காலங்களின் வாசலில்
கவிதைகளின் வாசம்
கண்களின் பார்வைக்குள்
காண்பதென்ன வேஷம் ?
பூசுகின்ற வர்ணங்களாய்
பூக்களின் இதழ்களில்
புதிதான புரிதல்கள்
புகட்டுகின்ற பாடங்கள்
காலையிலே மலர்வதும்
மாலையிலே உதிர்வதும்
மலர்களுக்கு புதிதல்ல
மனிதர்க்கே மயக்கங்கள்
பருத்தியின் வரவினால்
பட்டாடை பகட்டாகும்
உடுக்கின்ற மனிதர்
உணர்வரோ மூலத்தை
அகிலத்தின் பரப்பினிலே
அனைத்துக்கும் பொருளுண்டு
அதையறியா உள்ளங்கள்
அடைந்திடாத ஞானங்கள்
விடைதேடி அலைகின்ற
வினாக்களின் பயணங்கள்
வழியெங்கும் விரயமாகும்
வீணாகும் நேரங்கள்
முடிவில்லாக் கதைகளுக்கு
முடிவுதேடும் மூடர்கள்
முழுச்சோற்றில் பூசணிக்காய்
முயன்றாலும் மறைந்திடுமோ ?
கவிதைகளின் வரிகளுக்குள்
கரைந்திடும் கருத்துகள்
கற்றுக்கொண்ட பாடங்கள்
கடைசிவரை அனுபவங்களாய்
சக்தி சக்திதாசன்
