சொல்லாத சொற்களுள்
நில்லாத உண்மைகள்
வெல்லாத பொழுதுகள்
கல்லாத பாடங்கள்
முட்களால் கீறிய
முழுதான ஓவியம்
வரைதாள் நெஞ்சமோ
வலிக்கின்ற வேளை
சிரிக்கின்ற உதடுகளுள்
சிக்கிக்கொண்ட பொய்மை
பார்க்கின்ற விழிகளினால்
புரிந்திட முடியவில்லை
உறவென்றும் பிரிவென்றும்
உண்மையும் பொய்மையும்
உலகத்தின் நாடகங்கள்
உணரும்போது உரசுமே !
திரைவிழுந்த பின்னாலும்
திடுக்கிடும் காட்சிகள்
நடிகர்கள் முன்நிகழும்
நயமான நிதர்சனங்கள்
உள்ளத்தின் ஆழத்தில்
உணர்வெழுதும் கதைகள்
வாசிப்போர் இல்லாத
வாசிகசாலை நெஞ்சமதோ ?
கொஞ்சமாய்ச் சொல்கிறேன்
நெஞ்சத்தின் ஓலத்தை
பொழிகின்ற ஞானமழை
பொட்டல்வெளி நிலமொன்றில்
சிந்திக்கும் வேளையதில்
சிறகடிக்கும் எண்ணங்கள்
சிற்பியிடம் உளியுண்டு
சிலைவடிக்க கைகளில்லை
சொல்லிவிட மொழியுண்டு
கேட்பதற்குச் செவியுண்டா ?
உண்மையான விடுதலையை
உணர்ந்திருப்போர் யாருமுண்டா ?
ஊமையான விழிகளோடு
உண்மையெங்கே பேசுமின்று ?
விடிந்துவிட்ட இரவொன்றில்
விளக்காக இருளெதற்கு ?
விடிந்தபின்னும் தூங்குமிந்த
வியப்புநிறை மானிடர்கள்
துளிர்க்கின்ற கவிதைகளுள்
தூங்குமந்த உண்மைகளும்
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment