Monday, August 14, 2006

நெஞ்சம் பொறுக்குதில்லையே !

தாய்மண்ணில் விளைந்த
தமிழ்த் தளிர்களே !
தீந்தமிழின் வருங்காலத்தலைவர்களே !
தமிழராய் ஈழத்தில்
தவழ்ந்தது அன்றித்
தவறென்ன செய்தீர் ?

ஜயகோ !
பாவிகள் இன்று

பறித்தனரே பரிதாபமாய் எம்மிளஞ்சிட்டுக்களின்
பவித்திரமான உயிர்களை ....

தாலாட்டிச் சீராட்டி
தாய், தந்தை கனவுகளைத்
தரணியில் வாழவைக்க
தங்கங்களே நீங்கள்
தாகத்தோடு காத்திருக்க ...

உரிமைகள் இல்லாவிட்டாலும்
உயர்த்துவோம் அறிவை என்று
ஊக்கமாய் அறிவுப்பசியைத் தணிக்க
முனைந்த என் பச்சைக்கிளிகளே....

உங்களையா அழித்தார்கள்
உன்மத்தம் கொண்ட வெறியர்கள் ?
வெடிகுண்டுச் சத்தங்களின் மத்தியிலும்
வெறுமையான வாழ்க்கையின்
வேதனைகளுக்கிடையிலும்
வீரமாக தாய்த்திருமண்னிலே
விளையாடிய எங்கள் செல்வங்களே !

இனத்துவேஷம் கொண்ட
ஈனத்துரோகிகள்
இன்றுமை இப்படி
இல்லையென்றாக்கினரோ ?
இதயம் கொதிக்கின்றதே ....
இரத்தம் வடிகின்றதே .....

தமிழன்னையின் கண்ணீர்
தரையில் ஆறாக ஒடுகின்றது
தளிர்களின் குருதி அம்மண்ணில்
புனலாய்ப் பாய்கின்றது
கலங்காதீர் வாரிசுகளே
உங்களின் கூட்டிலிருந்து
உயிர்ப்பறவைகள் பறந்தன....

அவை சுவாசிக்கும் காற்று
சுதந்திரக் காற்றே....
உங்கள் சமாதிகளில்
உயிர்கொள்ளும் மலர்கள்
உருவாக்கும் தோட்டம் - இனி
சுதந்திர பூமியிலேயே மலரும்
இது நிச்சயம் ....

கண்ணீருடன்
சக்தி சக்திதாசன்

No comments: