எதைத் தேடுகிறாய் தோழா?
உன்னுள் உறைந்திருக்கும்
உண்மையைத் தேடுகிறாயா ?
ஓ !
அது கசக்குமே என்று நீ
தயங்குவது புரிகிறது தோழா !
கசப்புகளுக்கு பயந்து நீ
எத்தனை காலம் தான்
கலங்கிய நெஞ்சுக்கு
சொந்தக்காரனாய் வாழ்வாய்?
நெஞ்சம் எனும் பற்றைக்குள்
எத்தனை கருமை .....
அதனுள்
ஏற்க முடியாத உண்மைகள்
எரித்துக் கொண்டே உணர்வுகளை ........
அதிர்வுகளின் அழங்களை
அறிய முடியாமல் கவ்விக்கொண்ட
அறியாமை எனும் போர்வை
அரித்துக் கொண்டே இதயத்தை .....
எத்தனை காலம்தான் தோழா ?
எதைத் தேடுகிறாய் தோழா?
நிழலுக்குள் புதைந்து போன
நிஜங்களின் வரலாறையா ?
உண்மைகளை விற்று விட்டு
பொய்களை வாங்கும்
சமுதாயச் சந்தையின்
வியாபாரிகளையா சொல் !
எதைத் தேடுகிறாய் தோழா ?
இதோ விடிகிறது ! இதோ விடிகிறது !
என்று இரவுக்குள் பூட்டி வைத்து
அழகு பார்க்கும் வித்தைக்காரரையா ?
இல்லை , பசப்பு வார்த்தைகளை நம்பி
பகலையே காணாமல் புலம்பும்
படித்த முட்டாள்களையா ?
இல்லாத புதையலொன்றின்
வரைபடத்தைக் காட்டிக் காட்டி
இருக்கின்ற செல்வத்தைச் சுருட்டும்
குருட்டுப் புத்திக்காரரின்
வரட்டு ஜம்பத்தையா ?
சொல்லிவிடு தோழா !
எதைத் தேடுகிறாய் தோழா !
இன்றைய உலகம் விரைவில்
விழிக்கவில்லை யெனில்
நாளைய உலகமென்று ஒன்றைக்
கனவில் கூட நினைக்க முடியாது
சூழலை அழித்து தற்காலிக
சுகத்தினை அனுபவிப்போர்
சாதிக்கப் போவதெல்லாம்
சூனியமான எதிர்கால மொன்றே!
தேடலின் தேவையை மாற்றி
இரவின் கருமைக்குள் இருந்து
வெளிச்சத்தை நோக்கி மக்களை
விழிக்கப் பண்ணும் நேர்மறை
வழிகளைத் தேடிடு தோழா !
எதைத் தேடுகிறாய் தோழா ?
தலைமுறை தலைமுறையாய்
தம் தலைமுறை வாழ்ந்திட எண்ணி
தரணியின் வளத்தினை அழிக்கும்
தன்னல மனிதரின் மனங்களில்
தம்மைத் தாமே அறிந்திடும் கலையை
புரிந்திட வைக்கும் செயல்களின்
பாதையைத் தேடிடு தோழா !
பிரபஞ்சம் எமக்கு ஈந்தவையெல்லாம்
அனைவரும் வாழ்ந்திட வழிகளே !
இயற்கையும் , சூழலும் செல்வங்களென
இதயத்தில் அனைவரும் கொண்டிட
இகத்தினில் நீ ஆற்ற வேண்டிய
பணிகளின் வகைகளைத் தேடு !
வறுமையில் உழன்றிடும் மக்களின்
வாழ்வினை மாற்றி அனைவரும்
கல்வியைப் பெற்று உணர்ந்திட்டால்
மட்டுமே நாளைய உலகம்
நன்றாய் வாழ்ந்திடும் என்பதை
நானிலம் முழுவதும் முழங்கிடும்
வழியினைத் தேடிடு தோழா !
எதைத் தேடுகிறாய் தோழா !
அன்பெனும் பாதையில் உண்மை
ஆன்மீக வாழ்வின் தேவையை
மதங்களைக் கடந்தவொரு
மனங்களின் அடிப்படையில்
வளர்த்திட்டு உண்மை மெய்ஞானத்தைக்
காட்டிடும் விஞ்ஞானத்தைப் போதிக்க
அஞ்சாத மனத்தினை அடைந்திடும்
மார்க்கத்தைத் தேடிடு தோழா !
இன்னும் . . . .
எதைத் தேடுகிறாய் தோழா ?
சக்தி சக்திதாசன்
