Thursday, December 18, 2025

நேசிப்போ ? வாசிப்போ ?

வாசிக்கப்படுவதால் நேசிக்கப்டுவேனோ ?
நேசிக்கப்படுவதால் வாசிக்கப்படுகிறேனோ
யோசிக்காமல் எழுதிக்கொண்டே
யாசிக்கிறேன் பிரபஞ்ச சக்தியை

பஞ்சுமலர் தோட்டத்தில்
பிறப்பெடுத்த காரணத்தால்
முட்கள் மீது நடல்கவில்லையெனும்
முட்டாளின் வாதமல்ல 
கடந்துவந்த்ச் பாதைகளில்
நடந்தபோது உணர்ந்த பல
வலிகளும், ஆனந்தமும் தந்த
அனுபவங்களின் சேர்க்கையே

பெரிதாய் எதையும் சாதித்த
அரியதோர் பிறப்பல்ல
சிறிதாய் தோன்றும் உணர்வுகள்
அறிவாய் நெஞ்சில் தோன்றுவதால்
பறித்த அனுபவப் பூக்களினால்
உறுதியாய் கட்டிடும் மாலையிது

உள்ளத்தின் ஏதோவொரு மூலையில்
அள்ள அள்ள குறையாமல் ஊறும்
வெள்ளமெனத் தமிழ் பாய்ந்திட
நல்ல பல உள்ளங்களோடு 
மெல்ல நானும் பகிர்ந்திடும் வேளை
சொல்ல முடியா சொற்கள் கூட்டி
வெல்ல நினைக்கும் இலக்கிய யுத்தம்

மூச்சிருக்கும் வேளை வரை
வீச்சிருக்கும் என் கவிதை வாள்
மிச்சமில்லா வகையினில் வரிகளின்
சொச்சங்களை கூட்டியாக்கும் கவிதை
எச்சங்கள் தானிங்கு எம்பிடுமோ ?
நிச்சயமாய் பாடுமொரு உண்மை

தினந்தோறும் எழுதுகிறேன்
மனந்தோறும் தட்டும் எனும் நினைத்து
நிறைந்தோடும் வாழ்வுப் பயணம்
அறந்தாங்கும் வழியேகி என்றும்
சிறந்தோங்கி வாழ்க என வாழ்த்தி
சுரந்திங்கு வணங்கி மகிழ்கிறேன்

சக்தி சக்திதாசன்

Tuesday, December 16, 2025

விழிக்கும் ஒவ்வொரு காலையும் ......

விழிக்கும் ஒவ்வொரு காலையும்
வியப்புமிகு புதிதான உணர்வுகள்
விந்தையிலும் விந்தை இவ்வாழ்வு
விடையில்லா வினாக்களே சுற்றிலும்


நொடிகளின் நடுவே நின்று பார்க்கும் போது
நோக்கமின்றி ஓடும் நாட்களின் நிழல்கள்
நொடித்துளி வாழ்வின் நுண்மம் புரிந்திட
நெஞ்சமெங்கும் நிம்மதியின் நிசப்தம் மலர்கிறது

காற்றின் குரலில் கூட கேள்விகள் உண்டு
காணாத பதில்களைத் தேடும் மனமென்னும் பறவை
காலத்தின் கரையில் அமர்ந்து கொண்டே
காணாத கரைகளைக் கனவாக வரைகிறது

அலைபாயும் எண்ணங்கள் அலைமோதும் கடல்
அதன் அடியில் அமைதியின் ஆழம் மறைந்து
அந்த ஆழத்தைத் தொட்டவர்க்கே தெரியும்
அமைதியும் அலைவும் ஒரே இசை என்பதை

பாதைகள் பல இருந்தும் பயணம் ஒன்று
பயணத்தின் பொருள் மட்டும் மாறிக்கொண்டே
பார்வை மாறும் பொழுதே உலகம் மாறும்
பார்வையே பயணத்தின் உண்மைப் பக்கங்கள்

