே இனித்திருக்கும்

வாழ்வென்னும் பாதையிலே
வளைவுகளும் நெளிவுகளும்
சுழன்றடிக்கும் புயலாக
சூழ்ந்திருக்கும் நிகழ்வுகளும்
பயணமதன் பாதையிலே
பார்ப்பதெல்லாம்  அதிசயங்கள்
மீட்டிவிடும் ராகங்களாய்
மூண்டெழுந்திடும் உணர்வுகள்
யார்யாரோ வருகின்றார்
எதையெதையோ புகட்டுகின்றார்
கேட்பதெல்லாம் புரிந்துவிட்டால்
கிடைப்பதெல்லாம் ஞானமன்றோ !
நமக்கான நாமியற்றும்
நம்கடமை நம்மையறிவதே !

சக்தி சக்திதாசன்

No comments: