Sunday, June 15, 2025

தொலைத்து விட்டேன்

தொலைத்து விட்டேன்
ஈரமான இதயப் பகுதியை
ஈனமான இவ்வுலகென்னும்
புதருக்குள் தொலைத்து விட்டேன்
சுயம் எனும் என்னை நான்
நலம் மட்டும் எண்ணியதால்
நானிலத்தின் நடுவினிலே
தொலைத்து விட்டேன்

கனமான உணர்வுகள்
கணிசமான நினைவுகள்
முடிவில்லாத் தொடர்கதையாய்
முடிக்கமுடியா ஒவியங்கள்
முடிச்சவிழ்க்கும் திறனற்ற
மூடர்களின் யாத்திரைகள்
முகமூடியை அகற்றி விட்டால்
முழு வடிவம் நிதர்சனம்

உருளுமிந்த உலகத்தினுள்
உருண்டோடும் காலத்தோடு
ஓடிக்கொண்டே வாழ்ந்திருக்கும்
ஒப்பற்ற மானிட வர்க்கமிதுவோ ?
எண்சாண் உடலைக் காக்க
எண்ணமுடியா கணத்தினிலே
எத்தனையோ உயிரழித்து போரிடுவார்
எதற்கிந்த பேராசைப் பேரழிவு ?

இணையற்ற அறிவுடையோர் என்றே
ஈடில்லாப் புகழை தமக்கிடுவார்
இரக்கமில்லா மனம் கொண்டு
அரக்கத்தனமான உணர்வுகளோடு
இயற்கையை அழித்து தாமிங்கு
இறைவனைத் தேடிடுவார் பாவமிவர்
எதைத்தேடி எங்கு செல்கின்றார்
எப்போதுமிவர் பொய்மையை நம்புவார்

காலமது நிச்சயம் மாறிடும்
கருத்தினில் தெளிவு பிறந்திடும்
நேற்றைய முடிவில்லாப் பயணங்கள்
நாளையந்த ஊர் போய்ச் சேர்ந்திடும்
ஆன்மாவின் ஆடலுக்கு உடலென்னும்
உடையணிந்து வாழ்வெனும் தோட்டத்தில்
அனுபவப் பூக்கள் பறிக்கின்றோம்
மாலையொன்றைத் தொடுத்திடுவோம்
பரம்பொருளில் அணிவிப்பதற்காய்

சக்தி சக்திதாசன்