Monday, March 31, 2025

நதியாய் வாழ்ந்திடுவோம்

மலையிலே பிறந்த ஊற்று
மடை திறந்த வெள்ளமாய்
மணற்படுகை வழியோடி
மகிழ்ந்தோடும் நதியாக
மனம்மகிழ்ந்து துள்ளியாடும்
மீன்கள் அதில் விளையாடும்

கரையோரம் வளர்ந்திருக்கும்
காட்சிநிறை பசுமைதனை
நீரூற்றி செழிப்பாக்கி
நிலமெலாம் ஈரம் விதைத்து
வளைந்தோடும் வழிசமைத்து
விரைந்தோடும் நதிமங்கை

பாறைகளில் பட்டுத் தெளித்து
பன்னீர் புஷ்பங்களாய் மலர்ந்து
தவித்திருக்கும் மக்கள் மகிழ்ந்திட
தாகம் தீர்த்து பயணிக்கும்
ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்
அந்தஸ்து பார்க்காத அன்புப் புனல்

இயற்கையன்னை வரமன்றோ
இறையருளின் கொடையன்றோ
யார் கேட்டு யார் கொடுத்தார் ?
ஊர் வாழ்ந்திட ஊற்றாய் உருவாகி
இடையறாத வேகத்துடன் ஓடும்
இன்பமூலம் அந்த நதியென்பேனோ ?

ஓடுகின்ற நதிமகளின் பயணம்
தேடுமொரு ஆழியை ஆறாமல்
வழியல்லாம் பல உயிர்களை
வாழவைத்து அந்நதி தொடரும்
வாழ்வெமக்கு இனிக்க வேண்டுமெனில்
வாழவேண்டும் அந்நதியைப் போல

சக்தி சக்திதாசன்