Tuesday, October 17, 2023

இன்று அக்டோபர் 17ம் தேதி எனது எழுத்துகளுக்கு.மானசீகக் குருவாக நான் வரித்துக் கொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 42 வது நினைவுதினம்.
இதை அவரது நினைவுதின வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு கவிமாலை சாத்துகின்றேன்.

கனவுகளில் காற்றாக
நினைவுகளில் நின்றாடும்
புனைவுகளின் மன்னனே !
புவியுலகின் கவிமைந்தா !

சிறுகூடல் பட்டியிலே
சிற்றூற்றாய் ஊற்றெடுத்து
சிலையாகி வாழுகின்றாய்
சிங்காரச் சென்னையிலே

காற்றோடு கலந்தாயோ !
கானங்களின் மன்னவனே !
கவியரசன் நீதானென்று
கலையுலகம் போற்றுதய்யா

கலங்காதிரு மனமேயென்று
காட்டாற்று வெள்ளெமொன்று
கண்ணே , கலைமானேயென்று
கண்மூடிக் காய்ந்ததய்யா !

தமிழன்னைத் தாலாட்டில்
தமிழ்கற்ற புலவனய்யா
தமிழர்தம் நெஞ்சங்களில்
தனியிடத்தில் வாழ்கின்றாய்

உடல்நீக்கி ஆன்மாவாய்
உலாச்சென்ற கண்ணதாசா !
உன்னினைவு வாரத்தில்
உதிர்க்கின்றேன் முதற்கவிதை

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

No comments: