தித்திக்கும் சிந்தையெலாம் நிறையும்
தீபமாய் ஒளிரும் என் தாய்மொழி
தந்திட்ட இன்பமெல்லாம் மீட்டிட இத்
தரணியிலே ஒரு வீணையில்லை
முத்திக்கும் தன் புகழை முரசறைந்து
முத்தமிழாய் எம் வாழ்வில் தவழ்ந்திடும்
செம்மொழியாம் நாம் கண்ட தமிழ்மொழி
செப்பிடுவேன் உயிர்மூச்சு உள்ளவரை
வித்தகு கவிஞர்களைத் தந்த தமிழ் புவியில்
வியத்தகு வகையில் மலர்ந்திட்ட மொழி
எவ்வகை சொன்னாலும் தன்னுள் சுவையை
ஏந்திடும் தேன்துளி வெள்ளமாம் இத்தமிழ்
மெத்தகு மேதைகளாய் பல கற்றிட வேண்டுமென
மேவிட இல்லை விதிகளை என் தமிழ்
போற்றிடும் நெஞ்சங்களில் எழும் துளிகளை
சாற்றிட்டால் போதுமென போதித்த மொழி
எத்தகை இலக்கிய ஆய்வும் செய்தவன் இல்லை
எந்தனின் தமிழின் ஆழம் சொற்பமே
கவிகளில் கோலோச்சிய குருவாய் வரித்தேன்
கவியரசன் கண்ணதாசன் தனையே
நித்தமும் நெஞ்சில் தமிழன்னையின் பாதங்களில்
நற்சிரம் தாழ்த்தி நானும் தொழுதே
சொற்வை கொஞ்சம் கூட்டி கவிகளைச்
செய்திடும் செயலே என் சேவை
செப்பிடும் வரிகளில் சிற்சில உண்மைகள்
சேர்த்திட்டே கவிகளை யாத்து
அன்புடன் இணைந்திடும் மனங்களின் முன்
அளிக்கின்றேன் எந்தன் காணிக்கையாய்
இத்தரை மீதினில் என்னுயிர் நிலைத்திடும்
இனிதொரு காலங்கள் மட்டும் அன்னைத்
தமிழின் வழி அவள் புகழ் பரப்பிடும் போது
தலைமுறை செழித்திட வேண்டுகிறேன்
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment