Sunday, November 26, 2023

அறிந்தவர் வாழ்வினில் ஆனந்தம்

என்னைத் தாக்கிய கணங்கள்
என்னுள் விளைத்த ஏக்கங்கள்
ஏதோ புரிவித்த வாழ்வின் யதார்த்தங்கள்
எதைதையோ காண்பித்த வடிவங்கள்
யாரோடு யாரை யாராக இணைத்திட்ட
யாருமறியாத வாழ்வின் வேதங்கள்
யாத்திட்ட வாழ்வின் சாத்திரங்கள்
நீயென்றும் நானென்றும் புலர்ந்திட்ட 
நீங்காத உலகத்தின் பாத்திரங்கள்
தாங்காமல் தகித்திடும் உணர்வுகள்
தனியாக உணர்த்திடும் உண்மைகள்
தந்திடும் விளக்கத்தின் விடியல்கள்

திறக்கபடாமல் மூடிய பக்கங்கள்
இதயத்துள் புதைந்திடும் விந்தைகள்
நிறைக்கபடாத  பாத்திரத்துள் நீரது
தளும்புவதைப் போலவே நினைவுகள்
சூடிய பாத்திரத்தின் தன்மையை
தேடிய வேளைகளின் தேடல்களுள்
விதைக்கப்பட்ட உணர்வுகளின் தளிர்கள்
விருட்சமென விளைந்திடும் வாழ்க்கை
துறந்திடும் உறவுகளின் யாத்திரை
பிறப்பினில் வருபவைகள் மாத்திரம்
வரைந்திடும் சித்திரத்தின் கோடுகள்
வளைந்திடும் போதிலும் வடிவங்கள்

வெள்ளமாய் எண்ணங்கள் பாய்ந்து
உள்ளத்தின் கதவுகளை உடைத்து
சொல்லிடத் துடித்திடும் பொழுதினில்
மெல்லென விழித்திடும் கனவுகள்
சொல்லெனத் தவித்திடும் புனைவுகள்
வில்லெனப் புறப்படும் கவிதைகள்
எனக்கென நான் வடிக்கும் போதினில்
எங்கெங்கோ நெஞ்சத்தில் உரசிடும்
குழந்தையாய்த் தவழ்கையில் தஞ்சம்
வாலிப வனப்பினில் கெஞ்சும் 
குடும்பத்தின் சுமைகளில் மிஞ்சும்
குவலயக் கடமைகளே விஞ்சும்

வாழ்வினில் பலதூரம் ஓடியோடி
தேடிக்கொண்ட வசதிகளின் வழி
வாழ்கின்ற வாழ்வினை நிலையென
எண்ணிக்கொண்டு வாழ்கின்ற வேளை
உலகமெனும் நாடக.மேடையில்
உடலென்னும் உடை களையும் வேளை
விழுகின்ற திரையினை உணர்ந்தால்
விளங்கிடும் வாழ்க்கையின் சூட்சுமம்
நேற்றென்றும் இன்றென்றும் நாளையும்
நாள்தோறும் நிகழ்ந்திடும் காட்சிகள்
ஆன்மாவே நிரந்தர நடிகர்கள்
அறிந்தவர் வாழ்வெல்லாம் ஆனந்தம்

சக்தி சக்திதாசன்

No comments: