Monday, August 19, 2024

இக்காலைக் கவிதையிது

எழுத்தென்னும் வேள்வியில்
எனக்குள்ளே கேள்விகள்
எனைத்தேடும் வழிகளில்
என்பயணம் மொழியோடு

எதையெதையோ எழுதிடும்
என்னுள்ளத்தின் ஓசைகள்
எப்போதும் இசைத்திடுமோ
என்னுடைய ராகங்கள் ?

மூடியிருக்கும் மொட்டுக்குள்
முகிழ்க்காத மலர்களாய்
மனமுட்டும் கவிதைகள்
மிதந்திடும் மொழியாற்றில்

தமிழ்மண்ணில் விளைந்து
தமிழூறி வளர்ந்தவன்
தமிழன்னைத் தாலாட்டில்
தனையின்று இழந்தவன்

புகழ்தேடிப் போகாமல்
மகிழ்வொன்றைத் தேடி
திகழ்கின்ற வாழ்வினில்
தவழ்கின்ற உள்ளம்

கனவுகளின் மையெடுத்து
நினைவுகளில் வரிதொடுத்து
புனைகின்ற கவிதைகளில்
நனைகின்ற பொழுதுகளிவை

சொல்லோடு பொருளூட்டி
சொல்லுகின்ற வரிகளுக்குள்
சொல்லாத பொழுதுகளும்
சொல்தேடி அலையுமிங்கு

அனுபவத்தின் ஆழத்தில்
ஆழ்ந்தெடுத்த முத்துக்கள்
அங்கொன்று இங்கொன்றாய்
அடிதேடி அலைவதுண்டு

இதுபோதும் இதுபோதும்
இதயமெங்கும் புதுவெள்ளம்
இரைந்தோடும் வரிகளாய்
இக்காலைக் கவிதையிது

சக்தி சக்திதாசன்

Sunday, August 18, 2024

நாமனைவரும் ஒருதாய் மக்களே !

இன்று போகட்டும்
நாளை விடிந்திடும் என்றே
ஆயிரம் கனவுகளோடு
வாழ்வுடன் போராடும்
நலிவுற்ற தோழா !

நீ தேடும் நாளைகள்
நினைக்கும் தூரத்தில் இல்லை
அதைப் பூட்டி  வைத்து
அழகு பார்க்கும், புண்ணியர்கள்
நிறைந்த பூமியடா !

உனது நாளை விடிவதற்கு
உலகம் கொஞ்சம் விழிக்க வேண்டும்
உனது உதிரத்தை
உறிஞ்சி தம்மை வளர்க்கும்
உனது உழைப்பில்
தமது மாளிகைகளை அமைத்து
மகிழும் மாந்தர்.மனதின்
உணர்ச்சிகள் உறுத்தும் வரை
உனது விழிநீர் காயப் போவதில்லை !

உருளும்.இந்தப் பூமிப்பந்து
உனக்கென்றும் எனக்கென்றும்
உருளும் திசையை மாற்றுவதில்லை
உள்ளே உருளும் மானிடர்.மட்டும்
உயர்த்திப்.பிடிக்கும் தன்னலம்
உன்னைத் தாழ்த்தி வைக்கிறது
உனது உள்ளம் விழிப்படையட்டும்
உனது கனவுகளின் மீது
உன் நம்பிக்கைகள்.வலுவடையட்டும்
உன் நாளைகள் நிச்சயம் வெளித்திடும்

கல்வியை உணர்ந்திடு
கற்றிடும் வாழ்வின் அனுபவங்கள்
கற்பிக்கும் நிகரற்ற பாடங்களை
கசடறக் கற்று முன்னேறிடு தோழா !
கடித்துச் சுவைத்து வீசிடும் விதை
கனிவுடன் கூடிய கனிகளை
காலத்தால் ஈயும் விருட்சமாவதில்லையா ?
கைகளில் வலுவும், கால்களில் தெம்பும்
கடைசிவரை கொண்டிட்டால்
காசுனியில் நீ சரித்திரம் ஒன்றைக்
கட்டாயம் படைத்திட முடியும்

விரைந்தே எழுந்திடுவாய் தோழா !
விழிநீரைத் துடைத்திடு காலத்தை
விரயமாக்காமல் புறப்படுவோம்
மாற்றம் நிகழ வேண்டுமானால்
மாற்றமாக நீயே மாறிவிடு என்றார்
சத்தியத்தின் நயகன் காந்தியடிகள்
கைகளைக் கோர்த்துக் கலைந்திடும்
இருளின் காலை வெளிப்பில்
கண்டிடுவோம் ஒரு சுபீட்சமான
எதிர்காலத்தை நம் அனவருக்கும்
ஏன் தெரியுமா என் தோழனே !
நாமனைவரும் ஒருதாய் மக்களே !

சக்தி சக்திதாசன்

Thursday, August 15, 2024

இனித்திடும் வாழ்க்கை

புதிரானதோர் இரவினிலே
புரியாததோர் புதிராக
புரண்ட கணங்களில்
புலர்ந்ததிந்தக் கவிதையே !

எதையிங்கு செய்கிறோம் ?
எவர்க்காகச் செய்கிறோம் ?
எதைக் காக்க இந்த வேடங்கள் ?
எப்போதோ எல்லாம் முடிந்தவை

ஏற்றாலும் இல்லை அதை
ஏற்காவிட்டாலும் அவசரமாய்
உருளும் உலகத்தில் தோன்றும்
நிஜமான நிழல்களே நாம்

கனவோடு ஒரு பாகம் இங்கு
நனவோடு மறுபாகம் வாழ்வில்
விளக்கமுடியா விசித்திரங்கள்
விளயாடும் கோலங்கள் எம்மோடு

வினாக்களின் விடைதேடியே இங்கு
விரயமான பல வீண் பயணங்கள்
வீணான ஜம்பங்களினால் வாழ்வில்
வீணாகிப் போன வாழ்வின் நீளங்கள்

தொடரும் கதையென வாழ்வினில்
தொடக்கி வைக்கும் சொந்தங்கள்
தொலைந்து போகும் காலத்தோடு
தோய்ந்து போகும் உணர்வுகள்

தோற்காத வீரம் எனக் கோஷமிடும்
விதண்டாவத வாதங்கள் ஆயிரம்
விஷப்பரீட்சை வைத்துப் பார்த்தால்
வினாடியில் புலர்ந்திடும் உண்மைகள்

போகும் இடத்தை அறியாமல்
நடக்கும் திசையற்ற பயணங்கள்
போக்கும் வரவும் இல்லாப் பொய்யான
வியாக்கியானங்களின் வித்தியாசங்கள்

முக்கோணத் தோற்றத்தில் காணாத
மூன்றாவது கோணமதன் மாயம்
அதனுள் அடங்கிய வாழ்க்கையின்
அர்த்தமற்ற பல சூத்திரங்கள்

நிலையற்ற வாழ்க்கை இவ்வுலகில்
நிலைகாண வழியிண்டு புவியில்
தன்னுள் தானே பயணிக்கும் 
தன்னிகரற்ற பயணத்தை அறிந்தால்

ஆடுவதும் அடங்குவதும் மாயைகளே
அழியாத உண்மை ஒன்றுண்டு
ஆதிமுதல் அந்தம்வரை எம்முள்
அழியாமல் ஆன்ம சங்கீதமே அது

ஆன்மாவின் இருப்பை உணர்ந்தால்
அதைத்தேடி கண்மூடி பயணித்தால்
ஆனந்தம் வாழ்வினிலே அடைந்திடுவோம்
அனுதினமும் வாழ்க்கை இனித்திடும்

சக்தி சக்திதாசன்

Monday, July 22, 2024

இதயத்தின் துடிப்பும் கவிதையே

தமிழின் மடியில் நன்றே
தலைவைத்துத் தூங்கி
தழைத்த கனவில் வந்து
திளைத்த கவிதை தானிது

முளைத்த உணர்ச்சிப் பெருக்கு
முகிழ்த்தே நெஞ்சில் வெடித்து
முழுதாய் மலர்ந்தது என்று
தமிழாய் விரிந்தது இன்று

களைத்த இதயம் கனக்கையில்
கனிந்திடும் தமிழே தாங்குது
கரும்பாய் இனிக்கும் தமிழிது
கன்னித் தமிழின் வனப்பிது

அன்னைத் தமிழின் மடியில்
அன்புத் தமிழாய்த் தவழ்ந்து
இன்பத் தமிழாய் வளர்ந்து
இன்றும் தமிழால் மகிழ்கிறேன்

கதிரவன் கதிராய்ப் படர்ந்து
காலைப் பொழுதாய் விடிந்து
கவிதைப் பொருளாய் மலர்ந்து
கலப்பது எந்தன் தமிழென்பேன்

கருத்தாய்த். திரளும் மேகங்களென
கவிதை மழையாய்ப் பொழிந்திட
காற்றினில் பறந்திடும் சருகென
கணத்தில் மறைவேன் தமிழினுள்

காதலில் பிறந்த கவித்துவம்
கற்றதோ வாழ்வெனும் அனுபவம்
கலந்தே இன்றென்னை இயக்குது
காலையும் மாலையும் இனிக்குது

விழுந்தேன் தமிழன்னை மடியில்
வலர்ந்தேன்  வாலிபத் திமிரினில்
உணர்ந்தேன் வாழ்வெனும் நாடகம்
உண்மையே உலகின் ஆன்மீகம்

காலைகள் புலர்வதும் கவிதையில்
மாலைகள் புதைவதும் கவிதையில்
இடையினில் வாழ்வதும் கவிதையாய்
இதயத்தின் துடிப்பும் கவிதையே


சக்தி சக்திதாசன்

Sunday, July 21, 2024

மெல்லப் பகர்வேன் எந்தன் வழிதனில்

கனவுகளின் வழி ஒடி
நினைவுகளின் தடம் தேடி
புனைவுகளின் முடி சூடி
வினைவுகளின் பலன் நாடி

தொலைந்து போன பொழுதொன்று
தொலைத்து விட்ட விதம் கண்டு
மலைத்து நின்ற கணங்கள் உண்டு
நிலைத்திருப்போர் உலகில் என்று 

தெளிந்து நிற்கும் ஓடை தன்னில்
நுழைந்து அதனை கலக்கும் வெள்ளம்
இழந்து போகும் அமைதிக் கணத்தை
வளைந்து செல்லும் வாழ்க்கை நதியே

கடந்து போன காலம் தன்னில்
மிதந்து போன நிகழ்வின் சுமைகள்
தவழ்ந்து நெஞ்சில் தந்திடும் உணர்வு
தெளிந்து ஊட்டிடும் அனுபவ ஞானம்

சிற்சில பொழுதுகள் புகட்டிடும்
பற்பல வாழ்க்கையின் புதிய பாடங்கள்
கற்றிட க்கூடிய அகவையில் இல்லை
விற்றிட அது ஓர் விலைபொருள் அல்ல

என்னுள் தேங்கிய உணர்வுகள் தாக்கும்
என்னை எனக்கே காட்டும் நோக்கம்
எனக்காய் காலம் புகட்டிய பாடங்கள்
என்னை நானாய் செதுக்கிய உளிகள்

கண்கள் கண்டவை ஆயிரம் காட்சிகள்
காதில் விழுந்தவை அதுவொரு கோடி
கருத்தில் பதிந்தவை சிற்சில மட்டுமே
கவிதையாய்ப் பகர்வது எத்தனையோ

சொல்லில் வருவது இருப்பதில் பாதி
சொல்ல விளைவது அன்பின் பெருக்கால்
நல்ல தலைமுறை நாளை வளர்ந்திட
மெல்லப் பகர்வேன் எந்தன் வழிதனில்

சக்தி சக்திதாசன்

Tuesday, July 09, 2024

எதைத் தேடுகிறாய் தோழா?

எதைத் தேடுகிறாய் தோழா?

உன்னுள் உறைந்திருக்கும்
உண்மையைத் தேடுகிறாயா ?
ஓ ! 
அது கசக்குமே என்று நீ
தயங்குவது புரிகிறது தோழா !

கசப்புகளுக்கு பயந்து நீ
எத்தனை காலம் தான்
கலங்கிய நெஞ்சுக்கு
சொந்தக்காரனாய் வாழ்வாய்?

நெஞ்சம் எனும் பற்றைக்குள்
எத்தனை கருமை .....
அதனுள்
ஏற்க முடியாத உண்மைகள்
எரித்துக் கொண்டே உணர்வுகளை ........

அதிர்வுகளின் அழங்களை
அறிய முடியாமல் கவ்விக்கொண்ட‌
அறியாமை எனும் போர்வை
அரித்துக் கொண்டே இதயத்தை .....
எத்தனை காலம்தான் தோழா ?

எதைத் தேடுகிறாய் தோழா?

நிழலுக்குள் புதைந்து போன
நிஜங்களின் வரலாறையா ?
உண்மைகளை விற்று விட்டு
பொய்களை வாங்கும்
சமுதாயச் சந்தையின் 
வியாபாரிகளையா சொல் !

எதைத் தேடுகிறாய் தோழா ?

இதோ விடிகிறது ! இதோ விடிகிறது !
என்று இரவுக்குள் பூட்டி வைத்து
அழகு பார்க்கும் வித்தைக்காரரையா ?
இல்லை , பசப்பு வார்த்தைகளை நம்பி
பகலையே காணாமல் புலம்பும்
படித்த முட்டாள்களையா ?

இல்லாத புதையலொன்றின்
வரைபடத்தைக் காட்டிக் காட்டி
இருக்கின்ற செல்வத்தைச் சுருட்டும்
குருட்டுப் புத்திக்காரரின்
வரட்டு ஜம்பத்தையா ?
சொல்லிவிடு தோழா !

எதைத் தேடுகிறாய் தோழா !

இன்றைய உலகம் விரைவில்
விழிக்கவில்லை யெனில்
நாளைய உலகமென்று ஒன்றைக்
கனவில் கூட நினைக்க முடியாது
சூழலை அழித்து தற்காலிக
சுகத்தினை அனுபவிப்போர்
சாதிக்கப் போவதெல்லாம்
சூனியமான எதிர்கால மொன்றே!

தேடலின் தேவையை மாற்றி
இரவின் கருமைக்குள் இருந்து
வெளிச்சத்தை நோக்கி மக்களை
விழிக்கப் பண்ணும் நேர்மறை
வழிகளைத் தேடிடு தோழா !

எதைத் தேடுகிறாய் தோழா ?

தலைமுறை தலைமுறையாய்
தம் தலைமுறை வாழ்ந்திட எண்ணி
தரணியின் வளத்தினை அழிக்கும்
தன்னல மனிதரின் மனங்களில்
தம்மைத் தாமே அறிந்திடும் கலையை
புரிந்திட வைக்கும் செயல்களின்
பாதையைத் தேடிடு தோழா !

பிரபஞ்சம் எமக்கு ஈந்தவையெல்லாம்
அனைவரும் வாழ்ந்திட வழிகளே !
இயற்கையும் , சூழலும் செல்வங்களென
இதயத்தில் அனைவரும் கொண்டிட
இகத்தினில் நீ ஆற்ற வேண்டிய
பணிகளின் வகைகளைத் தேடு !

வறுமையில் உழன்றிடும் மக்களின்
வாழ்வினை மாற்றி அனைவரும்
கல்வியைப் பெற்று உணர்ந்திட்டால்
மட்டுமே நாளைய உலகம்
நன்றாய் வாழ்ந்திடும் என்பதை
நானிலம் முழுவதும் முழங்கிடும்
வழியினைத் தேடிடு தோழா !

எதைத் தேடுகிறாய் தோழா !

அன்பெனும் பாதையில் உண்மை
ஆன்மீக வாழ்வின் தேவையை
மதங்களைக் கடந்தவொரு
மனங்களின் அடிப்படையில்
வளர்த்திட்டு உண்மை மெய்ஞானத்தைக்
காட்டிடும் விஞ்ஞானத்தைப் போதிக்க
அஞ்சாத மனத்தினை அடைந்திடும்
மார்க்கத்தைத் தேடிடு தோழா !

இன்னும் .  .  .  .

எதைத் தேடுகிறாய் தோழா ?

 
சக்தி சக்திதாசன்

Sunday, July 07, 2024

ரசிக்கக் கற்றிடுவோம்

பொல்லாத உலகமிது
செல்லாத பாதைகள் பல
நிகழ்ந்திடும் நிகழ்வுகள்
நிதம்நிதம் எத்தனையோ !
நெஞ்சத்தின் உணர்வுகளைக்
கொஞ்சமாய்க் கிள்ளிப் பார்க்கும்

வனப்புமிகு வஞ்சங்கள்
வியப்புமிகு வழிகளில்
விதம்விதமாய் விளையாடி
விவேகத்தைச் சோதிக்கும்
விரித்துவைக்கும் வலையினில்
விழுத்திவிட முயற்சிக்கும்

சொந்தத்தின் பந்தங்கள்
சொக்கவைத்துச் சதிராடும்
முந்தைகளின் எச்சங்கள்
முந்தியெம்முள் கொந்தளிக்கும்
சந்தையிந்தச் சமுதாயம்
சத்தமின்றிச் சாய்த்துவிடும்

உண்மைகளைத் தராசிலிட்டு
உருவாக்கும் வியாபாரம்
உரைகல்லில் உரசிப் பார்த்து
உள்ளங்களை ஏலமிடும்
உலகமிதன் மையத்தில்
உள்ளதெல்லாம் பேராசை

இத்தனையும் பார்த்ததினால்
அத்தனைகளின் அனுபவங்களால்
உணர்ச்சிகளை நிறுத்திவைத்து
உள்ளத்தை அலசுகிறேன்
காட்சிகளாய் ரசித்தபடி
சாட்சியாக மாறிவிட்டேன்

சிந்தனைக் குதிரையினை
வேகமாகத் தட்டிவிட்டு
வெளிப்பயணம் நிறுத்தி
உள்முகமாய் பயணிக்கிறேன்
என் மனதின் அழுக்குகளை
ஒவ்வொன்றாய்க் களைகின்றேன்

உலகென்று தனியான
இடமென்று எதுவுமில்லை
உடலுமல்ல உள்ளமுமல்ல
உள்ளதெல்லாம் ஆன்மாவே !
உணர்ந்து கொள்ள ஆரம்பித்தால்
உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்கும்

எமைச்சுற்றி எதிர்மறைகள்
ஏனதனை ஊக்குவிக்குறோம்
நேர்மறையாய் சிந்தித்தால்
நெஞ்சத்திலே அமைதி வரும்
நடப்பவைகள் அத்தனையும்
நலமாகவே நடக்கின்றது

எதிர்பார்ப்பைக் குறைத்து
ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை
எமக்குள்ளே வளர்த்திட்டால்
எவ்வழியிலும் எமக்கு நன்மையே
தடைக்கற்கள் ஒவ்வொன்றாய்
படிக்கற்களாய் எம் உயர்த்தும்

உண்மையொன்று புரிகிறது
உள்ளமெல்லாம் விரிகிறது
அனைவருள்ளும் சஞ்சரிக்கும்
ஆன்மா அனைத்தும் ஒன்றுதானே
பிரித்து நிற்கும் பேதங்களை
துரத்தும் வலிமை எமக்குண்டு

எம்மைத் தேடி பயணமொன்றை
எமக்குள் நாமே நிகழ்த்தும் போது
எம்மைச்சுற்றி நடப்பவை அனைத்தின்
சூட்சுமங்கள் புரிந்திடும் எளிதில்
நாம் கேட்டு நாம் பெற்ற வாழ்விதனை
நாம் ரசிக்கக் கற்றிடுவோம்

சக்தி சக்திதாசன்

Tuesday, June 11, 2024

தமிழன்னையைத்துதித்து நானும் போற்றிடுவேன்

நெஞ்சிலே ஒரு ராகம்
நினைவிலே சங்கீதம்
பாடிடும் பொழுதெல்லாம்
பரவசம் பொங்கிடும்

நேற்றைய நிகழ்வுகள்
கற்பித்த அனுபவங்கள்
இன்றைய வரிகளாய்
இனித்திடும் நாளையே

சேற்றிலே முகிழ்த்திடும்
செந்தமைரை வனப்பினை
களிப்புடன் ரசித்திட்டால்
காலமெல்லாம் மகிழ்ச்சியே

விழிகளில் நிறைந்திடும்
விதவிதமான காட்சிகள்
விரித்திடும் சிறகினை
வழிந்திடும் கவிவரிகளாய்

பிறந்திடும் போதென்னை
அறிந்திடவில்லை நன்றாய்
முதிர்ந்ததும் தானென்னை
உணர்ந்ததுவே உண்மை

விடியலும் ஓர்கவிதை - நாள்
முடியலும் ஓர்கவிதை
அழுவதும் ஓர்கவிதை - பின்
சிரிப்பதுமே ஓர்கவிதை

துடித்திடும் பொழுதுகளில் - கவி
வடிப்பது சுகமாகும்
துள்ளிடும் வேளையிலும் - கவி
சொல்லிட மனமேங்கும்

தளும்பும் மகிழ்வதனில் - எந்தன்
தஞ்சம் தமிழென்பேன்
தவிப்பினை தவிர்ப்பதுவும் - தாய்த்
தமிழின் அருளென்பேன்

நீலமந்த வானம் போல்
நிலவு தரும் சுகந்தம் போல்
ஆழம் அந்த ஆழியைப் போல்
ஆதியற்ற அன்னைத் தமிழே !

