Wednesday, June 10, 2026

சிந்திக்க மறந்தாயா ? தோழா !

சிந்திக்க மறந்தாயா ? தோழா !
சிதைவுற்ற நானிலத்தின்
நலிவுற்ற மக்கள் நிலையை
உள்ளத்தின் உணர்வுகள் உறங்கிடலாமோ ?
உயிர்களின் வலிகளை மறந்திடலாமோ ?
சிந்திக்க மறந்தாயா ? தோழா !

நீரூற்றிப் பயிர் செய்யும்
தோழனவன் பாவம்
கண் நீரூற்றி வாழ்கின்றான்
ஏர் கொண்டு உழுதிடும்
சமுதாயச் சேவகன் வாழ்வோடு
போர் செய்து ஜீவிக்கின்றான்
சிந்திக்க மறந்தாயா தோழா !

நாள்தோறும் தொழிற்சாலையில் 
இயந்திரங்களோடு இயந்திரமாக
இயங்கிடும் உழைப்பாளித் தோழன்
உருக்குலைந்து வாழும் நிலை
மறந்தாயா என்னருமைத் தோழா !

எப்போது விழிப்பாய் நண்பனே !
இனியோர் பாரதியோ அன்றிப்
பாரதிதாசனோ தோன்றி உன்
உணர்வுகளைத் தட்டி எழுப்பினால்
உன் விழிகளைத் திறப்பாயா ?
இனியேனும் உண்மையை உணர்வாயா ?

காலங்கள் மாறிவிட்டது நாமும்
காலத்தோடு மாறவேண்டும் என்பார்
யதார்த்தம் அதுதான் என்றாலும்
காலமாற்றத்தின் பெயரால்
சமுதாயச் சீர்கேட்டை, சமனற்ற
விளையாட்டுத் திடலை மறைக்க
முயன்றிடும் அதிகார வர்க்கத்தின்
முறையற்ற அரசியலை நீயும்
முழித்துப் பார்க்க வேண்டாமா ?

உள்ளவர் இழக்கவேண்டும்
என்பதல்ல வாதம், இல்லாதவர்
உயர என்னவழி என்று சிந்திப்பதே
நானிலம் செழிக்க உழைக்கும்
நல்லவர் வாழ்வினை உயர்த்தவழி
சுயம் என்று ஒன்றை நீ உணர்ந்தால்
சுதந்திரம் என்பதன் பொருள் புரியும்

வயிற்றில் பசியோடு பள்ளிக்குச் செல்லும்
வாலிபன் கனவுகள் வாடுகின்றன
புத்தகச் சுமையினும் வறுமைச் சுமை கொண்டு
புல்லரித்து நிற்கும் அந்த உள்ளம்
அறியாமையை யாரேனும் போக்கிடாவிடில்
அடுத்த தலைமுறையும் அழிந்திடாதோ
சிந்திக்க மறந்தாயா தோழா !

ஊதியமின்றி உழைத்த கரங்களால்
உலகை வளர்த்தவர் ஓரம் தள்ளப்படுகின்றனர்
சந்தையில் பொருளுக்கு விலை நிர்ணயிப்பவன்
சாப்பிடும் உணவுக்கு விலை தெரியாதவன்
உழைப்பின் மதிப்பை யாரேனும் கேட்கையில்
உடைந்து நிற்கின்றது நீதியின் தராசு
விழிப்படைய வேண்டாமா தோழா !

ஆற்றோர வாழ்விலும் தாகம் தணியாமல்
அலையும் விவசாயி நிலை அறிவாயா
நிலமகள் கண்ணீரை நிலமே குடிக்கையில்
நெஞ்சம் கலங்காத நீ மண்ணா கல்லா
பயிரை விற்று கடனை அடைப்பவன்
பரிதாபமாய் பறந்திடும் உயிர்களை
மறந்துவிட்டாயா என்றும் தோழா !

கோயில் கோபுரங்கள் உயர்கின்றன இன்று
கோடிகள் செலவழிக்கும் கொண்டாட்டங்கள் வளர்கின்றன
ஆனால் அடிமட்ட மனிதன் வீட்டில்
அகல் விளக்கேற்ற அரிசியில்லை என்று
வாழ்வின் முரண்பாடை வரிந்துகட்டி
வழிமாற்றிட உனக்கு வலிமையுண்டு தோழா
எழுந்து நில் இனியாவது தோழா

தூங்கிக் கொண்டே நடக்காதே தோழா !
கனவிலேயே வாழ்வு கழிந்து விடும்
நாளைய உலகின் புத்தொளிக்கு சக்தி
தோழா உன் கரங்களில் உண்டு
சிந்தனையைத் தட்டிவிடு உடனே
செயற்திறனை முடுக்கிவிடு
தோழா உன்னால் முடியும்.

சக்தி சக்திதாசன்

Tuesday, June 09, 2026

அதோ !அங்கே !அப்படியே !

அதோ !
அங்கே !
அப்படியே !
வடிக்க முடியா ஓவியமாய்
படிக்க முடியா காவியமாய்
எழுத முடியா கவிதைவரிகளாய்
விளக்க முடியா சித்தாங்கங்களாக
குழம்பிப் போன சமூகச் சிந்தனைகள்

அதோ !
அங்கே !
அப்படியே !
தொடர முடியா பயணமாய்
முடிய முடியா கதையாய்
திரும்ப முடியா நேர்த்தியாய்
புரிய முடியா வலிகளாக
தேய்ந்துபோன மனித உறவுகள்

அதோ !
அங்கே !
அப்படியே !
அளக்க முடியா வேதனையாய்
பகிர முடியா தனிமையாய்
தீர்க்க முடியா தாகமாய்
மறக்க முடியா நினைவலைகளாக
உறைந்துபோன இதய ஆழங்கள்

அதோ !
அங்கே !
அப்படியே !
பிடிக்க முடியா காற்றாய்
கட்ட முடியா நதியாய்
நிறுத்த முடியா நேரமாய்
மீட்க முடியா இளமைகளாக
கரைந்துபோன வாழ்க்கை மாயங்கள்

அதோ !
அங்கே !
அப்படியே !
சொல்ல முடியா உண்மையாய்
கேட்க முடியா அலறலாய்
காண முடியா இருளாய்
தேட முடியா விடைகளாக
சிதைந்துபோன நீதி கனவுகள்

அதோ !
அங்கே !
அப்படியே !
தொட முடியா விண்ணாய்
தாண்ட முடியா கடலாய்
மாற்ற முடியா விதியாய்
உடைக்க முடியா சுவர்களாக
சிறைப்பட்ட சுதந்திர ஆசைகள்

அதோ !
அங்கே !
அப்படியே !
எண்ண முடியா இழப்பாய்
அழ முடியா துயரமாய்
சிரிக்க முடியா சோர்வாய்
எழ முடியா விழுதுகளாக
நொறுங்கிப்போன தலைமுறை நம்பிக்கைகள்

அதோ !
அங்கே !
அப்படியே !
பிரிக்க முடியா நிழலாய்
கொல்ல முடியா கேள்வியாய்
அடக்க முடியா தீயாய்
அணைக்க முடியா வேர்களாக
துடிக்கும் மண்ணின் மௌன ஆவிகள்

சக்தி சக்திதாசன்

Monday, June 08, 2026

சில நிமிடங்கள் !. . .

சில நிமிடங்கள்  !. . . 
ஆம் சிலவே சில 
நிமிடங்கள் தான் !
நெஞ்சின் உணர்வுகள் ஏதோ
நெருடிக் கொள்கின்றன . . . .
ஓ !
உண்மை உயிர்வாழ்வதும் அந்த
ஒரு சில கணங்கள் தானோ ? 

அந்த
சில நிமிடங்களுக்குள்
தான் எத்தனை சில்மிஷங்கள்
சித்தரிக்க தெரியாத
தெறித்தோடும் உணர்வுத் துளிகள்

விளையாட்டாய்
தொடங்கும் வாழ்க்கை ஏனோ
வினையாகி முடிவதும்
வினையென்று எண்ணிய
வாழ்க்கை விளையாட்டாய்
முடிந்து போவதும் ........

முடிவு இல்லாத
தொடர்கதைகள் பலர் வாழ்வு
முற்றுப் பெறாத காவியங்களாய்
கனக்கின்ற சுமைகளாய் சிலர்
தொடக்கமில்லா முடிவுகள்
முடிவில்லாத தொடக்கங்கள்

சில கணங்கள் தான்
சிலிர்க்கும் நினைவுகள்
சிந்தனையின் சுவடுகளில்
சிக்கி நிற்கும் மௌனங்கள்

பேசாத வார்த்தைகள்
பெருகி வழியும் போது
பேசிவிட்ட வாழ்க்கையே
போதாததாய் தோன்றுமோ

இமைக்கும் நேரத்தில்
இழந்துபோகும் காலம்
இமைக்காமல் பார்த்தாலும்
இடைவெளி தராத ஓட்டம்

நேற்றின் நிழல்கள்
நாளையைக் கேள்வி கேட்க
இன்றைய உண்மைகள்
இடையில் தத்தளிக்கின்றன

தொடர்ந்த பாதைகள்
தொலைவில் தொலைந்து போக
தொலைந்த பாதைகள்
தொடக்கமாகி விடுகின்றன

வாழ்க்கை என்றால்
வழியில்லா பயணமோ
அல்லது வழியே வாழ்க்கையா
வினாவும் நெஞ்சம் நின்றதேயில்லை

சக்தி சக்திதாசன்

Sunday, June 07, 2026

காலங்கள் ஓடுது

காலங்கள் ஓடுது
காட்சிகள் மாறுது
கனவுகள் கலையுது
கவிதைகள் மலருது

நினைவுகள் உருளுது
நெஞ்சங்கள் அலையுது
நேரங்கள் விரையுது
நிகழ்வுகள் நிகருது

அரும்புகள் விரியுது
ஆசைகள் பெருகுது
ஆனந்தம் ததும்புது
ஆர்வத்தில் துடிக்குது

வாழ்க்கையின் வாழ்வது
வரைமுறை புரியுது
வந்தது தெரியுது
வழியது மறையுது

மழைகள் பொழியுது
மனங்கள் நனையுது
மர்மங்கள் மறையுது
மௌனங்கள் பேசுது

ஒளிகள் பிறக்குது
உண்மைகள் தெரியுது
உறவுகள் இணையுது
உயிர்கள் இசைக்குது

பாதைகள் திரியுது
பயணங்கள் தொடருது
பார்வைகள் அழியுது
பாரங்கள் குறையுது

சிந்தைகள் சுழலுது
சிறகுகள் விரியுது
சுகங்கள் பெருகுது
சுரங்கள் இசைக்குது

சக்தி சக்திதாசன்

Friday, June 05, 2026

புதுவழிகளைச் சமைத்திட உழைத்திடுவீர் !

புதுவழிகளைச் சமைத்திட உழைத்திடுவீர் !

​மேற்கே விழுந்த ஆதவன்
அதோ ......
கிழக்கே மீண்டும் வலுவாய்
எழுந்திட்டான் பாராய் !

​இருளைத் துரத்தி
இகத்தினில் ஒளியைப் பரப்பி
பொழுது விடிந்து விட்டதே ...
தோழா .. நீயும்
தோளை நிமிர்த்து

​நாளைய உலகின் வழிகளைத்
தேடிப் பாவம் எங்கள்
தேகம் இழைத்த சோதரர்கள்
பாதைகள் தோறும்
ஓடிடும் காட்சியைக் கண்டாயா?

​காலம் எமக்காய் ஒருபோதும்
காத்துக் கிடப்பதில்லை தோழா !
முயற்சி எனும் சக்கரத்தை
முழுப்பலத்துடன் நாமேதான்
உருட்டிட வேண்டும் மறக்காதே !

​தேவைகள் என்றும் தீர்வதில்லை
ஆசைகள் என்றும் மடிவதில்லை
ஓசைகள் இதயத்தில் எப்போதும்
ஒய்வதில்லை ... இதனைப்
புரிந்து கொண்டால் ..... தோழா,

​நியாயம் எனும் வரம்புக்குள்
தேவைகளைத் தேக்கி
அளவு எனும் பெட்டிக்குள்
ஆசைகளைப் பூட்டி
ஓசைகள் அனைத்தையும் நம்
சங்கீதங்களாய் மாற்றும்
சாத்திரத்தை உன்னால்
சாதித்திட முடியும் நம்பு !

​உனக்கென மட்டும் இந்த
உலகம் இயங்கிடவில்லை
நீ நடக்கும் போது பாதையில்
வலுவாக அடிகளைப் பதித்து
வளரும் தலைமுறைக்கோர்
வளமான பாதையை வகுத்து விடு

​இருப்பதையெல்லாம் இழந்து
இருப்புக்கு வழியின்றித் தவிக்கும்
இல்லாத தோழனவன்
தவிக்கின்றான்
உன் .......
உழைப்பினால் மலர்ந்த மலர்களின்
சுகந்தத்தை சுவாசிக்க வழி
செய்திடுவாய்

தோழனே .......
உன்னால் முடியும்
தோற்காத ஞானத்தில்
தமிழன்னை உன்னைத்
தோய்த்து எடுத்துள்ளாள் அறிவேன்
நான் ....

​பொழுது விடிந்து விட்டது
பொய்கை புதுப்பிரவாகத்துடன்
பொங்கிப் பாய்கிறது
நாளைய உலகத்தின் உண்மை
நாயகர் நீங்கள்

தோழர் ! தோழியரே !
தம்பி ! தங்கையரே !
​எழுந்து நில்லுங்கள் இந்த
எழில்மிகு உலகம் உங்களுக்கு
அறைகூவல் விடுகின்றது

இருப்பவர் கொஞ்சம்
இரக்கத்தை ஈந்திட்டு
இல்லாதவர் தம்மை
இருப்பவர் ஆக்கிட
இகத்தினில் புதுவழிகளைச்
சமைத்திட உழைத்திடுவீர்!

​விழுந்தோம் என்று சோராதே
விதைத்தோம் என்று துணிந்து நில்
வியர்வை சிந்தும் கரங்களினால்
விண்ணைத் தொடுவது கடினமில்லை!
விடியலின் கதவு திறந்திருக்க
முடங்கிக் கிடப்பது ஏனோ தோழா?

​சமத்துவப் பாதை சமைத்திடவே
சங்கமம் ஆவோம் ஒருமித்தே,
சாதி மத பேதச் சுவர்களையெல்லாம்
சரித்திரம் காணத் தகர்த்திடுவோம்!
மனித நேயத் தாரகையே
மண்ணில் ஒளிர வழிகாட்டு!

​புதியதோர் உலகம் மலரட்டும்
புன்னகை எங்கும் நிறையட்டும்,
துயரம் துடைக்கும் நற்சிந்தனை
தோழா உன்னில் பிறக்கட்டும்!
புயலாய் எழுந்து நீ நடந்தால்
பூமி உனக்கு வழி கொடுக்கும்!

சக்தி சக்திதாசன்

Thursday, June 04, 2026

எனக்குள் நானே மலர்ந்தேனா ?

எனக்குள் நானே மலர்ந்தேனா ?
​என்னை நானே மறந்தேனா ?
​விண்ணில் ஏகிப் பறந்தேனா ?
​மண்ணில் தவழ்ந்து புரண்டேனா ?

​கவிதை உள்ளம் கொள்ளக் கொள்ள
மனதில் முல்லை மெல்ல மெல்ல
மலர்ந்திடும் வேளை கிள்ளக் கிள்ள
மகிழ்ச்சியில் நெஞ்சம் துள்ளத்
துள்ள

​விந்தைகள் ஒவ்வொன்றாய் விரிய
சிந்தையில் தமிழ்த்துளிகள் வழிய
எந்தையின் நாட்டு நினைவுகள்
தெளிய
தீந்தமிழ்க் கவிதைகள் தினமும்
மலர

​பட்டம் பெற்றதோர் வாழ்வும் அல்ல
விட்டம் குறைந்த வாழ்க்கை எல்லை
முட்டம் நினைக்கும் அன்பின்
முல்லை
எட்டம் தான் என் உறவின் எல்லை

​சொல்லிப் புரியும் உண்மை நீதி
சொல்லில் வருவது நெஞ்சின் பாதி
இதயம் திறக்கும் உணர்ச்சிச் சாவி
இதற்கு மேல் வார்த்தைகள் காலி