உணர்வுகள் எல்லாம் உள் உலகின் மொழி
உருவமில்லா உண்மைகளை உரைக்கின்றன
உணர்ந்தவர்க்கே தெரியும் அந்த மொழியின்
உரையாடல் எவ்வளவு ஆழம் கொண்டது என்று

நினைவுகள் நிழலென நம்மைத் தொடரும்
நிழலின் வடிவம் நம்மால் தீர்மானிக்கப்படும்
நேற்றைத் தாங்கி நிற்கும் நிழல் கூட
நாளைய ஒளிக்காகவே உருவாகிறது

வாழ்க்கை ஒரு வினா, பதில் ஒரு பயணம்
பயணமே பதிலென உணர்ந்தவனுக்கு
வினாவோ பதிலோ வேறில்லை 
விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் விளக்கம்

சக்தி சக்திதாசன்

Sunday, December 14, 2025

தமிழோடும் பாதையிலே.......

தமிழோடும் பாதையிலே தவழ்ந்தோடும் குழந்தை நான் தமிழ்பாடும் தாலாட்டில் தனை மறக்கும் சேய் நான்

கவிதைகளால் தொட்டிலிட்டு கண்மூடி அயர்ந்திருப்பேன் கண்விழித்துப் பார்த்து விட்டால் கண்ணீரில் மிதந்திருப்பேன்

பாடலோசை மெல்லிசையில் பாய்ந்தோடும் புன்னகை நான்
பழமொழியின் பாசத்தில் பசுமை காணும் பிள்ளை நான்

சொற்களாலே சோலைகளை சுருங்கவைக்கும் சிந்தை நான்
சூரியனாய் சுடர்விடும் சுவையுணர்ந்த சிரிப்பு நான்

தமிழரசின் முத்தமெனத் 
தாலாட்டும் தாய் மொழி நான்
தனிமையில் தேனாகித் தழுவும் நெஞ்சக் கவி நான்

இசையோசை ஏந்தியெழும் இளமையின் இசை நான்
இனியவெண் தாமரையின் 
இதழில் விழும் மழை நான்

பாரதியின் கனவுகளால் 
பரவசமாய் பாயும் நான்
பாடல்களில் பரிசளிக்கும் பாசத்தின் பிள்ளை நான்

நேர்மையெனும் நெஞ்சமொடு நேசமெனும் நிழல் நான்
நெஞ்சழுத்தம் தாங்கியெழும் நம்பிக்கையின் நதி நான்

சக்தி சக்திதாசன்

Saturday, December 13, 2025

நினைவாக நிற்பதே நிறைவு...

திசைகள் தெரியாமல்
பறக்கும் இலைகள்
அறிவதில்லை தாம்
சருகாகி புதைவது
எங்கே என்பதை...
விழுந்த இடத்தில்
விதைக்கப்பட்ட களைக்கோ
அன்றி செடிக்கோ
உரமாகிப் போவதே முடிவு .......

எங்கோ பிறக்கிறோம்
எங்கேயோ வளர்கிறோம்
அங்கேதான் வாழ்கிறோமா ?
அங்கேதான் மடிகிறோமா ?
ஆறறிவு கொண்டேமெனும்
பெயரில் காலமெனும் காற்றில்
நாம் கூட காய்ந்த இலைகளாய்
சருகாகிக் சரிவதெங்கென்று
சத்தியமாய்த் தெரிவதில்லை ....

தெரியாத பாதையில்
நடக்கும் நிழல்கள்
தெரிந்திடாது தாம்
எந்தக் கல்லில் நின்று
இடறுவார்கள் என்று...
நடந்த தடங்களில்
நாமே விதைத்த
நம்பிக்கையோ
அல்லது பயமோ
வழிகாட்டும் ஒளியே முடிவு...

காற்றின் இசையில்
தொலைந்த பறவைகள்
கண்டிடாது தாம்
எந்த வானில் தங்கும்
இரவை என்பதை...
பறந்த தூரத்தில்
பதிந்த நினைவுகள்
சுமையோ
அல்லது சிறகோ
பயணத்தை முடிப்பதே விதி...