வணங்கியிந்தக் காலைதனில்
வழங்குகிறேன் கவிதையினை
துலங்குமெந்தன் தமிழன்னையைத்
துதித்து நானும் போற்றிடுவேன்

சக்தி சக்திதாசன்

Wednesday, May 29, 2024

சில்லென்று சிலிர்த்திடும்

சில்லென்று இதயத்தில்
சிலிர்க்கின்ற உணர்வூட்டம்
மெல்லினிய காலையதில்
சொல்லோடு விளையாட்டு

நெஞ்சமதில் பாட்டொன்று
நினைவினில் நீந்திடும்
பொழிகின்ற மழையாக
வழிகின்ற ஞாபகங்கள்

சுரக்கின்ற வரிகளினுள்
சுவைக்கின்ற இனிமை
சுளைகளாய்த் திறக்கும்
சுகமான அனுபவங்கள்

பட்டொளிக்கும் ஒளியாய்
பகலவனின் கதிர்கள்
சுட்டெரிக்கும் போதிலும்
சுகமாகத் தோன்றும்

முட்களிடை சிரிக்கும்
முத்தான ரோஜாவின்
முழுதான அழகிதழ்கள்
முகத்தோடு மோதும்

விட்டகலும் மனதின்
வினையான சுமைகள்
தொட்டுவிடும் தூரமதில்
தொடுவானம் தெரியும்

எட்டிவிட எட்டிவிட
ஏதேதோ தூண்டும்
முட்டிவிடும் போதங்கு
முத்தமிழும் கூடும்

ஆனந்தம் தானிங்கு
ஆரம்பம் ஆகும்
அருவிபோல ஓடும்
ஆழ்மனதின் ஊற்று

கண்திறந்த வேளையில்
கவிசெய்ய ஏங்கும்
கண்மூடும் தாலாட்டாய்
கவிதைதானே பெருகும்

கலைவாணி கட்டளையால்
கருவொன்று முகிழ்க்கும்
கவிமாலை சாத்தியதால்
களிப்படையும் உள்ளம்

வாழ்ந்திடும் காலமெல்லாம்
வரைந்திடுவேன் கவிதைகள்
சாய்ந்திடும் போதுமெந்தன்
சாய்மனையே கவிதைதானே !

சக்தி சக்திதாசன்

உனக்குள் ஒரு உலகம்

உனக்குள் ஒரு உலகம்
உறங்கிக் கொண்டிருக்கிறது
விழித்துக் கொண்டால் இங்கே
விடியல் பிறக்கும் தம்பி

கண்களின் முன்னே தெரிவது
கற்சுவரல்ல தம்பி கதவுதான்
மனதில் உறுதி கொண்டு நீ
முயற்சி செய்தால் பாதை தெரியும்

பாதியில் முடியும் பயணமல்ல‌
பாரினில் உந்தன் வாழ்க்கை தம்பி
பராரியின் வாழ்க்கையை உயர்த்திட‌
பாதைகள் நீ வகுத்திடனும்

கண்களில் நீரோடு வாழ்வு தேடி
காத்திருக்கும் தங்கைகள் வாழ்வு
காலத்தோடு மலர்ந்திட நீயும்
காரியங்கள் பல ஆற்றிட வேண்டும்

பொறுத்திடும் காலம் போய்விட்டது
பொங்கிடும் காலம் புகுந்திட்டது
புனிதமான பணிகளை நீயும்
புரிந்துணர்வுடன் ஆற்றிட வேண்டும்

சமத்துவம் என்றொரு வார்த்தை
சரித்திரமாகிட வேண்டுமெனில்
சகோதரர்  நீவீர்  உண்மையுடன்
சமுதாயம் தன்னை உயர்த்திடனும்

கற்றிடத் துடித்திடும் பாலகர் பலர்
காசில்லா வர்க்கமாய் தவித்திடுவதை
கண்ணுறும் நாளைய தலைமுறை
கைகளை உயர்த்தி செயற்படனும்

நாட்டினை உயர்த்திட உழைத்திட்ட‌
நேற்றைய முதியவர் வாழ்ந்திட‌
இன்றைய இளைஞர் திட்டங்களை
நாளைய மனதுடன் தீட்டிடனும்

அரசியல் என்பது மக்களுக்காக‌
மக்கள் வாழ்வது அரசியலுக்காக அல்ல‌
தலைவர்கள் புரிந்திட்டு நடைமுறையில்
தரத்தினை உயர்த்திட முயன்றிடனும்

உனக்குள் உறங்கும் உலகத்தினை
உணர்வெனும் விசையுடன் உருட்டிடு
உதயம் ஆகிடும் புதிய உலகம்
உரைத்திடு  இதையே  உறவுகளிடம்

 சக்தி சக்திதாசன்

Sunday, May 12, 2024

தமிழாகப் புகைந்திருப்பேன்

எத்தனையோ எழுதுகிறேன்
ஏதேதோ மொழிகின்றேன்
அத்தனையும் எதற்காக
மொத்தமாக எனக்காக

சித்தமெல்லாம் தமிழாக
சத்தமில்லா வரைஞனாக
புதுமையான பித்தனாக
புதுக்கவிதை புனைகின்றேன்

எழுத்தென்னும் வனத்தினிலே
எப்போதும் தொலைவதுண்டு
எனைக்காக்கும் கவசமாக
எழுத்துக்களே திகழ்வதுண்டு

எழுதாத பொழுதுகளெல்லாம்
விடியாத இரவுகளெனக்கு
முடியாத கவிதைகளென்றும்
வடியாத துயரக்கணங்கள்

உள்ளத்திலே பொங்குகின்ற
வெள்ளமாய்த் தமிழேகும்
கனமான மழைபோல
கரைந்தோடும் தமிழாக

பள்ளியிலே கற்றதல்ல
பட்டமேதும் பெற்றதல்ல
கலைவாணி ஆணையிட
கரைபுரளும் கவிதைகளாய்

பெற்றோர்கள் முன்னிலையில்
பெறவில்லை இப்பேறு
அற்றைநாள் அனுபவங்கள்
ஆறாகப் பெருகுதிப்போ

தமிழாகிப் புனைகின்றேன்
தமிழோடு நனைகின்றேன்
தணலாகிப் போகையிலே
தமிழாகப் புகைந்திருப்பேன்

சக்தி சக்திதாசன்

Saturday, May 11, 2024

அமைதியான தியானமே !

