Monday, July 22, 2024

இதயத்தின் துடிப்பும் கவிதையே

தமிழின் மடியில் நன்றே
தலைவைத்துத் தூங்கி
தழைத்த கனவில் வந்து
திளைத்த கவிதை தானிது

முளைத்த உணர்ச்சிப் பெருக்கு
முகிழ்த்தே நெஞ்சில் வெடித்து
முழுதாய் மலர்ந்தது என்று
தமிழாய் விரிந்தது இன்று

களைத்த இதயம் கனக்கையில்
கனிந்திடும் தமிழே தாங்குது
கரும்பாய் இனிக்கும் தமிழிது
கன்னித் தமிழின் வனப்பிது

அன்னைத் தமிழின் மடியில்
அன்புத் தமிழாய்த் தவழ்ந்து
இன்பத் தமிழாய் வளர்ந்து
இன்றும் தமிழால் மகிழ்கிறேன்

கதிரவன் கதிராய்ப் படர்ந்து
காலைப் பொழுதாய் விடிந்து
கவிதைப் பொருளாய் மலர்ந்து
கலப்பது எந்தன் தமிழென்பேன்

கருத்தாய்த். திரளும் மேகங்களென
கவிதை மழையாய்ப் பொழிந்திட
காற்றினில் பறந்திடும் சருகென
கணத்தில் மறைவேன் தமிழினுள்

காதலில் பிறந்த கவித்துவம்
கற்றதோ வாழ்வெனும் அனுபவம்
கலந்தே இன்றென்னை இயக்குது
காலையும் மாலையும் இனிக்குது

விழுந்தேன் தமிழன்னை மடியில்
வலர்ந்தேன்  வாலிபத் திமிரினில்
உணர்ந்தேன் வாழ்வெனும் நாடகம்
உண்மையே உலகின் ஆன்மீகம்

காலைகள் புலர்வதும் கவிதையில்
மாலைகள் புதைவதும் கவிதையில்
இடையினில் வாழ்வதும் கவிதையாய்
இதயத்தின் துடிப்பும் கவிதையே


சக்தி சக்திதாசன்