நீரோட்டத்தின் வேகத்தில்
மிதக்கும் துளிகள்
அறியாது தாம்
எந்தக் கரையில்
சேர்ந்திடுவோம் என்று...
சேர்ந்த தருணங்கள்
சிலவே நம் சொத்து
மீதியெல்லாம் அறியாத
காலத்தின் கையில்
கரைந்துவிடும் உண்மை...

மாறும் பருவத்தில்
காயும் மலர்கள்
கேட்காது தாம்
எந்த மண்ணில்
மறுபிறப்பாய் மலர்வோமென்று 
வாடும் வாசனையில்
வாழ்க்கை எழுதும்
சிறு வரிகளோ
அல்லது சுவடோ
நினைவாக நிற்பதே நிறைவு...

சக்தி சக்திதாசன்

Friday, August 29, 2025

உண்மையைத் தேடி

உண்மையத் தேடியோர்
உண்மைகளின் பயணம்
உயரத்தின் விளிம்பில்
உண்மையின் தூக்கம்

விரும்பியோர் வழியில்
விரும்பாத காட்சிகள்
விருப்பத்தின் வடிவங்கள்
விதம்விதமாய் விழைந்திடும்

முடித்திடும் அவசரமும்
முடிந்திடாத ஆசைகளும்
முழுமையின் புரிதல்கள்
முழுவதுமே புதைந்திடும்

விளைட்டுத் திடலிலே
வகைவகையாய் விளையாட்டு
வருவதும் போவதுமாய்
வாசல்களில் வரிசையில்

முன்னொரு காலத்தின்
பின்னொரு விளைவுகள்
தன்னிரு கண்களுக்குள்
பிணைந்திடும் காட்சிகள்

வாழ்வெனும் திரையினில்
வண்ணத் திரைப்படமாய்
வாழ்ந்திடும் காலங்கள்
வரைந்திடும் காட்சிகள்

விடிந்திடும் பொழுதினில்
மறைந்திடும் நட்சத்திரங்கள்
புரிந்திடும் வேளையில்
உறைந்திடும் உண்மைகள்

சக்தி சக்திதாசன்

விடியலின் வனப்பு

மலர்கின்ற சூரியன் மெல்ல எழுந்தது,  
மழைக்கனிந்த மேகம் வானில் சிரித்தது,  
கிளிகள் கூவும் குரல் இசை போலே,  
காலை நேரம் கனிந்த கவிதைதான் இது.

பசுமை நிலம் புன்னகை பூத்தது,  
பனித்துளி இலைகளில் முத்தமிட்டது,  
காற்றின் இசை காதில் கசிந்தது,  
விடியலின் வண்ணம் மனதில் விழுந்தது.

தென்றல் தழுவும் நெஞ்சம் நிமிர்ந்தது,  
தெற்கில் சூரியன் தீபம் ஏற்றது,  
பறவைகள் பறந்தன பாட்டோடு,  
புதிதாய் பிறந்தது நாளின் தொடக்கம்.

வானம் வெண்மையாக விரிந்தது,  
விடியலின் ஒளி விழியில் நுழைந்தது,  
மனதின் மழை வாடை மறைந்தது,  
மலர்ந்தது வாழ்வின் புதிய பக்கம்.

காலையின் நறுமணம் காற்றில் கலந்தது,  
கனிந்த ஒளியில் கனவு விழித்தது,  
விடியலின் சிரிப்பு உலகை நனைத்தது,  
வாழ்க்கை ஒரு கவிதை என உணர்ந்தது.

சக்தி சக்திதாசன்

Friday, August 22, 2025

அதிசய உலகம் . . . ஏக்கத்தின் அதிர்ச்சி . ..

சின்னச்சிற்பி
சிதறித் தெறிக்கும்
மழைத்துளி
கண்ணப் பறிக்கும்
முத்தாக .. . .

அதிசயித்தேன் . . . .

வர்ணங்கள் பல
வண்ணச் சிறகுகள்
மெல்லப் பறக்கும்
வண்ணத்திப் பூச்சி . . .

