எத்தனையோ எழுதுகிறேன்
ஏதேதோ மொழிகின்றேன்
அத்தனையும் எதற்காக
மொத்தமாக எனக்காக
சித்தமெல்லாம் தமிழாக
சத்தமில்லா வரைஞனாக
புதுமையான பித்தனாக
புதுக்கவிதை புனைகின்றேன்
எழுத்தென்னும் வனத்தினிலே
எப்போதும் தொலைவதுண்டு
எனைக்காக்கும் கவசமாக
எழுத்துக்களே திகழ்வதுண்டு
எழுதாத பொழுதுகளெல்லாம்
விடியாத இரவுகளெனக்கு
முடியாத கவிதைகளென்றும்
வடியாத துயரக்கணங்கள்
உள்ளத்திலே பொங்குகின்ற
வெள்ளமாய்த் தமிழேகும்
கனமான மழைபோல
கரைந்தோடும் தமிழாக
பள்ளியிலே கற்றதல்ல
பட்டமேதும் பெற்றதல்ல
கலைவாணி ஆணையிட
கரைபுரளும் கவிதைகளாய்
பெற்றோர்கள் முன்னிலையில்
பெறவில்லை இப்பேறு
அற்றைநாள் அனுபவங்கள்
ஆறாகப் பெருகுதிப்போ
தமிழாகிப் புனைகின்றேன்
தமிழோடு நனைகின்றேன்
தணலாகிப் போகையிலே
தமிழாகப் புகைந்திருப்பேன்
சக்தி சக்திதாசன்
