Monday, August 14, 2006

தமிழ்! தமிழ்! தமிழ்!

துள்ளி நான் புவியில்
துளிர்த்த நாள் முதலாய்
எழுந்த மோகமிது

பள்ளி படித்த வேளையிலும்
தமிழ் நினைத்து வேகும்
மொழியின் தாகமிது

தள்ளி வைத்து போகும்படி
தனிவிதி சொன்ன போதும்
தாளாது வளர்ந்த பாசமிது

எள்ளிப் பகைவர் நகைத்தாலும்
என்றும் தணியாத தாகமிது
எந்தன் மொழிமீது கொண்ட மோகமது

முள்ளி ல்கட்டியெனை வதைத்தாலும்
முற்றத்தில் பணத்தை யிறைத்தாலும்
முடியாது யாராலும் மூடிவிட இத்தீயை

கிள்ளி பார்க்கும் உணர்வல்ல
உதிரத்தில் உறைந்த நிறமிது
உயிரோடு கலந்த தமிழிது

கள்ளி யவள் மீது கொண்ட
காதல் சொல்லிக் கவிபாடும் போதும்
நல்ல தமிழ் வந்து மோதும்

புள்ளி போல நான் மறைந்து
தொலைதூரம் போனாலும்
தமிழ் மெல்லினக் குற்றாவேன்

சொல்லி நான் முடிக்கும் வேளை
தமிழ் அன்னை அடிபணிந்து
தமிழ் தமிழ் தமிழெனச் சுவாசிப்பேன்


அன்புடன்
சக்தி சக்திதாசன்

2 comments:

Jazeela said...

தமிழே உங்கள் உறவா? எல்லா தமிழர்களும் உங்க உறவுதான். யாதும் ஊரே யாவரும் கேளிர் மாதிரி யாதும் தமிழ் தமிழரெல்லாம் கேளிர் என்று அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உமா said...

தமிழமுதம் ஒரு துளி பருகினாலும் உயிர் வளர்க்கும். தமிழின் சக்தி இது.தமிழ் கடலில் கால் நனைத்தால் முத்து குளிக்க நினைக்கும் மூர்க்கம் வரும்.
"தமிழ் எங்கள் இளமைக்கு பால்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்றத் தீ"

முத்தெடுத்த மூத்தவனின் சத்தியமானச் சொல்.
தமிழின் சுவைக்கூட்ட தங்கள் கவிதைகள் தேனாகட்டும்.
வணக்கங்கள்.