சிரிக்கின்ற காலையொன்றில்
சிறகினை விரித்தந்த
சிந்தையெனும் வானிலே
சிறகடிக்கும் பொழுதிதுவோ

பொழுதின் சுகமதனை
பொருத்தமாய் அனுபவிக்க
பொங்குகின்ற உணர்வெடுத்து
பொழிகின்ற கவிதையொன்று

கவிதைகளைக் கருக்கொள்ளும்
கனமான உள்ளமொன்றின்
கருத்துக் குவியல்களிங்கு
கரைபுரண்டு ஓடிடுமோ ?

ஓடுகின்ற காலமென்னும்
ஓசையில்லா நதியதனில்
ஒதுங்குகின்ற சருகாக
ஓரத்திலே ஓரங்கம்

ஓரங்க நாடகத்தில்
ஒருவேடம் புனைந்திங்கு
ஓப்பேற்றும் வாழ்வதனில்
ஓயாமல் அனுபவங்கள்

அனுபவங்கள் தேடியிங்கு
ஆன்மாவின் யாத்திரை
அங்கொன்றும் இங்கொன்றும்
அனைத்துமே அதிசயங்கள்

அதிசயத்தின் வாசலிலே
ஆனந்தக் கணநேரம்
அதையெனக்குத் தருவது
அமைதியான தியானமே !

சக்தி சக்திதாசன்

Monday, April 22, 2024

ஆன்மாவென்னும் ஆண்டவ வடிவம்

சிந்தனை எனும் தேரேறி
எந்தனில் கொஞ்சம் பயணித்தேன்
முந்தனை யான் வாழ்ந்த முறை
நிந்தனை என்பதை நானறிந்தேன்

அப்பனும், அம்மையும் இணைந்து
அவனியில் என்னை விழுத்தினர்
எப்பயனடைய எவ்வழி செல்வது
அப்பயனறியாமல் தான்  வாழ்ந்தேன்

மெய்ப்பொருள் வாழ்வில் புரியாமல்
பொய்ப்பொருள் தேடி வாழ்ந்த காலம்
சித்தருள் உறைந்த உண்மைகள் காணா
பித்தருள் ஒருவனாய் இருந்தது புரிந்தது

முப்பொருள் தேடியோடி நானும்
முத்தமிழ்ச் சுவையுள் அமிழ்ந்திட்டேன்
எப்பொருள் யார்வாய் கேட்பினும்
மெய்பொருள் காண்பது அறிவென்றுணர்ந்தேன்

என்னுளொளிர்ந்த "நான்" என்னும் விளக்கு
எண்ணெய் இன்றி எரிவது கண்டேன்
எப்படி அதனை அணைப்பது என்று
என்னுள் இன்னும் கேள்விகள் மூளும்

உள்ளத்தில் இருக்கும் உண்மைகளை
உருக்கிக் கவிதையாய் வார்த்திடத் 
உணர்வுகள் என்னை மனிதனாக்கும்
உ றுதிகொண்டேன் மன‌திலின்றே

என்னுள் இருக்கும் என்னை
எரித்திடத் தேவையை உணர்ந்தேன்
என்னைப் பார்த்துச் சிரித்தது
எரிக்கும் எண்ணையாய் தியானமே !

கண்ணை மூடிக் காத்றிலேறி
எண்ணந் துறந்து எல்லாமிழந்து
எனக்குள் ஆழத்தில் தேடுவது
ஆன்மாவென்னும் ஆண்டவ வடிவம்


சக்தி சக்திதாசன்

Saturday, March 30, 2024

தியானம் எனுமொரு சிறப்பு



உரு.ண்டோடும் 
உலகே !
அவசரமாய் எங்கே நீ
ஆவலாய் ஓடுகிறாய் ?

சுழன்றோடும் உன்னுள்
எத்தனை
சுவாரஸ்யங்கள் . . . 
இருக்கென்ற மமதையில்
இரக்கத்தைத் தொலைத்து
விடிந்த பின்னும்
இருளினுள் புதைந்து போன 
மானிடர்கள் . . . 

இல்லை, இல்லை என்றே
இரைந்து கொண்டு 
இருப்பதையும் தொலைத்து
அலைந்திடும் கூட்டம் . . . 

போதாது . . . போதாது என்றே
போதை கொண்டு ஆசையில்
வாழ்வெல்லாம் தேடிக்கொண்டே
அலைந்திடும் ஒரு கூட்டம் 

உள்ளத்தில் இருளையும்
உணர்வினில் சுயநலத்தையும்
ஆடையாய் அணிந்து கொண்டு 
அருள் தேடி ஆலயத்தினுள்
ஆண்டவனை வேண்டும்
அதிசயமான ஒரு கூட்டம்

கிடைத்ததைப் பிரித்து 
பசித்தவர் புசித்திட தரும்
அன்பினைக் கொண்டே வாழும்
அற்புதப் பிறவிகளாய் ஒரு கூட்டம்

இத்தனை கண்டு அதனை
இதயத்தில் கொண்டு மெதுவாய்
உருண்டிடும் உலகே உன்னுள்
உருள்வது தெரியாமலே நாமும்
உழன்று கொண்டே செல்கின்றோம்

உள்ளத்துள் எம்முள் கொஞ்சம்
ஆழமாய் நுழைந்தங்கே
உறைந்திருக்கும் ஆன்மாவின்
குரலை கேட்டிடும் வழியைத்
தொலைத்து விட்டு நாமும் ஏனோ
காலத்தையும் கண்டதையும்
காரணமாய்ச் சொல்லிக்கொண்டே
உலகத்தோடு உருள்கின்றோம்

எதையுமே துறக்காமல் வாழ்வில்
எதையுமே இழக்காமல் எம்முள்
எம்மைத் தேட சில மணித்துளிகள்
எமக்காய்ச் செலவிடத் துணிந்தால்
கிடைத்திடும் அமைதி சுலபமாய்
உறைந்திடும் அமைதி உள்ளத்துள்
இதற்கென ஒரு திறப்பு அதுதான்
தியானம் எனுமொரு சிறப்பு

சக்தி சக்திதாசன்

Saturday, February 17, 2024

ஏனிந்த மெளனம் தோழா ?

ஏனிந்த மெளனம் தோழா ?
காலத்தின் வழி வந்த வறுமையின்
காயத்தின் வடுக்களைக் கண்டு
வாடிப்போய் விட்டாயா ?
நிழல்களின் கோலத்தை
நிஜமென நம்பிடும் உலகத்தின்
விசித்திர நடப்பினை நீயும்
விளங்கிட முடியாமல் கலங்குகிறாயா ?

உலகத்தின் நாயகன் அவனே
உண்மையின் ஆதிமூலம் 
அவன் தந்த பரிசான
இயற்கையை தமக்கென கூறிட்டு
இரக்கத்தை மறந்து வாழும்
இதயமற்ற மனிதரின் செயல்கள்
தீட்டுதோ உனது வறுமைக் கோலத்தை

உலகம் சுழல்கிறது என் தோழா 
இன்றைய உலகு வேறு அதே போல்
நாளைய உலகும் வேறு 
எது இங்கே நிஜம் கூறு ?
எவரறிவார் அவர்தம் முடிவை ?
அவரவர் உடல்களுக்குள்
ஆன்மாவின் இருப்பை அறியாமல்
ஆணவச் சுழலில் அவசரமாய் ஏன் ?

விழியென்னும் தீபத்தில் நீயும்
ஒளியெனும் கனலை ஏற்று
இருளொடு கலந்த பொழுதை
இல்லாமல் ஆக்கும் செயலாற்று
விதைத்திடு நற்பல விதைகளை
வளர்த்திடு நற்பண்புகளை
செழித்திடும் நாளைய உலகம்
செதுக்கிடும் சிற்பியாய் மாறிடு

நீ, நான் எனும் நிலை மாற்றி
நாம் எனும் உறவை விதைத்திடு
நளைய உலகம் உனக்காவே விடியும்
நம்பிடு தோழா ! நாளையின் நாயகன்
நானிலம் உன்னைப் போற்றி
நாளைய சரித்திரத்தில் ஓர்
நட்சத்திரமாய் உயர்ந்தே பார்க்கும்

உருளும் இந்தப் பூமிப்பந்தினுள்
இருளும் ஒளியும் இருந்திடல் போல
இன்பமும்,துன்பமும் காணாய்
இயற்கையின் விதியை உணர்வாய்
முயன்றால் மட்டுமே தோழனே !
மூடிய கதவுகள் திறக்கும்
காட்சியைக் கண்டிட வேண்டுமெனில்
கண்களைத் திறந்திட வேண்டும்

உண்மையை தெரிந்தால் மட்டுமே
உள்ளத்தில் அமைதி தோன்றும்
உனக்கெனவும் எனக்கெனவும்
உள்ளதைப் பிரித்திடும் மனிதர்
உன்வழி நேர்வழியாய்ச் சென்றால்
உலகில் உனக்கு வெற்றியே
ஆன்மீக அறிவினை தெரிந்து
ஆற்றுவாய் பலசெயல் இன்று
அமைதியின் தரிப்பிடம் உலகென
அனுதினம் புதுவிதி இயற்று


சக்தி சக்திதாசன்

Wednesday, January 24, 2024

தித்திக்கிறதே ! தோழா !

தித்திக்கிறதே ! தோழா !
இந்தக் காலைப்பொழுது
தித்திக்கிறதே !

எண்ணத்தின் சாரத்திலே
எண்ணிலா வண்ணங்கள் கொண்டே
கற்பனைத் தூரிகையால்
இயற்கை அன்னையின்
வனப்புத் தனை
கவிதை எனும் ஓவியமாய்
கவிஞனவன் தீட்டுகின்ற
பொன்னான காலையிது

இயற்கை அன்னையின்
மேனியை மூடிய
காரிருள் எனும் சேலையைத்
தன் புத்தொளிக் கதிர்களால்
வெண்மையாக்கி ஓர் தேரில்
கிழக்கிலிருந்து தொடங்கும்
ஆதவன் பவனியைப்
பறைசாற்றுமிந்தக் காலையிது

உலகத்தை உருட்டும் வல்லமை
உழைப்பவர் கரங்களில் மட்டுமே
உதிரத்தை வியர்வையாக்கி எமக்கு
உணவளிக்க உழைத்திட
விழித்திடும் எங்கள் விவசாயத்
தோழர்களை துயில் நீங்கி
துள்ளியெழுந்திட இசைபாடும்
மெல்லிய காலைப் பொழுதிது

இரவின் கருமையை
குளிர்ந்திட வைத்திட
உறைந்திடும் பஞ்சினைப் போன்ற
காலைப் பனியை மெதுயாய்
விரட்டிட முயலும் ஆதவன் கதிர்கள்
தெளித்திடும் ஒளியினைக் கண்டு
கழித்திட வைத்திடும் காலைப்பொழுது

சிந்தனைச் சக்கரத்தை
சுழற்றியொரு விசையோடு
விந்தைமிகு எண்ணச்சுழல்களில்
வட்டமிடும் கருத்துக் குவியல்களை
முந்தையொரு பொழுதுதினில்
சிந்த மறந்துவிட்ட பித்தனிவன்
பிந்தையிந்த வாழ்வதன் வாசலில்
பிதற்றிடும் வரிகள் தாமிவையோ

கண்களைத் திறந்து
கண்டிட்ட வேளை என்னெஞ்சினை
அள்ளிக் கொண்டதிந்த
காலைப் பொழுதினைக் கொண்டாடிட
சிதறிய தமிழ்ச்சொற்கள் எனும்
மலர் கொண்டு அர்ச்சிக்கிறேன்
தமிழன்னை பாதங்களை யானும்
தலைசாய்த்து வணங்கி மகிழ்கிறேன்

சக்தி சக்திதாசன்

Saturday, January 20, 2024

வென்றே நீவிர் புகழொடு வாழ்வீர்

உள்ளமெனும் ஆழிக் கரையினில்
உணர்வலைகளின் நுரைகள் பொங்க‌
மனமெனும் ஆலயத்தினுள் 
மங்காமல் நேசதீபம் ஒளிவீசும்

தொடர்ந்து வந்த தடைகளால்
உடைந்து போன இதயங்கள்
நிமிர்ந்து மீண்டும் நடந்ததினால்
ஒருங்கு சேர்ந்து இயங்கிடுதே !

எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றியதால்
எஞ்சியது பெரும் வெறுமைகளே
வெறுமைகளுக்குள் தேடியதும்
வெளியானது முழு அமைதியே !

வாழ்க்கையெனும் நாடகத்தில்
வழிமாறி வரும் காட்சிகள்
விளையாடிடும் காலங்கள்
வினையாக்கிடும் வேகங்கள்

தேன் பேச வழியிருந்தும் ஏனோ
வீண் பேசிடும் நாவினால்
புண்ணாக்கிய நெஞ்சங்கள் தானே
தன்நோக்கிய விவேகங்கள்

எது வந்து போகினும் புவியில்
புது வசந்தங்கள் வேண்டினின்
முது மொழி தந்த வழிதனில்
அது கண்டிட வென்றிடீர்

காலம் தானாய் ஓடிடும் தோழர்
காண்பீர் துணிவுடன் நாளைகள்
ஞாலம் தனில் எம் ஜனனங்கள்
நாமாய் வேண்டியோ நடந்தது ?

ஒன்றே நெஞ்சில் கொண்டே நடந்தால்
நன்றே வாழ்வில் என்றும் நடக்கும்
இன்றே மனதில் நன்றே கொள்வீர்
வென்றே நீவிர் புகழொடு வாழ்வீர்

சக்தி சக்திதாசன்

Tuesday, January 16, 2024

சிந்தனை பூத்தது

சிந்தனை பூத்தது
எந்தனை மனதில்
விந்தை புரிந்திடும்
முந்தை நினைவுகள்

காலையில் மலர்வது
கவிதைகள் ஆயிடுமோ ?
மாலையில் மலர்பவை
மயக்கத்தின் நிகழ்வோ ?

நிற்பவை காண்பதும்
நடப்பவை தோற்றமும்
நற்றமிழ் வடிவினில்
நல்லினிய கவிதைகளோ?

எத்தகை உயர்வும்
அத்தகை தாழ்வும்
வித்தக வடிவினில்
விதைப்பது கவிதையோ ?

முத்தமிழ்ச் சுவையை
முழுதாய் உணர்ந்திடும்
என்மன உணர்வினில்
எழுவதென் கவிதைகளோ?

எந்தையும் தாயும்
முந்தையோர் வாழ்வில்
சிந்தையில் விதைத்தவை
சிந்திடும் கவிதைகளோ ?

விண்ணில் தவழும்
என்னில் உணர்வுகள்
அன்னைத் தமிழில்
பின்னிடும் கவிதைகள்

வேண்டும் , வேண்டும்
மீண்டும்  , மீண்டும்
மண்ணில் பிறந்தால்
மனதினில் தமிழெனக்கு

சக்தி சக்திதாசன்

Friday, January 12, 2024

வாழ்விலில்லை இன்பதுன்பம்

காலையின் இதழ்களை
காலம் விரித்தது.
கதிரவன் பயணம்
கதிர்களாய் மலர்ந்தது

இயற்கையின் அதிசயம்
இதயத்தை நிறைத்தது
இன்பத்தின் ஊற்றாய்
இறைப்பது ஆனந்தம்

கிளைகளில் பறவைகள்
செடிகளில் மலர்கள்
தவழ்ந்திடும் தென்றல்
தழுவிடும் மழைத்துளி

பிரபஞ்சம் வகுத்திட்ட
பிறழாத நியதிகள்
புரிந்திட்ட பேர்களுக்கு
புலர்ந்திடும் ஞானமே !

எமக்குள்ளே நாமறியா
எத்தனையோ புதுமைகள்
எப்படித்தான் அறிந்திடலாம்?
எப்பாதை சென்றிடலாம் ?

விழிப்புணர்வு கோண்டே
வினாடிகளை ரசித்திட்டால்
வியப்பான அனுபவங்கள்
விரிந்திடுமே தாமரையாய்

இலவசமாய் கைவசத்தில்
இருக்கிறது நமக்கெல்லாம்
இளமையான இதயத்தின்
இனிமையான ரகசியமே

சுவாசத்தை குருவாக
சுவீகரித்துக் கொண்டு
சுகமாகக் கண்மூடி
சுபமாகத் தியானிப்போம்

மெளனத்தின் மொழியொன்று
மெல்லினிய அனுபவத்தை
மெத்தெனவே பரிசளிக்கும்
முழஅர்த்தம் புரிந்திடுமே !

வேண்டிவந்த வாழ்விதுவெனும்
வேதமிகு தத்துவத்தை
விளங்கிக்கொண்ட பின்னாலே
வாழ்விலில்லை இன்பதுன்பம்

சக்தி சக்திதாசன்

Saturday, January 06, 2024

என்னையெனக்கு அறிவித்ததோ ?

சிந்திப்பின்
விளைவாக உள்ளத்தில்
கருத்தரிக்கும் எண்ணங்கள்
காகிதத்தின் வழியாக
கவிதையென வழிந்தோட . . .

சந்திப்பின்
கணங்களின் கனமது
உள்ளத்தில் சுமையாக
உருத்திக் கொண்டே
உருண்டோடும் வேளையில் . . .

முந்தையொரு
காலத்தில் வடித்த
கோலங்களின் வர்ணங்கள்
கரைந்தோடி விழுமொரு
அகங்கோலச் சித்திரமாய் . . .

விந்தையிந்த
உலகத்தின் கோடியில்
எந்தையீந்த விந்தொன்று
எந்தாயில் உருவாகி
நானாக முகிழ்த்த்தொன்று . . .

சந்தையிந்த
சமுதாயக் கூடத்தில்
யுத்தமிகு உலகொன்றில்
சத்தமில்லாக் கூட்டமொன்று
மொத்தமாக மடியும் போதில் . . .

பந்தொன்று
சுவற்றில் மோதி
திரும்பித் தாக்கும்வகை
செய்யும்வினை விளைவுகள்
சுற்றியெமை பின்னுகையில் . . .

பிந்தியிந்த
வாழ்வின் உண்மைகள்
சொல்லித்தரும் பாடமெலாம்
கல்லில் எழுதிவிட்டதொரு
அனுபவப் பாடமாய் . . .

வெந்ததொரு
காயின் சுவைபோல
நொந்தபல நிகழ்வுகள்
ஊட்டிவிட்ட ஞானமின்று
என்னையெனக்கு அறிவித்ததோ ?

சக்தி சக்திதாசன்

Friday, January 05, 2024

நினைவுகள் எனும் சங்கீதம்

நினைவுகள் எனும் சங்கீதம்
நித்தமும் தரும் ஆனந்தம்
திகட்டிடும் சுவையெனத் தமிழ்
தீட்டிடும் கவிதையில் மிளிரும்

தவழ்ந்த என் தாய்மண்ணை
பிரிந்தொரு பொழுதில் விண்ணில்
மிதந்தொரு புலம் பெயர்ந்தாலும்
சிந்தையில் சுரந்திடும் தமிழாய்

படித்திட்டதால் வந்தது அல்லவே
வடித்திடும் கவிதைகள் என்னுள்
செதுக்கிட்ட கவியரசர் தமிழென்னை
நிறைத்திட்ட வகையன்றி வேறில்லை

விடிகின்ற பொழுதெல்லாம் நெஞ்சில்
தெரிகின்ற உள்ளத்து உணர்வுகள்
தருகின்ற வெள்ளமாய் நிறைவதால்
வடிகின்ற வரிகளென் கவிதைகள்

சுந்தரத் தமிழின் வனப்பினால்
சொக்கிடும் நெஞ்சம் கொண்டதால்
நித்தமும் சுரந்திடும் கவிதைகள்
நிகழ்த்திடும் யுத்தத்தின் சத்தமே !

சக்தி சக்திதாசன்

Tuesday, January 02, 2024

எண்ணங்கள் ஆயிரம்

வருடம் முடியும் நாள்.ஆம் 2023 டிசம்பர் மாதம் 31ம் நாள்.

காலண்டரில் திகதியைக் கிழித்துப் போட்டேன்.

புதியதோர் கட்டையை காலண்டர் அட்டையில் மாட்டினேன்.

அக்கலண்டர் அட்டையை எனது வாழ்விற்கு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

இலகுவாக அந்தக் காலண்டர் அட்டை டிசம்பர் 31ஜ இழந்து விட்டு புதிய வருடத்திற்கான கட்டையைத் தாங்கிக் கொண்டு கம்பீரமாகத் தொங்கியது.

ஆனால் நான் ?

அக்கலண்டர் தாளை இலகுவாகக் கிழித்து கடந்த வருடத்தைக் கலைத்து விட்டதைப் போல அந்த வருடம் கொடுத்த நிகழ்வுகளின் மகிழ்வுகளையும், இடர்களையும் இலகுவாகக் களைந்து விட முடிகிறதா ?

இல்லையே ! 

அதுதான் மனித வாழ்க்கை. 

எமது கைகளில் இல்லாத எம்மை மீறிய காரணிகளினால் எமக்கு நிகழ்த்தப்படும் நிகழ்வுகளின் தாக்கங்கள் உள்ளத்தில் பல வடுக்களை பல மகிழ்வான நினைவுகளை அழியாமல் தக்க வைத்து விடுகிறது.

அதற்காக அவற்றின் நினைவுச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டு மன அழுதத்தினுள் எம்மைப் பிணைத்துக் கொள்வது சரியான தீர்வாகுமா ?

மனிதன் போடும் கணக்கொன்று ஆனால் அவனுக்கும் மேலே அனைவர்க்கும் பொதுவான சக்தி ஒன்று அவன் போடும் கணக்குகளை மாற்றி வைத்து விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

20 வயதிலே நான் போக நினைத்ததாக நான் எண்ணி போட்ட பாதை வேறு இன்று 
57 வயதிலே நான் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை வேறு.

ஆனால் அந்தப் பாதை மாற்றம் கண்டிராவிடில் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் இம்மனமும் இன்றி இருந்திருக்க வாய்ப்பில்லை.

என் உயிரினும் மேலான என் அன்பு உள்ளங்களின் நேச உணர்வைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. 

ஆயிரமாயிரம் அன்புத் தம்பி தங்கைகளைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. 

நண்பர்களைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. 

அனைத்திற்கும் மேலாக என் இனிய அன்பான குடும்ப உறவுகளை அடைந்திருக்க வாய்ப்பில்லை.

எழுத்து என்னும் இந்த அரிய பணி, 
அன்பு கொண்டோர்களுடன் காகிதத்தில் பேசும் உயரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.

மனிதராகப் பிறந்த னைவருக்கும் இருக்கும் பலவீனம் இடர்களை நினைத்து துன்பத்தில் ஆழ்வதே அன்றி அடைந்த நல்ல முன்னேற்றங்களைக் கண்டு மகிழ்வது அல்ல.

இழந்தைவைகளைக் கண்டு ஏங்குவதே அன்றி அவ்விழப்புக்கள் கொடுத்த அனுபங்களின் செழிப்பை எண்ணி மகிழ்வது அல்ல.

நான் எனது தமிழ்ப்பூங்கா எனும் இணைய இதழை ஆரம்பித்து விளையாட்டாக 

20 வருடங்கள் ஓடி விட்டன.

இந்த 20 வருட கால எழுத்துப் பயணத்தின் அனுபவத் திரட்டல்களாக ஒரு கதம்ப நூல் எனது பத்தாவது நூலாக மணிமேகலை பிரசுரத்தினால் வெளியிடப்படும் நிகழ்வு உள்ளத்தை நிறைக்கிறது.

இந்தப் இருபது வருஇட காலத்தில் ஒருவருடமாவது ஒரு இதழும் வெளிவராத ஒரு நிலை  2013 ஆண்டில் மாற்றம் கண்டது. 

ஆம் கடந்த வருடம் எதேதோ காரணங்களினால் பெப்பிரவரி மாதம் எழுத ஆரம்பித்த இதழ் இன்னும் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
.
எந்த ஒரு செயலுக்குப் பின்னாலும் அனைவர்க்கும் பொதுவான அந்த இறை ஒரு காரணத்தை வைத்திருப்பான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான்.

அதே பாணியில் தமிழ்ப்பூங்கா 2013ல்  ஒரு மாற்றத்தைக் கண்டதற்கும் ஒரு காரணம் இருக்கிறது ஆனால் அது எனக்கு இப்போது புலப்படவில்லை என்பதுவே உண்மை.

ஆனால் அனைத்தையும் அசை போட்டுப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

ஆங்கிலத்தில் " Back to basics “ 
என்று ஒரு பதம் இருக்கிறது. அதாவது ஆரம்ப இழையைத் திரும்பப் பற்றிக் கொள்வது.

அவ்வகையில் நானும் தமிழ்ப்பூங்காவை ஆரம்ப எளிய வடிவமைப்புக்குக் கொண்டு சென்று மீண்டும் இருமாதங்களுக்கொருமுறை ஒரு இதழ் எனும் வகையில் வெளிக்கொணர்வது என்று என்னுள் ஒரு தீர்வு எடுத்தேன்

இனி அது அந்த இறை எனும் பிரபஞ்சத்தின் கையில்

இதை எதற்காக இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் !

என் அன்பு உள்ளங்களே !

தோல்வி என்று எதுவும் இல்லை.
நாம் ஒருவருமே தோற்பதற்காகப் பிறந்தவர்களும் அல்ல.

நாடகமேடையில் காட்சிகள் மாறுவது போல,பாத்திரங்கள் வேறு வடிவங்கள் எடுப்பது சகஜம்.

எமது நிலைப்பாடுகள் மாறலாம்,ஆனால் நாம் மாறுவதில்லை.

மாற்றங்களே வாழ்க்கை.

அதை உள்வாங்க்கிக் கொண்டு அதை எமது முன்னேர்றங்களுக்கு ஏதுவாக மாற்றி மைத்துக் கொள்ளும் பண்பை வளர்த்துக் கொள்வதே அறிவுபூர்வமான செயல்.

நிதமும் ஆயிரம் மாற்றங்களுக்கு உள்ளாகும் ஒரு அகிலத்தில் நாம் அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.

மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு ஜீரணிப்போடு பயணத்தைத் தொடர்வதே எமது பணி.

தோல்விகள் என்று நாம் கருதும் ஒவ்வொன்றும் வெற்றியின் ஆரம்பப்படிகளே !

எம்மை நாமே அசை போட்டுக் கொண்டு இந்த வருடப் பயணத்தை மிகவும் நம்பிக்கையோடு ஆரம்பிப்போம் .

நம்பிக்கையே எமக்கு ஆதாரம்.

அந்த ஆதரத்தின் அடிப்படியில் நான் மீண்டும் உங்களுடன் பேசுவேன்.

 மீண்டும் வரும்வரை
சக்தி சக்திதாசன்