அதிசயித்தேன்

சேற்றினில்
செந்தமாரையாய் முகிழ்த்திடும்
கதிரவனின் காதலியாய்
மலரும் 
மலர் கண்டேன்

அதிசயித்தேன்

அம்மா என்றே
அன்பொழுக
அழைத்து ஓடிடும்
பசுக் கன்றினைப்
பார்த்து வியப்பில் . . .

அதிசயித்தேன் . . 

வானமகள்
அந்திமாலையிலே
பொன்னிற ஆடை போர்த்தும்
அழகினைக் கண்டேன்

அதிசயித்தேன். . . .

மலையோடு
உறவாடியந்த முகில்
கொண்ட காதலினால்
பிறந்த ஊற்று
நதியாகி ஓடக் கண்டேன்

அதிசயித்தேன். . ..

பலகோடிச் செலவில்
பகட்டான மாளிகை
பல களிப்பாட்டங்கள்
மிதமிஞ்சி ஊசிப்போய்
வீசும் உணவுக் குவியல் . . .

அதிசயித்தேன் . . .

ஓலைக் குடிசைகள்
ஓவென்று கதறும்
பச்சிளங் குழந்தைகள்
பசியோடு வாடும்
பலநூறு பேர்கள்

ஐய்யய்யோ . . . .

அதிர்ந்தே போனேன். . . .


சக்தி சக்திதாசன்

Friday, July 04, 2025

வீழ்வதில் வெறுப்பு இல்லை, நிற்கிறேன் நெஞ்சுடன்,  
வெற்றியின் வழி தெரியுமே, ஒளிக்குது ஆசையின் உந்துடன்.  
துன்பங்கள் கறுப்பு கொண்டதும், தைரியம் வெள்ளை நினைவுடன்,  
தொடர்கிறேன் பயணத்தை, உயிரின் சத்தமுடன்.

கனவுகள் ஒளி சிதற, நிஜங்கள் நிழலாய்க் நிற்றாலும்,  
கனிவுடன் காலம் போகும், நம்பிக்கை நிலவாக வாழ்கின்றாலும்.  
மனதின் வாசல் திறந்ததும், மாற்றங்கள் வார்த்தை பேச,  
மாற்றம் எங்கு என்றேன், உன்னதம் உள்ளத்தே பேச.

சோர்வுகள் வந்தால் என்ன, சோதனையாய் சில நேரம்,  
சுற்றிலும் நிழல் இருந்தாலும், உள்ளே வெற்றி வீரம்.  
துயரம் துயர் என்றில்லை, துணிவின் ஓசை கேட்டால்,  
தூங்கி எழும் ஒவ்வொரு நாள், திரும்பிப் போய் வென்றால் நான்

பயப்பாடு தோற்றமல்ல, வாழ்வின் ஒரு நிலையிலே,  
பயணம் தான் முக்கியம், நின்றுவிடல் தவறென்பேன்
பிணையாத மனதோடு, பிறப்பதையே நேசித்து,  
படிப்படியாகப் போனாலும், பதிலளிக்க தெரிந்து.
இளமை வணங்க வேண்டாம், எழுச்சி தாழ்ந்துவிடாது,  
இன்றைய பயிற்சி நாளை, உன்னையே உயர்த்தும் நேரம்.  
வீழ்வதெல்லாம் தவம், நின்றதெல்லாம் வழி,  
வெற்றி யாரும் தரமாட்டார்கள் – நீங்கள் ஈட்டி கொள்வதே எழு!

சக்தி சக்திதாசன்

Thursday, June 19, 2025

இயற்கையைக் காப்போம்

மரம்தான் நிழலாக வளர்ந்தது,
மனிதன் அதன் கீழ் தவழ்ந்தான்.
பசுமையும் பசிக்காத புனிதமாம்,
இயற்கையின் சமநிலை வலிமைதான்.

பறவைகள் பாட்டுடன் மலர்களில் நாட்டம்,
வானம் தரும் மேகத்தின் காட்டம்.
ஒவ்வொன்றும் ஒத்துழைக்கும் இசைபோல்,
அக்கூட்டமைப்பு காத்தல் கடமையாம்.

