Saturday, March 30, 2024

தியானம் எனுமொரு சிறப்பு



உரு.ண்டோடும் 
உலகே !
அவசரமாய் எங்கே நீ
ஆவலாய் ஓடுகிறாய் ?

சுழன்றோடும் உன்னுள்
எத்தனை
சுவாரஸ்யங்கள் . . . 
இருக்கென்ற மமதையில்
இரக்கத்தைத் தொலைத்து
விடிந்த பின்னும்
இருளினுள் புதைந்து போன 
மானிடர்கள் . . . 

இல்லை, இல்லை என்றே
இரைந்து கொண்டு 
இருப்பதையும் தொலைத்து
அலைந்திடும் கூட்டம் . . . 

போதாது . . . போதாது என்றே
போதை கொண்டு ஆசையில்
வாழ்வெல்லாம் தேடிக்கொண்டே
அலைந்திடும் ஒரு கூட்டம் 

உள்ளத்தில் இருளையும்
உணர்வினில் சுயநலத்தையும்
ஆடையாய் அணிந்து கொண்டு 
அருள் தேடி ஆலயத்தினுள்
ஆண்டவனை வேண்டும்
அதிசயமான ஒரு கூட்டம்

கிடைத்ததைப் பிரித்து 
பசித்தவர் புசித்திட தரும்
அன்பினைக் கொண்டே வாழும்
அற்புதப் பிறவிகளாய் ஒரு கூட்டம்

இத்தனை கண்டு அதனை
இதயத்தில் கொண்டு மெதுவாய்
உருண்டிடும் உலகே உன்னுள்
உருள்வது தெரியாமலே நாமும்
உழன்று கொண்டே செல்கின்றோம்

உள்ளத்துள் எம்முள் கொஞ்சம்
ஆழமாய் நுழைந்தங்கே
உறைந்திருக்கும் ஆன்மாவின்
குரலை கேட்டிடும் வழியைத்
தொலைத்து விட்டு நாமும் ஏனோ
காலத்தையும் கண்டதையும்
காரணமாய்ச் சொல்லிக்கொண்டே
உலகத்தோடு உருள்கின்றோம்

எதையுமே துறக்காமல் வாழ்வில்
எதையுமே இழக்காமல் எம்முள்
எம்மைத் தேட சில மணித்துளிகள்
எமக்காய்ச் செலவிடத் துணிந்தால்
கிடைத்திடும் அமைதி சுலபமாய்
உறைந்திடும் அமைதி உள்ளத்துள்
இதற்கென ஒரு திறப்பு அதுதான்
தியானம் எனுமொரு சிறப்பு

சக்தி சக்திதாசன்