Monday, March 31, 2025

நதியாய் வாழ்ந்திடுவோம்

மலையிலே பிறந்த ஊற்று
மடை திறந்த வெள்ளமாய்
மணற்படுகை வழியோடி
மகிழ்ந்தோடும் நதியாக
மனம்மகிழ்ந்து துள்ளியாடும்
மீன்கள் அதில் விளையாடும்

கரையோரம் வளர்ந்திருக்கும்
காட்சிநிறை பசுமைதனை
நீரூற்றி செழிப்பாக்கி
நிலமெலாம் ஈரம் விதைத்து
வளைந்தோடும் வழிசமைத்து
விரைந்தோடும் நதிமங்கை

பாறைகளில் பட்டுத் தெளித்து
பன்னீர் புஷ்பங்களாய் மலர்ந்து
தவித்திருக்கும் மக்கள் மகிழ்ந்திட
தாகம் தீர்த்து பயணிக்கும்
ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்
அந்தஸ்து பார்க்காத அன்புப் புனல்

இயற்கையன்னை வரமன்றோ
இறையருளின் கொடையன்றோ
யார் கேட்டு யார் கொடுத்தார் ?
ஊர் வாழ்ந்திட ஊற்றாய் உருவாகி
இடையறாத வேகத்துடன் ஓடும்
இன்பமூலம் அந்த நதியென்பேனோ ?

ஓடுகின்ற நதிமகளின் பயணம்
தேடுமொரு ஆழியை ஆறாமல்
வழியல்லாம் பல உயிர்களை
வாழவைத்து அந்நதி தொடரும்
வாழ்வெமக்கு இனிக்க வேண்டுமெனில்
வாழவேண்டும் அந்நதியைப் போல

சக்தி சக்திதாசன்


Wednesday, March 12, 2025

கண்களின் ஓரத்திலே

கண்களின் ஓரத்திலே
கனவினைத் தவழவிட்டு
காலத்தின் சுழற்சியிலே
கலைத்திடும் விதமொன்று

ஞாலத்தின் மையத்தில்
கோலத்தின் மாற்றத்தின்
ஆழத்தின் தாக்கத்தால்
மூலத்தின் தேடலொன்று

நீலத்தைத் தொலைத்து
நிற்குமந்த வானத்தின்
நிலைகுலைந்த தோற்றமாய்
நிதர்சனத்தின் விளக்கங்கள்

நாண்பூட்டிய வில்லொன்றின்
வேகத்தின் ஆற்றலைப்போல்
விவேகத்தின் கூர்மையினால்
விலையாகிய வாதங்கள்

ஒன்றென்றும் இரண்டென்றும்
ஒவ்வொன்றும் தொடர்ந்திடும்
ஒன்றல்ல இரண்டல்லவே
ஓராயிரம் கருத்தாடல்கள்

வந்திங்கு பிறந்ததுவும்
வாசலது மூடிடுமே
வாழ்க்கையில் கடைசிவரை
வருவதெல்லாம் அனுபவமே !

அடைந்தகரை ஓரத்திலே
ஆனந்தநிலை சயனத்திலே
அமைதிசூழ் கணத்தினிலே
ஆன்மாவின் சங்கீதம்

சக்தி சக்திதாசன்



Thursday, March 06, 2025

காணாத பொழுதொன்றில்

காணாத பொழுதொன்றில்
தேடாத காட்சிகளாய்
மூடாத விழிகளுக்குள்
முடியாத தொடரலைகள்

தனக்குள்ளே விதைத்திட்ட
தானறியா வேதங்கள்
தானாகப் புலருகின்ற
தத்துவப் பொழுதிதுவோ ?

விளக்கமில்லா சாத்திரங்கள்
விளங்கிட வேளையில்லை
விவேகத்தின் வேட்கையால்
விலக்கியிங்கு ஓடுகிறோம்

புரியாத காரணத்தால்
புரட்சியெனும் பெயர்சூட்டி
புலம்பியோடிய வாலிபத்தில்
குழம்பிப்போன மெய்ப்பொருள்

சலனமில்லா பொழுதைத்தேடி
சத்தியத்தின் பயணமென்று
சிந்தனையின் சிதறலினால்
சிதைந்துபோன கணங்கள்

முடிந்துபோன நேற்றைகளும்
முளக்கப்போகும் நாளைகளும்
சுமைகளன்றி எதுவுமில்லை
சுவைக்காவிட்டால் இன்றைகளை

சுவரில்பட்டு திரும்பிவரும்
சீறிவரும் பந்துபோல
சுவைக்காத அனுபவங்களுக்காய்
சுழன்றுவரும் ஆன்மாவும்

அடைகின்ற அத்தனையும்
ஆன்மாவின் ஆசைகளே
அனுபவத்தின் உச்சத்தில்
ஆன்மீகக் கொடியுயரும்

சக்தி சக்திதாசன்