ஆறுகள் ஓடும் ஆதாரமாய்த்,
தந்தையின் அருள் போல் அணுகும்.
அதை கட்டி அடக்கினால் குமுறும்,
உயிர்களுக்கு பிணியாகும் சுமைதான்.

வனங்களை வெட்டும் வெறியர்களே,
வேர் அறுத்தால் உயிரும் உறங்கும்.
பறிப்பதைவிட பழுத்ததை காத்தல்,
பசுமை உலகின் உண்மை உயர்வு.

நம் காலடி ஒவ்வொன்றும் சுவடாகும்,
நாளையோர் பாதை வலிமையாகும்.
இயற்கை சமநிலை காக்கின்றோம் என்றால்,
வாழ்வும் வண்ணமும் தொடரும் என்றும்.

இயற்கையைக் காத்திடத் தோழா
இதயத்தில் எண்ணத்தைக் கொண்டு
இனியேனும் வாழ்ந்தோம் என்றால்
இனிவரும் சந்ததியெமை வாழ்த்திடும்

சக்தி சக்திதாசன்


`
வழுதி நாடன் வனம் தழைக்கும்,  
நிலம் வளர் சூழ்ச்சி மக்களாலே.  
அறம் நிலை செய்கையில்,  
குழி மண்ணும் பூமியும் மேன்மை கொள்கின்றன.  
இது தமிழர் உறுதி.

அத்தைமகன் அன்போடு வழி காட்ட,  
பரிசில் இல்லா உறவு பெரிது.  
உயிரின் தாய்மூலம் பேணும் செயல்கள்,  
 கூடு கொண்ட வாழ்வில் கண்ணியத்தையே.  
இதுவே நம் உறவு நெறி.

தூய்மை செல்வம், தூண் தாங்கும் ஊர்,  
சான்றோர் வாக்கு சீரிய பாணி.  
ஓங்கும் அறவியல், ஒழுக்கம் சிறந்த வாழ்வு,  
ஏமாறாத சிந்தை உருவாக்கும்.  
 மக்கட்கென வேண்டிய மார்க்கம் இது.

உழவன் தோட்டத்தில் நாற்றுக் கிழமை,  
ஈரமெய்தி நெற்கதிர் பாடும்.  
வையம் பெறும் செல்வம், வானம் காக்கும்,  
வெண்குடை நீழல் விரியும் நாடு.  
தொழில்நெறி தொன்மையின் சாட்சி.

பாலை வாடா நெஞ்சு படைத்து,  
ஒன்றி வாழும் ஊர்சிறப்பும்.  
எண்ணமொன்று மொழியொன்று எனப் பேணித்,  
கடவுள் தரும் வளம் பெருகும்.  
ஒன்றுபாடே மக்கடென்று கூறலாம்.

சக்தி சக்திதாசன்
`

Wednesday, June 18, 2025

என் அறுபதுகளின் மத்தியில்

என் அறுபதுகளின் அமைதியில்  
மெதுவாய் வந்து சாய்கிறது 
நினைவின் நிழல்  
மண்ணின் வாசனையும்,  
தமிழின் மெளனமும் கூட,  
என் மொழியாய், 
என் மூச்சாய் இருந்தன.  

பால்குடத்தின் ஓரங்களில்  
சிரிப்புகள் பூத்திருந்தன –  
நட்புகள் வெறும் 
பெயர்களல்ல,  
நரம்புகளாக நான் 
அனுபவித்த வாத்தியங்கள்!  

திருக்குறளின் சத்தம் 
கேட்கும் வரை  
நான் என் அம்மாவின் 
மொழியில் வளர்ந்தேன்.  
அந்த நதி எனது நெஞ்சில் 
ஓடிக் கொண்டே இருக்கிறது,  
வேர் அறுக்க முடியாத பாச நதி.  

இப்போது, 
வானத்தின் உச்சியில் நின்று  
கீழே நோக்கும்போது,  
அவளும் (தமிழும்), 
அவனும் (மண்ணும்),  
என்றும் என் உள்ளத்தில் 
வாழ்கின்றனர்.

