Monday, October 09, 2006

இதற்கு பெயர்தான் காதலோ ...

தொட்டுவிடத் துடிக்கும் மனது
தொடர்ந்துவர தவிக்கும் கால்கள்
தொற்றிக்கொள்ள ஏங்கும் கரங்கள்
தோணியாக மிதக்கும் எண்ணம் ..

பட்டுவிட நடுங்கும் விரல்கள்
படர்ந்தவுடன் உறையும் மேனி
பார்வையினால் தாக்கும் உணர்வு
பசியையே மறக்கும் இயல்பு

எட்டிவிட ஏங்கித் துடிக்கும்
கிட்டவர ஒதுங்கி நாணும்
ஏக்கத்திலே பொழுது கழியும்
எண்ணத்திலே கவிதை பொங்கும்

தட்டிவிட திரும்பத் தாவும்
தனிமையிலே உள்ளம் வேகும்
தன்னையே வெறுத்து ஒதுக்கும்
தழுவலிலே உணர்ச்சி கலக்கும்


இதுதான் காதலா ......
இதைத்தான் கன்னியவள்
இறுதிவரை காளையுடன்
இன்பமெனப் புரிந்தாளோ ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

No comments: