கண்களின் ஓரத்திலே
கனவினைத் தவழவிட்டு
காலத்தின் சுழற்சியிலே
கலைத்திடும் விதமொன்று
ஞாலத்தின் மையத்தில்
கோலத்தின் மாற்றத்தின்
ஆழத்தின் தாக்கத்தால்
மூலத்தின் தேடலொன்று
நீலத்தைத் தொலைத்து
நிற்குமந்த வானத்தின்
நிலைகுலைந்த தோற்றமாய்
நிதர்சனத்தின் விளக்கங்கள்
நாண்பூட்டிய வில்லொன்றின்
வேகத்தின் ஆற்றலைப்போல்
விவேகத்தின் கூர்மையினால்
விலையாகிய வாதங்கள்
ஒன்றென்றும் இரண்டென்றும்
ஒவ்வொன்றும் தொடர்ந்திடும்
ஒன்றல்ல இரண்டல்லவே
ஓராயிரம் கருத்தாடல்கள்
வந்திங்கு பிறந்ததுவும்
வாசலது மூடிடுமே
வாழ்க்கையில் கடைசிவரை
வருவதெல்லாம் அனுபவமே !
அடைந்தகரை ஓரத்திலே
ஆனந்தநிலை சயனத்திலே
அமைதிசூழ் கணத்தினிலே
ஆன்மாவின் சங்கீதம்
சக்தி சக்திதாசன்
