கனவுகளின் வழி ஒடி
நினைவுகளின் தடம் தேடி
புனைவுகளின் முடி சூடி
வினைவுகளின் பலன் நாடி
தொலைந்து போன பொழுதொன்று
தொலைத்து விட்ட விதம் கண்டு
மலைத்து நின்ற கணங்கள் உண்டு
நிலைத்திருப்போர் உலகில் என்று
தெளிந்து நிற்கும் ஓடை தன்னில்
நுழைந்து அதனை கலக்கும் வெள்ளம்
இழந்து போகும் அமைதிக் கணத்தை
வளைந்து செல்லும் வாழ்க்கை நதியே
கடந்து போன காலம் தன்னில்
மிதந்து போன நிகழ்வின் சுமைகள்
தவழ்ந்து நெஞ்சில் தந்திடும் உணர்வு
தெளிந்து ஊட்டிடும் அனுபவ ஞானம்
சிற்சில பொழுதுகள் புகட்டிடும்
பற்பல வாழ்க்கையின் புதிய பாடங்கள்
கற்றிட க்கூடிய அகவையில் இல்லை
விற்றிட அது ஓர் விலைபொருள் அல்ல
என்னுள் தேங்கிய உணர்வுகள் தாக்கும்
என்னை எனக்கே காட்டும் நோக்கம்
எனக்காய் காலம் புகட்டிய பாடங்கள்
என்னை நானாய் செதுக்கிய உளிகள்
கண்கள் கண்டவை ஆயிரம் காட்சிகள்
காதில் விழுந்தவை அதுவொரு கோடி
கருத்தில் பதிந்தவை சிற்சில மட்டுமே
கவிதையாய்ப் பகர்வது எத்தனையோ
சொல்லில் வருவது இருப்பதில் பாதி
சொல்ல விளைவது அன்பின் பெருக்கால்
நல்ல தலைமுறை நாளை வளர்ந்திட
மெல்லப் பகர்வேன் எந்தன் வழிதனில்
சக்தி சக்திதாசன்
