Wednesday, June 18, 2025

என் அறுபதுகளின் மத்தியில்

என் அறுபதுகளின் அமைதியில்  
மெதுவாய் வந்து சாய்கிறது 
நினைவின் நிழல்  
மண்ணின் வாசனையும்,  
தமிழின் மெளனமும் கூட,  
என் மொழியாய், 
என் மூச்சாய் இருந்தன.  

பால்குடத்தின் ஓரங்களில்  
சிரிப்புகள் பூத்திருந்தன –  
நட்புகள் வெறும் 
பெயர்களல்ல,  
நரம்புகளாக நான் 
அனுபவித்த வாத்தியங்கள்!  

திருக்குறளின் சத்தம் 
கேட்கும் வரை  
நான் என் அம்மாவின் 
மொழியில் வளர்ந்தேன்.  
அந்த நதி எனது நெஞ்சில் 
ஓடிக் கொண்டே இருக்கிறது,  
வேர் அறுக்க முடியாத பாச நதி.  

இப்போது, 
வானத்தின் உச்சியில் நின்று  
கீழே நோக்கும்போது,  
அவளும் (தமிழும்), 
அவனும் (மண்ணும்),  
என்றும் என் உள்ளத்தில் 
வாழ்கின்றனர்.

நினைவுகளின் வேர்களாய்
புலம்பெயர்ந்த மண்ணில்
அனுபவக் கிளைகளாய் இன்று
ஞாபகக் கனிகள் பழுத்துத்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
பறித்து இனிய தமிழ்க்
கவிதைகளாய்ச் சுவைத்துக்
கொண்டே நடக்கிறேன்

உள்ளத்தின் மத்தியில்
மெளனமாய் பல இன்பச்
சத்தங்கள் சிணுங்கிக் கொண்டே
உறங்க மறுக்கின்றன
தாலாட்டுப் பாடிக் கொண்டே
தாய்மொழியின் வர்ணம் கொண்டு
கவிதைச் சித்திரங்கள்
வடித்துக்கொண்டு வாழ்கிறேன்

சக்தி சக்திதாசன்