Thursday, March 06, 2025

காணாத பொழுதொன்றில்

காணாத பொழுதொன்றில்
தேடாத காட்சிகளாய்
மூடாத விழிகளுக்குள்
முடியாத தொடரலைகள்

தனக்குள்ளே விதைத்திட்ட
தானறியா வேதங்கள்
தானாகப் புலருகின்ற
தத்துவப் பொழுதிதுவோ ?

விளக்கமில்லா சாத்திரங்கள்
விளங்கிட வேளையில்லை
விவேகத்தின் வேட்கையால்
விலக்கியிங்கு ஓடுகிறோம்

புரியாத காரணத்தால்
புரட்சியெனும் பெயர்சூட்டி
புலம்பியோடிய வாலிபத்தில்
குழம்பிப்போன மெய்ப்பொருள்

சலனமில்லா பொழுதைத்தேடி
சத்தியத்தின் பயணமென்று
சிந்தனையின் சிதறலினால்
சிதைந்துபோன கணங்கள்

முடிந்துபோன நேற்றைகளும்
முளக்கப்போகும் நாளைகளும்
சுமைகளன்றி எதுவுமில்லை
சுவைக்காவிட்டால் இன்றைகளை

சுவரில்பட்டு திரும்பிவரும்
சீறிவரும் பந்துபோல
சுவைக்காத அனுபவங்களுக்காய்
சுழன்றுவரும் ஆன்மாவும்

அடைகின்ற அத்தனையும்
ஆன்மாவின் ஆசைகளே
அனுபவத்தின் உச்சத்தில்
ஆன்மீகக் கொடியுயரும்

சக்தி சக்திதாசன்