நினைவுகளின் வேர்களாய்
புலம்பெயர்ந்த மண்ணில்
அனுபவக் கிளைகளாய் இன்று
ஞாபகக் கனிகள் பழுத்துத்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
பறித்து இனிய தமிழ்க்
கவிதைகளாய்ச் சுவைத்துக்
கொண்டே நடக்கிறேன்

உள்ளத்தின் மத்தியில்
மெளனமாய் பல இன்பச்
சத்தங்கள் சிணுங்கிக் கொண்டே
உறங்க மறுக்கின்றன
தாலாட்டுப் பாடிக் கொண்டே
தாய்மொழியின் வர்ணம் கொண்டு
கவிதைச் சித்திரங்கள்
வடித்துக்கொண்டு வாழ்கிறேன்

சக்தி சக்திதாசன்

Sunday, June 15, 2025

தொலைத்து விட்டேன்

தொலைத்து விட்டேன்
ஈரமான இதயப் பகுதியை
ஈனமான இவ்வுலகென்னும்
புதருக்குள் தொலைத்து விட்டேன்
சுயம் எனும் என்னை நான்
நலம் மட்டும் எண்ணியதால்
நானிலத்தின் நடுவினிலே
தொலைத்து விட்டேன்

கனமான உணர்வுகள்
கணிசமான நினைவுகள்
முடிவில்லாத் தொடர்கதையாய்
முடிக்கமுடியா ஒவியங்கள்
முடிச்சவிழ்க்கும் திறனற்ற
மூடர்களின் யாத்திரைகள்
முகமூடியை அகற்றி விட்டால்
முழு வடிவம் நிதர்சனம்

உருளுமிந்த உலகத்தினுள்
உருண்டோடும் காலத்தோடு
ஓடிக்கொண்டே வாழ்ந்திருக்கும்
ஒப்பற்ற மானிட வர்க்கமிதுவோ ?
எண்சாண் உடலைக் காக்க
எண்ணமுடியா கணத்தினிலே
எத்தனையோ உயிரழித்து போரிடுவார்
எதற்கிந்த பேராசைப் பேரழிவு ?

இணையற்ற அறிவுடையோர் என்றே
ஈடில்லாப் புகழை தமக்கிடுவார்
இரக்கமில்லா மனம் கொண்டு
அரக்கத்தனமான உணர்வுகளோடு
இயற்கையை அழித்து தாமிங்கு
இறைவனைத் தேடிடுவார் பாவமிவர்
எதைத்தேடி எங்கு செல்கின்றார்
எப்போதுமிவர் பொய்மையை நம்புவார்

காலமது நிச்சயம் மாறிடும்
கருத்தினில் தெளிவு பிறந்திடும்
நேற்றைய முடிவில்லாப் பயணங்கள்
நாளையந்த ஊர் போய்ச் சேர்ந்திடும்
ஆன்மாவின் ஆடலுக்கு உடலென்னும்
உடையணிந்து வாழ்வெனும் தோட்டத்தில்
அனுபவப் பூக்கள் பறிக்கின்றோம்
மாலையொன்றைத் தொடுத்திடுவோம்
பரம்பொருளில் அணிவிப்பதற்காய்

சக்தி சக்திதாசன்

Monday, April 07, 2025

ஆன்மாவின் ராகமின்று கேட்பதனால்

இதயத்தின் ஓரத்தில்
ஏதோ ஒரு சங்கீதம்
ஏதோவொரு பாட்டு அதற்கு
எவரோ தந்த ராகம்
சொல்லாத சொற்களுக்குள்
சுகமான தத்துவங்கள்
என்மன வெளிச்சத்துக்கு
நானே இட்டுக்கொண்ட திரைகள்
மூடிக் கொண்ட காரணத்தால்
முடியாமல் போன முக்கோணம்

