Monday, August 14, 2006

தமிழ்! தமிழ்! தமிழ்!

துள்ளி நான் புவியில்
துளிர்த்த நாள் முதலாய்
எழுந்த மோகமிது

பள்ளி படித்த வேளையிலும்
தமிழ் நினைத்து வேகும்
மொழியின் தாகமிது

தள்ளி வைத்து போகும்படி
தனிவிதி சொன்ன போதும்
தாளாது வளர்ந்த பாசமிது

எள்ளிப் பகைவர் நகைத்தாலும்
என்றும் தணியாத தாகமிது
எந்தன் மொழிமீது கொண்ட மோகமது

முள்ளி ல்கட்டியெனை வதைத்தாலும்
முற்றத்தில் பணத்தை யிறைத்தாலும்
முடியாது யாராலும் மூடிவிட இத்தீயை

கிள்ளி பார்க்கும் உணர்வல்ல
உதிரத்தில் உறைந்த நிறமிது
உயிரோடு கலந்த தமிழிது

கள்ளி யவள் மீது கொண்ட
காதல் சொல்லிக் கவிபாடும் போதும்
நல்ல தமிழ் வந்து மோதும்

புள்ளி போல நான் மறைந்து
தொலைதூரம் போனாலும்
தமிழ் மெல்லினக் குற்றாவேன்

சொல்லி நான் முடிக்கும் வேளை
தமிழ் அன்னை அடிபணிந்து
தமிழ் தமிழ் தமிழெனச் சுவாசிப்பேன்


அன்புடன்
சக்தி சக்திதாசன்