என்னை மறந்து நான் கொஞ்ச நேரம் !
உள்ளத்தின் ஓசைகள்
நினைவுகளின் வாசமாக
நெஞ்சத்து விம்மல்கள்
நேசத்தின் கோஷமாக
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம் ......
காற்றிலேறி தவழ்ந்து
பச்சிலைகளோடு உரசிக்
காணும் மென்மையான
உணர்வுகளில் அமிழ்ந்து
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம் .....
கரைந்திடும் அந்தக்
கார்முகில் மேகமாக
கலைந்து சென்றே
பொட்டுப் பொட்டென
பொழியும் மழையாகி
கிளப்பும் அந்த
மண்வாசத்தை சுவாசித்துக்
கொண்டே
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம்......
மலையிலே பிரசவித்து
மண்மீது மெதுவாக
மழலைபோல தவழ்ந்து
வரும் நதிமீது
விழும் சருகாகி
நயமாக மிதந்தோடி
ஏழை பசிபோக்கும்
வயல்மீது பாயும்
நீராகி மண்ணோடு
கலந்து
என்னை மறந்து
நான் கொஞ்ச நேரம் ......
அன்புடன்
சக்தி சக்திதாசன்
