Sunday, August 18, 2024

நாமனைவரும் ஒருதாய் மக்களே !

இன்று போகட்டும்
நாளை விடிந்திடும் என்றே
ஆயிரம் கனவுகளோடு
வாழ்வுடன் போராடும்
நலிவுற்ற தோழா !

நீ தேடும் நாளைகள்
நினைக்கும் தூரத்தில் இல்லை
அதைப் பூட்டி  வைத்து
அழகு பார்க்கும், புண்ணியர்கள்
நிறைந்த பூமியடா !

உனது நாளை விடிவதற்கு
உலகம் கொஞ்சம் விழிக்க வேண்டும்
உனது உதிரத்தை
உறிஞ்சி தம்மை வளர்க்கும்
உனது உழைப்பில்
தமது மாளிகைகளை அமைத்து
மகிழும் மாந்தர்.மனதின்
உணர்ச்சிகள் உறுத்தும் வரை
உனது விழிநீர் காயப் போவதில்லை !

உருளும்.இந்தப் பூமிப்பந்து
உனக்கென்றும் எனக்கென்றும்
உருளும் திசையை மாற்றுவதில்லை
உள்ளே உருளும் மானிடர்.மட்டும்
உயர்த்திப்.பிடிக்கும் தன்னலம்
உன்னைத் தாழ்த்தி வைக்கிறது
உனது உள்ளம் விழிப்படையட்டும்
உனது கனவுகளின் மீது
உன் நம்பிக்கைகள்.வலுவடையட்டும்
உன் நாளைகள் நிச்சயம் வெளித்திடும்

கல்வியை உணர்ந்திடு
கற்றிடும் வாழ்வின் அனுபவங்கள்
கற்பிக்கும் நிகரற்ற பாடங்களை
கசடறக் கற்று முன்னேறிடு தோழா !
கடித்துச் சுவைத்து வீசிடும் விதை
கனிவுடன் கூடிய கனிகளை
காலத்தால் ஈயும் விருட்சமாவதில்லையா ?
கைகளில் வலுவும், கால்களில் தெம்பும்
கடைசிவரை கொண்டிட்டால்
காசுனியில் நீ சரித்திரம் ஒன்றைக்
கட்டாயம் படைத்திட முடியும்

விரைந்தே எழுந்திடுவாய் தோழா !
விழிநீரைத் துடைத்திடு காலத்தை
விரயமாக்காமல் புறப்படுவோம்
மாற்றம் நிகழ வேண்டுமானால்
மாற்றமாக நீயே மாறிவிடு என்றார்
சத்தியத்தின் நயகன் காந்தியடிகள்
கைகளைக் கோர்த்துக் கலைந்திடும்
இருளின் காலை வெளிப்பில்
கண்டிடுவோம் ஒரு சுபீட்சமான
எதிர்காலத்தை நம் அனவருக்கும்
ஏன் தெரியுமா என் தோழனே !
நாமனைவரும் ஒருதாய் மக்களே !

சக்தி சக்திதாசன்