காலம் என்னும் படகினிலே
கரைதேடும்.பயணமொன்றில்
கற்றுக்.கொண்ட பாடங்களில்
சற்றும் குன்றா ஞான விளக்கங்கள்
தொட்டுச் சென்ற கணங்களுக்குள்
தொடமுடியா கனவுகள்
விட்டுப்போன நினைவுகளை
விலக்க முடியா பிணைப்புகள்
விளங்கிக் கொண்ட பொழுதினில்
விந்தையான உணர்வுகள்

நானே எழுதி நானே நடிக்குமொரு
நாடகமே வாழ்க்கையெனும்
நிஜத்தினை புரிந்து கொள்ள
நீளமான பயணமாய் நெடுந்தூரம்
பாய்மரத்தைக் கட்டி விட்டேன்
காற்றடிக்கும் திசையறியாமல்
நடுக்கடலில் நங்கூரமிட்டு 
வழிதேடும் பயணமொன்றின் பரிதாபம்
சுழலுகின்ற பூமியின் நடுவில்
விழலுக்கிறைத்த நீர் இதுவோ ?

காலையொன்றின் விடிதலுக்குள்
கவிதையொன்று முகிழ்க்கிறது
காததுரம் ஓடிவிட்ட காரணத்தால்
கால்கள் கொஞ்சம் வலிக்கிறதோ ?
முதிர்ந்துபோன உள்ளமொன்றுள்
மூடிவிட்ட மேகங்களாய் ஞாபகங்கள்
பொழிகின்ற மழைநீராய் வரிகளைப்
பொழிந்து தள்ளும் உணர்வுச்சுழல்
அடிநாதம் ஒலிக்குதம்மா என்னுள்ள
ஆன்மாவின் ராகமின்று கேட்பதனால்

சக்தி சக்திதாசன்

Monday, March 31, 2025

நதியாய் வாழ்ந்திடுவோம்

மலையிலே பிறந்த ஊற்று
மடை திறந்த வெள்ளமாய்
மணற்படுகை வழியோடி
மகிழ்ந்தோடும் நதியாக
மனம்மகிழ்ந்து துள்ளியாடும்
மீன்கள் அதில் விளையாடும்

கரையோரம் வளர்ந்திருக்கும்
காட்சிநிறை பசுமைதனை
நீரூற்றி செழிப்பாக்கி
நிலமெலாம் ஈரம் விதைத்து
வளைந்தோடும் வழிசமைத்து
விரைந்தோடும் நதிமங்கை

பாறைகளில் பட்டுத் தெளித்து
பன்னீர் புஷ்பங்களாய் மலர்ந்து
தவித்திருக்கும் மக்கள் மகிழ்ந்திட
தாகம் தீர்த்து பயணிக்கும்
ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்
அந்தஸ்து பார்க்காத அன்புப் புனல்

இயற்கையன்னை வரமன்றோ
இறையருளின் கொடையன்றோ
யார் கேட்டு யார் கொடுத்தார் ?
ஊர் வாழ்ந்திட ஊற்றாய் உருவாகி
இடையறாத வேகத்துடன் ஓடும்
இன்பமூலம் அந்த நதியென்பேனோ ?

ஓடுகின்ற நதிமகளின் பயணம்
தேடுமொரு ஆழியை ஆறாமல்
வழியல்லாம் பல உயிர்களை
வாழவைத்து அந்நதி தொடரும்
வாழ்வெமக்கு இனிக்க வேண்டுமெனில்
வாழவேண்டும் அந்நதியைப் போல

சக்தி சக்திதாசன்


Wednesday, March 12, 2025

கண்களின் ஓரத்திலே

கண்களின் ஓரத்திலே
கனவினைத் தவழவிட்டு
காலத்தின் சுழற்சியிலே
கலைத்திடும் விதமொன்று

ஞாலத்தின் மையத்தில்
கோலத்தின் மாற்றத்தின்
ஆழத்தின் தாக்கத்தால்
மூலத்தின் தேடலொன்று

நீலத்தைத் தொலைத்து
நிற்குமந்த வானத்தின்
நிலைகுலைந்த தோற்றமாய்
நிதர்சனத்தின் விளக்கங்கள்

நாண்பூட்டிய வில்லொன்றின்
வேகத்தின் ஆற்றலைப்போல்
விவேகத்தின் கூர்மையினால்
விலையாகிய வாதங்கள்

ஒன்றென்றும் இரண்டென்றும்
ஒவ்வொன்றும் தொடர்ந்திடும்
ஒன்றல்ல இரண்டல்லவே
ஓராயிரம் கருத்தாடல்கள்

வந்திங்கு பிறந்ததுவும்
வாசலது மூடிடுமே
வாழ்க்கையில் கடைசிவரை
வருவதெல்லாம் அனுபவமே !

