Thursday, May 03, 2007

நினைவெல்லாம் நிறைந்திருக்கும் நித்தியமே

அன்புடை நெஞ்சங்களே ! என் அன்புத் தந்தையின் தொண்ணூற்ரோராவது அகவையில் (04.05.2007) இன் இதய் அஞ்சலிகளி உங்கள் முன்னால் சமர்ப்பிக்கின்றேன்

நினைவெல்லாம் நிறைந்திருக்கும் நித்தியமே

எந்தையே உன்னை நினைந்து
முந்தைய நினைவுகளில் முக்காடி
சிந்திய கண்ணீர்த்துளிகள் பன்னீராய்
வந்ததுன் பிறந்த நாள் இந்நாளில்

விந்தினுள் சிறுபொறியாய் விதைத்தனை - உலகப்
பந்தினுள் நான் உருள்வதின் சூட்சுமம்
சிந்தையில் துலங்குது இவ்வேளை
மந்தையில் நானொரு அங்கம் தானே

பொந்தினுள் காத்திடும் குஞ்சைப் போல
தந்தது நீயோர் அன்பு வாழ்க்கை
நினைந்து நெஞ்சில் அக்காலம் தனை
வினைந்து மனம் உருகுது இக்காலம் தனில்

புனைந்து கவிகள் பல நான் அவனியில்
தெளிந்து உண்மை அன்பை அறிந்த வேளை
விரைந்து நீயும் விண்ணில் ஏகி எங்கோ
மறைந்து போன இடம் தேடியலைகின்றேன்

களைந்து தீயவினைகளை மனதிலிருந்து
விளைந்த ஞானம் தனில் நான் கண்டது
முடிந்த உன் வாழ்வின் வரலாறு தானே
தொடர்ந்த வழிகள் என்றும் உன் அடிகளே

பொழிந்த தத்துவத் துளிகளில் அன்று
புதைந்த உண்மையை அறிந்திலேன்
தெரிந்த போது அப்பா இன்று நீ
கரைந்து கலந்தனை தென்றலில்

வரைந்த வாழ்வதன் வழிதனில் இன்று
நிறைந்த அகவைகள் தொண்ணூற்றொன்றாய்
பறந்த வருடங்கள் தனில் அழியாதே
மொழிந்த உந்தன் அன்பு வார்த்தைகள்

சரிந்த கோபுரம் நீயென நினைத்து
கறந்த அனுபவப் புதையலை இங்கே
சிறந்த பாடமாய்க் கொண்டே நானும்
நடந்து முடிப்பது வாழ்வை நிச்சயம்

அன்புடன்
சக்தி சக்தி தாசன்

No comments: