சிரிக்கின்ற காலையொன்றில்
சிறகினை விரித்தந்த
சிந்தையெனும் வானிலே
சிறகடிக்கும் பொழுதிதுவோ
பொழுதின் சுகமதனை
பொருத்தமாய் அனுபவிக்க
பொங்குகின்ற உணர்வெடுத்து
பொழிகின்ற கவிதையொன்று
கவிதைகளைக் கருக்கொள்ளும்
கனமான உள்ளமொன்றின்
கருத்துக் குவியல்களிங்கு
கரைபுரண்டு ஓடிடுமோ ?
ஓடுகின்ற காலமென்னும்
ஓசையில்லா நதியதனில்
ஒதுங்குகின்ற சருகாக
ஓரத்திலே ஓரங்கம்
ஓரங்க நாடகத்தில்
ஒருவேடம் புனைந்திங்கு
ஓப்பேற்றும் வாழ்வதனில்
ஓயாமல் அனுபவங்கள்
அனுபவங்கள் தேடியிங்கு
ஆன்மாவின் யாத்திரை
அங்கொன்றும் இங்கொன்றும்
அனைத்துமே அதிசயங்கள்
அதிசயத்தின் வாசலிலே
ஆனந்தக் கணநேரம்
அதையெனக்குத் தருவது
அமைதியான தியானமே !
சக்தி சக்திதாசன்