அடைந்தகரை ஓரத்திலே
ஆனந்தநிலை சயனத்திலே
அமைதிசூழ் கணத்தினிலே
ஆன்மாவின் சங்கீதம்

சக்தி சக்திதாசன்



Thursday, March 06, 2025

காணாத பொழுதொன்றில்

காணாத பொழுதொன்றில்
தேடாத காட்சிகளாய்
மூடாத விழிகளுக்குள்
முடியாத தொடரலைகள்

தனக்குள்ளே விதைத்திட்ட
தானறியா வேதங்கள்
தானாகப் புலருகின்ற
தத்துவப் பொழுதிதுவோ ?

விளக்கமில்லா சாத்திரங்கள்
விளங்கிட வேளையில்லை
விவேகத்தின் வேட்கையால்
விலக்கியிங்கு ஓடுகிறோம்

புரியாத காரணத்தால்
புரட்சியெனும் பெயர்சூட்டி
புலம்பியோடிய வாலிபத்தில்
குழம்பிப்போன மெய்ப்பொருள்

சலனமில்லா பொழுதைத்தேடி
சத்தியத்தின் பயணமென்று
சிந்தனையின் சிதறலினால்
சிதைந்துபோன கணங்கள்

முடிந்துபோன நேற்றைகளும்
முளக்கப்போகும் நாளைகளும்
சுமைகளன்றி எதுவுமில்லை
சுவைக்காவிட்டால் இன்றைகளை

சுவரில்பட்டு திரும்பிவரும்
சீறிவரும் பந்துபோல
சுவைக்காத அனுபவங்களுக்காய்
சுழன்றுவரும் ஆன்மாவும்

அடைகின்ற அத்தனையும்
ஆன்மாவின் ஆசைகளே
அனுபவத்தின் உச்சத்தில்
ஆன்மீகக் கொடியுயரும்

சக்தி சக்திதாசன்

Saturday, February 22, 2025

காலங்களின்

காலங்களின் வாசலில்
கவிதைகளின் வாசம்
கண்களின் பார்வைக்குள்
காண்பதென்ன வேஷம் ?

பூசுகின்ற வர்ணங்களாய்
பூக்களின் இதழ்களில்
புதிதான புரிதல்கள்
புகட்டுகின்ற பாடங்கள்

காலையிலே மலர்வதும்
மாலையிலே உதிர்வதும்
மலர்களுக்கு புதிதல்ல
மனிதர்க்கே மயக்கங்கள்

பருத்தியின் வரவினால்
பட்டாடை பகட்டாகும்
உடுக்கின்ற மனிதர்
உணர்வரோ மூலத்தை

அகிலத்தின் பரப்பினிலே
அனைத்துக்கும் பொருளுண்டு
அதையறியா உள்ளங்கள்
அடைந்திடாத ஞானங்கள்

விடைதேடி அலைகின்ற
வினாக்களின் பயணங்கள்
வழியெங்கும் விரயமாகும்
வீணாகும் நேரங்கள்

முடிவில்லாக் கதைகளுக்கு
முடிவுதேடும் மூடர்கள்
முழுச்சோற்றில் பூசணிக்காய்
முயன்றாலும் மறைந்திடுமோ ?

கவிதைகளின் வரிகளுக்குள்
கரைந்திடும் கருத்துகள்
கற்றுக்கொண்ட பாடங்கள்
கடைசிவரை அனுபவங்களாய்

சக்தி சக்திதாசன்