Sunday, August 27, 2006

காதற்சோலையில் கனவெனும் தென்றல்

காதற் சோலையில் கனவெனும் தென்றல்

கண்களில் ஊஞ்சலாடும்
கனவுகள் பறந்து சென்று
காதற் சோலையிலே
கனிந்த தென்றலானதோ.

சின்னச் சின்ன பூக்களின்
சித்திரமான இதழ்களினால்
செவ்வண்ண இதழ்களை
செந்தாமரை சேர்த்தாயோ .....

அந்தி மஞ்சள் நிறம்
அலங்கரிக்கும் முகம்
வான்வெளி மின்னலது
வனிதையவள் புன்சிரிப்பு ......

மழைத்துளி மண்ணில்
மழையாகி மணக்கும்
இயற்கையதன் செழிப்பு
இளையவளின் வனப்பு ....

கொஞ்சமாய் நாணம்
கோலமிடும் வண்ணம்
கோதையவள் கீதம்
கொலுசுகளின் நாதம் ....

நீயில்லா நேற்று
நிலவில்லா வானம் - உன்
நினைவில்லா நெஞ்சம்
நீரில்லாத் தடாகம்

காதற் சோலையிலே
கனவெனும் தென்றலிலே
கலந்தவொரு சுகந்தமாய்
காற்றினிலே கீதமாய் ....

மங்கையுன் கனவுகள்
மூடிய விழிகளில்..
ஏனோ நெருங்கிய
போதெல்லாம் நீ
வெறும் நினைவுகள்....

அன்புடன்
சக்தி சக்திதாசன்

No comments: