சில்லென்று இதயத்தில்
சிலிர்க்கின்ற உணர்வூட்டம்
மெல்லினிய காலையதில்
சொல்லோடு விளையாட்டு
நெஞ்சமதில் பாட்டொன்று
நினைவினில் நீந்திடும்
பொழிகின்ற மழையாக
வழிகின்ற ஞாபகங்கள்
சுரக்கின்ற வரிகளினுள்
சுவைக்கின்ற இனிமை
சுளைகளாய்த் திறக்கும்
சுகமான அனுபவங்கள்
பட்டொளிக்கும் ஒளியாய்
பகலவனின் கதிர்கள்
சுட்டெரிக்கும் போதிலும்
சுகமாகத் தோன்றும்
முட்களிடை சிரிக்கும்
முத்தான ரோஜாவின்
முழுதான அழகிதழ்கள்
முகத்தோடு மோதும்
விட்டகலும் மனதின்
வினையான சுமைகள்
தொட்டுவிடும் தூரமதில்
தொடுவானம் தெரியும்
எட்டிவிட எட்டிவிட
ஏதேதோ தூண்டும்
முட்டிவிடும் போதங்கு
முத்தமிழும் கூடும்
ஆனந்தம் தானிங்கு
ஆரம்பம் ஆகும்
அருவிபோல ஓடும்
ஆழ்மனதின் ஊற்று
கண்திறந்த வேளையில்
கவிசெய்ய ஏங்கும்
கண்மூடும் தாலாட்டாய்
கவிதைதானே பெருகும்
கலைவாணி கட்டளையால்
கருவொன்று முகிழ்க்கும்
கவிமாலை சாத்தியதால்
களிப்படையும் உள்ளம்
வாழ்ந்திடும் காலமெல்லாம்
வரைந்திடுவேன் கவிதைகள்
சாய்ந்திடும் போதுமெந்தன்
சாய்மனையே கவிதைதானே !
சக்தி சக்திதாசன்