மனதில் ஓர் நதி ஓடுகின்றதே
மறைகள் அனைத்தும் தேடுகின்றதே
உணர்வின் உச்சி நாடுகின்றதே
உள்ளம் அமைதியில் வீழ்கின்றதே

காலம் கதவைத் தட்டத் தட்ட
கண்ணீர் சுவடுகள் மங்கித் மங்க
ஞாலம் முழுதும் அணைத்துக் கொள்ள
ஞானம் விழிகள் திறக்கத் திறக்க

ஓசையில் ஓர் அர்த்தம் பிறக்க
ஊசலாடும் நினைவுகள் நிறக்க
தேசம் தாண்டி உயிர்கள் இணக்க
தேனாய் தமிழொலி நெஞ்சில் பாயக்க

பார்வை ஓர் புது உலகம் காண
பாசம் எல்லை கடந்தே போக
ஆர்வம் ஆன்மா தீண்டிச் சேர
ஆழ்ந்த சுகத்தில் நான் நான் ஆக

சக்தி சக்திதாசன்

Tuesday, June 02, 2026

சத்தமில்லா யுத்தங்களே !

எண்ணமெனும் ஓடையில்
ஓடுகின்ற வெள்ளமாய்
ஓசையோடு பாய்கின்ற
ஓராயிரம் கருத்துகள்
வீசிவிட்ட விதைகளென
விளைந்திடும் கவிதைகள்
விதவிதமாய் வடித்திடினும்
விழிப்பதில்லை மானுடமே

துள்ளியெழும் உணர்வுகள்
துருத்துகின்ற உண்மைகள்
வருத்துகின்ற கணங்களை
வரிகளுக்குள் புதைத்திடும்
மருத்துவத்தின் விந்தைகள்
மந்திரமாய் திகைப்பூட்டும்
மனசுக்குள் இருளோடு
மரணிக்கும் விடியல்கள்

மனிதராகப் பிறந்தவர்கள்
மனிதராய் வாழ்வதுண்டோ ?
மனதத்தின் மகிமைதனை
மனிதனால் கொள்வதுண்டோ ?
வேடிக்கையான வாழ்க்கைதான்
வாடிக்கையாய் காண்கிறோம்
ஓடிப்போகும் வாழ்க்கைக்குள்
கோடிகளால் இலாபமென்ன ?

சொல்லாத சொற்களினுள்
சொருகிக் கொள்ளும்
அர்த்தங்களை தேடுமொரு
அர்த்தமில்லாத தேடல்களாய்
ஓடிவிடும் வாழ்க்கையோரு
ஓயாத பெருந்தொடராய்
காயாத கண்ணீரோடு
கழிக்கின்றார் வாழ்க்கையினை

நிற்காமல் சுழன்றிடுமிந்த
நிட்காமியமோ பூமிப்பந்து
சுழலுவதே அறியாமல்
சுழல்கின்றோம் நித்தியமும்
இன்றெமது என்றென்னும்
இழக்கமுடியா உடமைகள்
நாளையெனும் பொழுதினில்
நகர்வதிங்கு யார்கையில் ?

வட்டமான குழியினுள்ளே
சதுரங்களை புதைத்திட
சதிராடும் சூட்சுமங்கள்
சரித்திரமாய் புத்தகத்தில்
நானென்றும் நீயென்றும்
நாமென்றும் வேற்றுமைகள்
நிலைக்காத உடலதனை
நிலைக்குமெனும் நப்பாசை

இருப்பதெல்லாம் தமக்கென்று
இருக்கின்ற கூட்டமொன்று
இல்லாதோர் இருப்பதொன்றே
இயற்கையென்னும் கூட்டமொன்று
முடிவில்லா போராட்டங்கள்
முதலில்லா வியாபாரங்கள்
முற்றுப்பெறா கதைகளாக
கற்றுக்கொண்ட பாடங்கள்

ஓயாத ஊற்றெனவே
ஓங்காரிக்கும் உள்ளமிது
ஓலமிடும் வேளையாக
ஓதுகின்ற கவிதைகள்
செவிடர்களின் காதுகளினுள்
செல்லாத சங்கொலியாய்
சலிக்காமல் ஊதுகிறேன்
சத்தமில்லா யுத்தங்களே !

சக்தி சக்திதாசன்