Wednesday, May 29, 2024

சில்லென்று சிலிர்த்திடும்

சில்லென்று இதயத்தில்
சிலிர்க்கின்ற உணர்வூட்டம்
மெல்லினிய காலையதில்
சொல்லோடு விளையாட்டு

நெஞ்சமதில் பாட்டொன்று
நினைவினில் நீந்திடும்
பொழிகின்ற மழையாக
வழிகின்ற ஞாபகங்கள்

சுரக்கின்ற வரிகளினுள்
சுவைக்கின்ற இனிமை
சுளைகளாய்த் திறக்கும்
சுகமான அனுபவங்கள்

பட்டொளிக்கும் ஒளியாய்
பகலவனின் கதிர்கள்
சுட்டெரிக்கும் போதிலும்
சுகமாகத் தோன்றும்

முட்களிடை சிரிக்கும்
முத்தான ரோஜாவின்
முழுதான அழகிதழ்கள்
முகத்தோடு மோதும்

விட்டகலும் மனதின்
வினையான சுமைகள்
தொட்டுவிடும் தூரமதில்
தொடுவானம் தெரியும்

எட்டிவிட எட்டிவிட
ஏதேதோ தூண்டும்
முட்டிவிடும் போதங்கு
முத்தமிழும் கூடும்

ஆனந்தம் தானிங்கு
ஆரம்பம் ஆகும்
அருவிபோல ஓடும்
ஆழ்மனதின் ஊற்று

கண்திறந்த வேளையில்
கவிசெய்ய ஏங்கும்
கண்மூடும் தாலாட்டாய்
கவிதைதானே பெருகும்

கலைவாணி கட்டளையால்
கருவொன்று முகிழ்க்கும்
கவிமாலை சாத்தியதால்
களிப்படையும் உள்ளம்

வாழ்ந்திடும் காலமெல்லாம்
வரைந்திடுவேன் கவிதைகள்
சாய்ந்திடும் போதுமெந்தன்
சாய்மனையே கவிதைதானே !

சக்தி சக்திதாசன்

உனக்குள் ஒரு உலகம்

உனக்குள் ஒரு உலகம்
உறங்கிக் கொண்டிருக்கிறது
விழித்துக் கொண்டால் இங்கே
விடியல் பிறக்கும் தம்பி

கண்களின் முன்னே தெரிவது
கற்சுவரல்ல தம்பி கதவுதான்
மனதில் உறுதி கொண்டு நீ
முயற்சி செய்தால் பாதை தெரியும்

பாதியில் முடியும் பயணமல்ல‌
பாரினில் உந்தன் வாழ்க்கை தம்பி
பராரியின் வாழ்க்கையை உயர்த்திட‌
பாதைகள் நீ வகுத்திடனும்

கண்களில் நீரோடு வாழ்வு தேடி
காத்திருக்கும் தங்கைகள் வாழ்வு
காலத்தோடு மலர்ந்திட நீயும்
காரியங்கள் பல ஆற்றிட வேண்டும்

பொறுத்திடும் காலம் போய்விட்டது
பொங்கிடும் காலம் புகுந்திட்டது
புனிதமான பணிகளை நீயும்
புரிந்துணர்வுடன் ஆற்றிட வேண்டும்

சமத்துவம் என்றொரு வார்த்தை
சரித்திரமாகிட வேண்டுமெனில்
சகோதரர்  நீவீர்  உண்மையுடன்
சமுதாயம் தன்னை உயர்த்திடனும்

கற்றிடத் துடித்திடும் பாலகர் பலர்
காசில்லா வர்க்கமாய் தவித்திடுவதை
கண்ணுறும் நாளைய தலைமுறை
கைகளை உயர்த்தி செயற்படனும்

நாட்டினை உயர்த்திட உழைத்திட்ட‌
நேற்றைய முதியவர் வாழ்ந்திட‌
இன்றைய இளைஞர் திட்டங்களை
நாளைய மனதுடன் தீட்டிடனும்

அரசியல் என்பது மக்களுக்காக‌
மக்கள் வாழ்வது அரசியலுக்காக அல்ல‌
தலைவர்கள் புரிந்திட்டு நடைமுறையில்
தரத்தினை உயர்த்திட முயன்றிடனும்

உனக்குள் உறங்கும் உலகத்தினை
உணர்வெனும் விசையுடன் உருட்டிடு
உதயம் ஆகிடும் புதிய உலகம்
உரைத்திடு  இதையே  உறவுகளிடம்

 சக்தி சக்திதாசன்

Sunday, May 12, 2024

தமிழாகப் புகைந்திருப்பேன்

எத்தனையோ எழுதுகிறேன்
ஏதேதோ மொழிகின்றேன்
அத்தனையும் எதற்காக
மொத்தமாக எனக்காக

சித்தமெல்லாம் தமிழாக
சத்தமில்லா வரைஞனாக
புதுமையான பித்தனாக
புதுக்கவிதை புனைகின்றேன்

எழுத்தென்னும் வனத்தினிலே
எப்போதும் தொலைவதுண்டு
எனைக்காக்கும் கவசமாக
எழுத்துக்களே திகழ்வதுண்டு

எழுதாத பொழுதுகளெல்லாம்
விடியாத இரவுகளெனக்கு
முடியாத கவிதைகளென்றும்
வடியாத துயரக்கணங்கள்

உள்ளத்திலே பொங்குகின்ற
வெள்ளமாய்த் தமிழேகும்
கனமான மழைபோல
கரைந்தோடும் தமிழாக

பள்ளியிலே கற்றதல்ல
பட்டமேதும் பெற்றதல்ல
கலைவாணி ஆணையிட
கரைபுரளும் கவிதைகளாய்

பெற்றோர்கள் முன்னிலையில்
பெறவில்லை இப்பேறு
அற்றைநாள் அனுபவங்கள்
ஆறாகப் பெருகுதிப்போ

தமிழாகிப் புனைகின்றேன்
தமிழோடு நனைகின்றேன்
தணலாகிப் போகையிலே
தமிழாகப் புகைந்திருப்பேன்

சக்தி சக்திதாசன்

Saturday, May 11, 2024

அமைதியான தியானமே !

சிரிக்கின்ற காலையொன்றில்
சிறகினை விரித்தந்த
சிந்தையெனும் வானிலே
சிறகடிக்கும் பொழுதிதுவோ

பொழுதின் சுகமதனை
பொருத்தமாய் அனுபவிக்க
பொங்குகின்ற உணர்வெடுத்து
பொழிகின்ற கவிதையொன்று

கவிதைகளைக் கருக்கொள்ளும்
கனமான உள்ளமொன்றின்
கருத்துக் குவியல்களிங்கு
கரைபுரண்டு ஓடிடுமோ ?

ஓடுகின்ற காலமென்னும்
ஓசையில்லா நதியதனில்
ஒதுங்குகின்ற சருகாக
ஓரத்திலே ஓரங்கம்

ஓரங்க நாடகத்தில்
ஒருவேடம் புனைந்திங்கு
ஓப்பேற்றும் வாழ்வதனில்
ஓயாமல் அனுபவங்கள்

அனுபவங்கள் தேடியிங்கு
ஆன்மாவின் யாத்திரை
அங்கொன்றும் இங்கொன்றும்
அனைத்துமே அதிசயங்கள்

அதிசயத்தின் வாசலிலே
ஆனந்தக் கணநேரம்
அதையெனக்குத் தருவது
அமைதியான தியானமே !

சக்தி சக்திதாசன்