Wednesday, May 02, 2007

நினைவுகளின் நீளத்தில்

என் தந்தையின் 91வது பிறந்தநாளில் அவரின் நினைவாக 04.05.2007

அவனியில் உந்தன் நிழல் பட்டு
அப்பா
அகவைகள் ஒன்பது நூறுகளோடு
அகன்ரது இன்னும் ஒன்றே இன்று

அன்பின் திருவுருவம்
அறிவின் மறுவடிவம்
ஜயன் நீயெனக்கு
அளித்ததோ பெருந் தவமே !

சாந்தத்தின் புதல்வனாய்
சத்தியத்தின் மைந்தனாய்
சாதனைகளின் விளைநிலமாய்
சாகாவரம் பெற்றோனோ - நீ
சரித்திர நாய்கன் தான்

வேதனைகளைப் விதைகளாக்கி
போதனைகளைப் பசளையாக்கி
வாழ்க்கை எனும் வயல்வெளியில்
நியாயங்களை அறுவடை செய்தவனே

காலம் உனன்னை நோக்கி
களமனுப்பிய சூறாவளிகள்
ஒன்றல்ல ! இரண்டல்ல !
ஓய்ந்து நீயும் சாய்ந்து விடவில்லை
ஓயாமல் எரிந்த மெழுகுவர்த்தி நீ

உன் பெருமை தனையறியார்
தம்மைத் தாமே அறியார்
தாம் வந்த பாதையறியார்
பயணங்களின் திசையும் புரியார்

உன் வழியில் வளைவு இல்லை
உன் நெஞ்சில் வஞ்சம் இல்லை
உன் கண்ணில் கலக்கம் இல்லை
உன் வாழ்வில் தோல்வி இல்லை

இந்த உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளின் நீளத்தில்
கனவுகளின் ஆழத்தில்
அப்பா
அஞ்சலிகள் செலுத்தி நானும்
அடிகளைத் தொழுது நின்றேன்

அஞ்சலியுடன்
சக்தி சக்திதாசன்

No comments: